மார்க் ஸுக்கர்பெர்க் செய்த துரோகமும், பிட்காயின் மூலம் சாதிக்கும் சகோதரர்களும்..!!
மார்க் ஸுக்கர்பெர்க். ஃபேஸ்புக் நிறுவனருக்கு ஏராளமான சாதனைக்கதைகள் சொந்தம். கூடவே ஒரு மிகப்பெரிய பிராதும் அவர்மீது உண்டு. அது, ஃபேஸ்புக் ஐடியாவை தனது நண்பர்களிடமிருந்து களவாண்டு விட்டார் என்பதே. அந்த நண்பர்கள் இரட்டையர்கள். டைலர் மற்றும் கேமரூன் (Tyler Winklevoss and Cameron Winklevoss) என்ற அந்தச் சகோதரர்கள் இப்போது செய்தியில் இடம்பிடித்திருக்கிறார்கள். காரணம், பிட்காயின்
என்ன செய்தார்கள் இந்த பிரதர்ஸ்?
2013-ம் ஆண்டு தங்களிடமிருந்த 11 மில்லியன் டாலரை பிட்காயினில் முதலீடு செய்திருக்கிறார்கள். இந்திய ரூபாயில் 70 கோடி. இந்த நான்கு வருடங்களில் பிட்காயினின் வளர்ச்சி அசாத்தியமானது. அதனால், இப்போது அவர்கள் பில்லியனர் ஆகிவிட்டார்கள். அவர்கள் முதலீடு செய்த அந்த 11 மில்லியன் 4 ஆண்டுகளில் 1 பில்லியன் ஆகியிருக்கிறது. இந்திய ரூபாயில் 6400 கோடி. கடந்த சில மாதங்களில் மட்டும் பல ஆயிரம் டாலர்கள் முன்னேறி வருகிறது பிட்காயின். ஒரு பிட்காயின் 120 டாலராக இருந்தபோது இவர்கள் அதில் முதலீடு செய்தார்கள். இன்றைய நிலவரப்படி ஒரு பிட்காயினின் விலை கிட்டத்தட்ட 11000 டாலர். 100 மடங்கு, நான்கே ஆண்டுகளில்.
இதுவரை ஒருமுறை கூட பிட்காயினை இவர்கள் விற்றதில்லை. வாங்குவது மட்டுமே இவர்கள் வேலை. 2013-ம் ஆண்டு கணக்குப்படி உலகிலிருந்த பிட்காயின் எண்ணிக்கையில் 1 % இவர்களிடம்தானிருந்தது. பிட்காயின் மூலமாக முதன் முதலில் பில்லியனர் ஆகியிருப்பதும் இவர்கள்தான்.
பிட்காயின்
பிட்காயின்... தெரிந்துகொள்ள வேண்டிய தகவல்கள்
முதலீட்டோடு நிறுத்தாமல் 2015-ல் பிட்காயினுக்காக ஒரு எக்சேஞ்சையும் உருவாக்கினார்கள். தொடர்ந்து, பிட்காயினுக்குத் தம்பியான எத்தீரியம் கரன்ஸியிலும் முதலீடு செய்தார்கள். 2016ல் தங்களது பரிமாற்றச் சேவைகளை இங்கிலாந்துக்கு விரிவுப்படுத்தினார்கள். அப்போதே ஒரு பேட்டியில் டைலர் “பிட்காயின்தான் எதிர்காலத்தின் மிகப்பெரிய சோஷியல் நெட்வொர்க் ஆகும்” என்றார்.
டிஜிட்டல் பொருளாதாரத்தில் ஒரு சின்ன இடைவெளி இருக்கிறது. அதை க்ரிப்டோகரன்ஸிக்களால்தான் நிரப்ப முடியும். இவை எதிர்காலத்தில் உலகப் பொருளாதாரத்தையே மாற்றி எழுதும் என இந்தச் சகோதரர்கள் உறுதியாக நம்புகிறார்கள். பங்குகளுக்காக இருக்கும் வால் ஸ்ட்ரீட் போல, டிஜிட்டல் கரன்ஸிக்களுக்காக விரைவில் ஒரு மார்க்கெட்டை இவர்கள் உருவாக்கவிருக்கிறார்கள்.
இப்போது பில்லியனர் ஆகிவிட்டாலும், தங்களது எதிரி(?) மார்க்கை எட்ட இன்னும் 72 மடங்கு அதிகமாக வேண்டும் பிட்காயின். ஏனெனில், மார்க்கின் இன்றைய சொத்து மதிப்பு 72.2 பில்லியன் டாலர்கள்.
மார்க்குடனான பஞ்சாயத்து:
36 வயதாகும் இந்தச் சகோதரர்களும் ஹார்வர்டு பல்கலைகழகத்தில் படித்தவர்கள். கல்லூரி காலத்தில் தங்களது கல்லூரி நண்பன் திவ்ய நரேந்திராவுடன் இணைந்து HarvardConnect என்ற இணையதளத்தைத் தொடங்கினார்கள். பின்னர், அதுதான் ConnectU எனப் பெயர் மாறியது. இந்த ஐடியாவை சுட்டுதான் மார்க் ஃபேஸ்புக் தொடங்கியதாக வழக்கு தொடர்ந்தார்கள். அதில் வெற்றி பெற்று 65 மில்லியன் டாலர் இழப்பீடும் பெற்றார்கள். இவர்களது நண்பன் திவ்ய நரேந்திரா அமெரிக்காவில் பிறந்தவர்தான். ஆனால், பெற்றோர்கள் இருவரும் இந்தியாவிலிருந்து அங்கு போய் செட்டில் ஆன இந்திய மருத்துவர்கள். இந்தப் பிரச்னைக்குப் பின் திவ்ய நரேந்திரா தனது இன்னொரு ஹார்வர்டு நண்பனுடன் இணைந்து SumZero என்ற முதலீடு தொடர்பான இணையதளத்தை நிறுவினார்.
Post a Comment