மகனைத் திருத்த, உயிரைவிட்ட தாய் - பிங்கிரியவில் சோகம்
பாடசாலைக்கு செல்லாத மகனை நல்வழிப்படுத்தும் நோக்கில் தாய் ஒருவர் எடுத்த முடிவு, அவரது உயிரைப் பறித்த சம்பவம் பிங்கிரிய பிரதேசத்தில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
பாடசாலைக்கு செல்லாது இருக்கும் தனது மகனை அச்சுறுத்தும் நோக்கில் பொய்யாக உடலுக்கு தீ மூட்டிக் கொள்வதாக பாசாங்கு செய்த தாய் உடல் கருகி உயிரிழந்துள்ளார்.
தனது ஒரே மகனை திருத்தும் நோக்கில் தாய் மண்ணெண்ணையை உடலில் ஊற்றிக் கொண்டு தற்கொலை செய்து கொள்ளப் போவதாக தீ குச்சியை பற்ற வைத்து எச்சரிக்கை விடுத்த போது தவறுதலாக உடலில் தீ பற்றி உடல் முழுவதும் கருகி பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.
பனாவ - போவத்தவத்த பகுதியைச் சேர்ந்த 58 வயதான ஜயசிங்க காஞ்சன மாலாகே கமலாவதி என்னும் பெண்ணே சம்பவத்தில் உயிரிழந்துள்ளார்.
மனைவிக்கும் மகனுக்கும் இடையில் அடிக்கடி சண்டைகள் இடம்பெற்று வருவதாகவும் இதன்போது பல தடவைகள் இவ்வாறு தனது மனைவி தற்கொலை செய்வதாக மகனை எச்சரித்துள்ளதாகவும் உயிரிழந்த பெண்ணின் கணவர் தெரிவித்துள்ளார்.
இதற்கு முன்னதாகவும் நஞ்சு அருந்தி, தூக்க மாத்திரை விழுங்கி, மண்ணெண்ணையை ஊற்றிக் கொண்டு தற்கொலை செய்து கொள்வதாக தமது மனைவி மகனை எச்சரித்திருந்தார் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
சம்பவம் இடம்பெற்ற தினமும் இவ்வாறு செய்த போது உண்மையாகவே தீப்பற்றிக் கொண்டது என அவர் தெரிவித்துள்ளார்.
தீயை அனைத்து மருத்துவமனைக்கு எடுத்துச் செல்லும் போது முகம் கருகிவிட்டதா? என மனைவி கேட்டதாகவும், ஏன் இவ்வாறு செய்தீர்கள் என கேட்ட போது, மகனை மிரட்டவே இவ்வாறு செய்தேன் என மனைவி கூறியதாகவும் அவர் மரண விசாரணையின் பொழுது தெரிவித்துள்ளார்.
அதிக தீக்காயங்களுக்கு உள்ளான காரணத்தினால் பிங்கிரிய வைத்தியசாலையிலிருந்து சிலாபம் வைத்தியசாலைக்கு மாற்றப்பட்ட போதிலும் சிகிச்சை பலனின்றி குறித்த பெண் அண்மையில் உயிரிழந்துள்ளார்.
Post a Comment