மஹிந்தவின் உருவத்தை பயன்படுத்த, சுதந்திர கட்சிக்கு உரிமையில்லை
நடைபெறவுள்ள உள்ளுராட்சி மன்றத் தேர்தலில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் உருவத்தைப் பயன்படுத்தும் உரிமை கூட்டு எதிரணிக்கே உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், அதனுடன் தொடர்புடைய ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவுக்கும் இந்த உரிமை இருப்பதாக கூட்டு எதிரணியின் ஏற்பாட்டாளர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார்.
தற்போதைய தேசத்துரோக ஆட்சியில் உள்ள ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் வேட்பாளர்களுக்கு மஹிந்தவின் உருவத்தை பயன்படுத்துவதுக்கு எவ்வித உரிமையும் இல்லையென அவர் குறிப்பிட்டுள்ளார்.
மினுவாங்கொட- பத்தடுவன பிரதேசத்தில் பொதுஜன பெரமுனவின் கட்சி அலுவலகத்தை திறந்து வைத்து உரையாற்றும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
“ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் வேட்பாளர்கள் மஹிந்தவின் புகைப்படத்தை பயன்படுத்தியே வாக்கு கேட்கின்றனர். சுயேட்சையாக கேட்பவர்களும்,கட்சி ரீதியாக கேட்பவர்களும் மஹிந்தவின் படத்தை ஒட்டியே வாக்கை கேட்கின்றனர்.இதிலிருந்தே மக்களின் அபிப்ராயம் என்னவென்று புரிகின்றது.கட்சியின் தலைவருடைய புகைப்படத்துடன் வாக்கு கேட்டால் கட்டுப்பணமும் கிடைக்காது என பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார்
Post a Comment