தேர்தலில் போட்டியிடவில்லை, பல்டி அடிக்க மாட்டேன் - சிராஸ் மீராசாஹிப்
-சிராஸ் மீராசாஹிப்-
அகில இலங்கை மக்கள் காங்கிரஸிலிருந்து நான் ஒரு போதுமே வெளியேறப் போவதில்லை. என் மீது அரசியல் காழ்ப்புணர்வு கொண்டவர்களும் வங்குரோத்து அரசியல்வாதிகளுமே வீணான அபாண்டங்களை பரப்பி வருகின்றனர்.
எனது அரசியல் வாழ்வை குழி தோண்டி புதைக்க முடியுமென்ற நப்பாசையில் அவர்கள் தினமும் கற்பனைக்கதைகளை சோடித்து வருகின்றனர்.
சமுதாய நலனில் விருப்பம் கொண்டே கடந்த உள்ளூராட்சித் தேர்தலில் கல்முனை மாநகர சபையில் போட்டியிட்டு வெற்றி பெற்றேன் அதனை தொடர்ந்து மேயராகினேன். இறைவனின் உதவியால் மிகக் குறுகிய காலத்தில் அரசியல் செய்து இந்த பதவியை பெற்று மக்கள் பணியாற்றி வந்தேன்.
மக்களால் வழங்கப்பட்ட எனது மேயர் பதவியை பறித்தெடுத்த போதும் மக்களை விட்டு நான் ஒரு போதும் ஓடவில்லை, ஒதுங்கவும் இல்லை சமூக நலனை முன்னிறுத்தியே அப்போது தேசிய காங்கிரஸில் இணைந்து கொண்டேன்.
பின்னர் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவர் அமைச்சர் ரிஷாட் பதியுத்தீனின் சமூகம் சார்ந்த போராட்டங்களிலும், செயற்பாடுகளிலும் ஈர்க்கப்பட்டதனால் அவருடன் இணைந்து மக்கள் பணி புரிந்து வருகின்றேன்.
சிறு வயது முதல் அவருடன் நட்பாக இருந்ததனாலும், அவர் என்னுடைய பள்ளித்தோழராக இருந்ததனாலுமே இந்த சமூகப் பயணத்தில் நானும் இணைந்து கொண்டேன். என்னைப் பொருத்த வரையில் எந்த சந்தர்ப்பத்திலும் மக்கள் காங்கிரஸிலிருந்து வேறு எந்த கட்சிக்கும் தாவுகின்ற எண்ணம் எள்ளளவும் இல்லை.
சாய்ந்தமருது தனியான உள்ளூராட்சி சபை கோரிக்கையின் பிரதிபலிப்பாக சாய்ந்தமருது பள்ளிவாசல் சம்மேளனம் மேற்கொண்டிருக்கும் முடிவையடுத்து அந்தப் பிரதேசத்தின் அரசியல் சூழ்நிலையில் மாற்றம் ஏற்பட்டிருக்கின்றது. சாய்ந்தமருது மக்களின் நியாயமான கோரிக்கையில் எனக்கும் பெரிய பங்களிப்புண்டு சாய்ந்தமருது மண்ணில் பிறந்தவன் என்ற வகையிலும் எல்லா பிரதேச மக்களையும் நேசிப்பவன் என்ற வகையிலும் மக்களின் போராட்டத்துக்கு எமது கட்சியோ நானோ குறுக்கே நிற்கப்போவதில்லை.
எங்கள் கட்சித்தலைவரிடமிருந்து என்னை பிரித்தெடுத்து தங்களது எண்ணங்களை நிறைவேற்ற நினைப்பவர்கள் இறுதியில் தோல்வியையே சந்திப்பார்கள்.
படிப்படியாக இழந்து வரும் தமது அரசியல் செல்வாக்கை சரி செய்வதற்காக சிலர் என்னை பகடைக்காயாக பயன்படுத்த நினைக்கிறார்கள். இவர்கள் இறைவனைப் பயந்து கொள்ளட்டும்.
ஆகவே பிரதேச மக்களின் ஒற்றுமையில் நலன் கொண்டவன் என்ற ரீதியிலும், சாய்ந்தமருது மக்களின் நியாயமான போராட்டத்துக்கு ஆதரவளிப்பவன் என்ற ரீதியிலும், இம்முறை நடைபெறுகின்ற கல்முனை மாநகர சபை தேர்தலில் வேட்பாளராக போட்டியிடுவதில்லை என்ற முடிவுக்கு வந்துள்ளேன் என்பதை உறுதியோடு தெரிவித்துக் கொள்கிறேன்.....
இருந்தாலும் கல்முனை மாநகர மேயராக இருந்த நீங்கள் அந்தப்பதவியை விட்டுக்கொடுக்க
ReplyDeleteவேண்டிய அந்த சந்தர்பத்தில் நீங்கள்
நடந்து கொண்டவிதமும் உங்களது அறிக்கைகளும் நீங்கள் யார் என்பதையும் எதற்காக அரசியலுக்கு
வந்துள்ளீர்கள் என்பதையும் நாம்
புரிந்து கண்டோம் .நீங்கள் எப்போதும்
இவ்வாறு ஒதுங்கியே இருந்துகொள்ளுங்கள் . அது உங்களுக்கும் நல்லது. மக்களுக்கும்நல்லது.