Header Ads



சிறுவனைக் காணவில்லை

ஏறாவூர் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட தக்வா நகர்இ தாமரைக்கேணியைச் சேர்ந்த 16 வயதான ஆப்தீன் முகம்மது அப்ரீன் என்ற சிறுவன் காணாமல் போயுள்ளாரென   ஏறாவூர் பொலிஸ் நிலையத்தில் திங்கட்கிழமை முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதாக  பொலிஸார் தெரிவித்தனர்.

சிறுவனின் தந்தையான அலியார் ஆப்தீன் (வயது 41 ) என்பவரே மேற்படி முறைப்பாட்டைச் செய்துள்ளார்.

இது பற்றி தந்தை ஆப்தீன் குறிப்பிடுகையில்

“குடும்பத்தில் மூன்றாவது பிள்ளையான இவர் ஆரம்பத்தில் தாமரைக்கேணி ஸாஹிர்மௌலானா வித்தயாலயத்தில் கல்வி கற்றுக் கொண்டிருந்தார்.

“பாடசாலைக் கல்வியில் ஆர்வம் குன்றியிருந்த நிலையில் மார்க்கக் கல்வி கற்கும் உத்தேசத்தில் கல்முனை கடற்கரைப் பகுதியிலுள்ள ஜாமியா மஹ்பூழ் ஹிதாயா அறபிக் கல்லூரியில் சேர்ப்பிக்கப்பட்டார் அங்கு கடந்த 3 வருடங்களாக அல்குர் ஆன் ஓதற்பயிற்சி வகுப்புகளில் பங்குபற்றி வந்தார்.

“இவ்வேளையில்இ கடந்த வருடம் (2016) செப்டெம்பர் மாதமளவில் தனக்கு மத்ரசாவிலும் கற்க முடியாது எனக்கூறிவிட்டு வீட்டுக்கு வந்து சேர்ந்தவர் வீணே காலங் கழித்துக் கொண்டிருந்தார்.

“எனினும் கூடாத நண்பர்களின் சகவாசம் அவதானிக்கப்பட்டதால் சீர்திருத்திக் கொள்வதற்காக ஏறாவூர் ஸுபி மன்ஸில் மார்க்கக் கல்வி நிலையத்தில் சேர்ப்பித்தேன்.

“ஆனால் அவருக்கு அங்கும் மார்க்கக் கற்பதில் ஆர்வம் இருக்கவில்லை. ஒழுக்க நடைமுறைகளைப் பின்பற்றுமாறும் இல்லையேல் பொலிஸார் மூலமாக சிறுவர் சீர் திருத்தப் பள்ளியில் சேர்ப்பிப்பேன் என்றும் பலமுறை எச்சரித்தேன்.

“இந்நிலையில் இவர் கடந்த சில வாரங்களாகக் காணாமல் போயுள்ளார்.

“இளைஞனின் தாய் குடும்பப் பொருளாதாரக் கஷ்ட நிலை காரணமாக குவைத் நாட்டில் வீட்டுப் பணிப்பெண்ணாக வேலை செய்கின்றார். நான் மர ஆலையில் கூலித் தொழில் செய்கின்றேன்” என்றார்.

இளைஞன் காணாமல்போன சம்பவம்பற்றி தாம் பல கோணங்களில் விசாரணைகளில் ஈடுபட்டுள்ளதாக ஏறாவூர் பொலிஸார் தெரிவித்தனர்.

No comments

Powered by Blogger.