Header Ads



மனிதக் கடத்தல்களுக்காக நீலநிற வேன், வெள்ளை நிறமாகியது

நீல நிறத்தினை உண்மை நிறமாக கொண்ட வேனுக்கு, வெள்ளை நிறமடித்து, வேறு எஞ்ஜினை அதற்கு பொருத்தியே வெள்ளை  வேன் கடத்தல்கள் முன்னெ டுக்கப்பட்டுள்ளதாக குற்றப்புலனாய்வுப் பிரிவினர் கண்டறிந்துள்ளனர். 

கொழும்பு மற்றும் அதனை அண்டிய பகுதிகளில் வைத்து 2008 ஆம் ஆண்டு  5 மாணவர்கள் உள்ளிட்ட 11 பேர் கடத்தப்பட்டு காணாமல் போகச் செய்யப்பட்ட சம்பவம் தொடர்பிலான விசாரணைகளில் இவை கண்டறியப்பட்டுள்ளதாக அது தொடர்பில் விசாரணை செய்யும் குற்றப் புலனாயவுப் பிரிவின் பொலிஸ் பரிசோதகர் நிசாந்த சில்வா இதனை நீதிமன்றுக்கு நேற்று அறிவித்தார்.  இது குறித்த வழக்கு நேற்று கோட்டை நீதிவான் லங்க ஜயரத்ன முன்னிலையில் மீளவும்  நேற்று விசாரணைக்கு வந்தது.

இதன்போதே விசாரணை அதிகாரியான பொலிஸ் பரிசோதகர் நிசாந்த சில்வா மேற்படி விடயத்தை மன்றுக்கு அறிவித்தார்.  குறித்த வேன் தொடர்பில்  கடற்படையின் லெப்டினன் கொமாண்டர் முனசிங்க ( சந்தேக நபர் அல்ல. பிரிதொருவர்)வின் வாககு மூலத்தை அடிப்படையாகக் கொண்டும், அரச இரசாயன பகுப்பாய்வு அறிக்கையின் படியும் மேற்படி விடயத்தை குற்றப் புலனாயவுப் பிரிவு  உறுதி செய்தது. குறித்த வேனுக்கு வெல்லம்பிட்டிய பகுதியில் வைத்து இவ்வழக்கின் சந்தேக நபர்களில் ஒருவராக கருதி தேடப்படும் ஹெட்டி ஆரச்சிக்கு தெரிந்த கராஜ் ஒன்றில் போலியாக எஞ்ஜின் ஒன்று பொருத்தப்பட்டுள்ளதாகவும், செசி இலக்கத்துக்கும் எஞ்ஜினுக்கும் தொடர்பில்லாமை இரசாயன பகுப்பாய்வு ஊடாக உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும் இதன் போது சி.ஐ.டி. நீதிவானுக்கு அறிவித்தது.

இந்த விவகாரத்தில் தற்போது கைது செய்யப்படுவதற்காக தேடப்பட்டு வரும் கடற்படையின் லெப்டினன் கொமாண்டர் ஹெட்டி ஆரச்சியைக் கைது செய்ய பகிரங்க பிடியாணையும் நீதிம்னறினால் நேற்றும் பிறப்பிக்கப்பட்டது.

முன்னாள் கடற்­படை தள­பதி, வசந்த கரண்­ணா­கொட தனது பாது­க­ாப்பு உத்­தி­யோ­கத்­த­ராக இருந்த லெப்­டினன்ட் கொமாண்டர் சம்பத் முன­சிங்­க­வுக்கு எதி­ராக கொழும்பு குற்றத் தடுப்புப் பிரிவில் செய்த முறைப்­பாட்­டுக்கு அமை­வாக குற்றப் புல­னாய்வுப் பிரிவு முன்­னெ­டுத்த மேல­திக விசா­ர­ணை­க­ளி­லேயே இந்த கடத்தல் விவ­காரம் அம்­ப­லத்­துக்கு வந்­ததிருந்தது.

முன்னாள் பொலிஸ் மா அதிபர் என்.கே.இலங்­க­கோனின் உத்­தர­வுக்கு அமை­வாக குற்றப் புல­னாய்வுப் பிரி­வுக்கு பொறுப்­பான சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபர் ரவி சென­வி­ரட்­னவின் ஆலோ­ச­னைக்கு அமைய புல­னாய்வுப் பிரிவின் பணிப்­பாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்­தி­யட்சர் நாக­ஹ­முல்­லவின் வழி­காட்­டலின் கீழ் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சர் சானி அபேசேகரவின் நேரடி  கட்டுப்பாட்டில் புல­னாய்வு பிரிவின் கூட்டுக் கொள்ளை தொடர்­பி­லான விசா­ரணைப் பிரிவின் பொறுப்­ப­தி­காரி பொலிஸ் பரி­சோ­தகர் நிஸாந்த டீ சில்வா தலை­மையில் முன்­னெ­டுக்­கப்­படும் இரு­வேறு விசா­ர­ணை­களில் இந்த பிர­தான கடத்­தல்கள் தொடர்பில் தக­வல்கள் வெளிப்­ப­டுத்­தப்­பட்­டி­ருந்­தன.

நேற்றைய விசாரணைகள் ஆரம்பமான போது சந்தேக நபர்கள் மன்றில் ஆஜர்ச் செய்யப்பட்டனர். இதன்போது மன்றில் ஆஜராகியிருந்த குற்றப் புலனாயவுப் பிரிவின் விசாரணை அதிகாரி நிசாந்த சில்வா, மேலதிக விசாரணை அறிக்கை ஊடாக மன்றுக்கு விசாரணை நிலைமையை தெளிவுபடுத்தினார்.  இதன் போதே நீல வேன் வெள்ளை வேன் ஆனமையையும், அதனை பயன்படுத்தியே நாடளாவிய ரீதியில் வெள்ளை வேன் கடத்தல்கள் இடம்பெற்றுள்ளமையும் அவர் குறிப்பிட்டார்.

 நேற்று மன்றுக்கு சட்டத்தரணி உதய கம்மன்பில ஊடாக, இந்த கடத்தல் வழக்கின் சாட்சியாளர்களில் ஒருவரான பஸ்நாயக்க முதியன்சலாகே விஜேசாந்த ஆஜராகி, குற்றவியல் சட்டத்தின் 127 ஆவது அத்தியாயத்தின் கீழ் நீதிவானுக்கு வாக்கு மூலம் ஒன்று வழங்க கோரினார்.

தனது வாக்கு மூலத்தை குற்றப் புலனாயவுப் பிரிவு தவறாக பதிந்துள்ளதாக கூறியே இந்த கோரிக்கையை அவர் விடுத்தார். எனினும் குற்றப் புலனாயவுப் பிரிவு அக்குற்றச்சாட்டை மறுத்தது. கேகாலை சாந்த, இப்பாகமுவ பிரதீப் ஆகிய இருவர் தொடர்பிலும் குறித்த சாட்சியாளரே விடயங்களை வெளிப்படுத்தியுளதாகவும், அவர்கள், அவரது வாக்கு மூலம் தவறு என அவர் முன்னதாகவெ உணர்ந்ததாக கூறும் நிலையில், அதனை சொல்ல ஏன் இவ்வளவு கால தாமதம் எனவும் கேள்வி எழுப்பினர்.

எவ்வாறாயினும் நேற்று அக்கோரிக்கைக்கு அனுமதி வழங்கப்படாத நிலையில் அடுத்த தவணையில் அது தொடர்பில் ஆரய்ப்பட்வுள்ளது.

முதல் சந்தேக நபர் தவிர ஏனையொர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள நிலையில் வழக்கானது ஜனவரி மாதம் 2 ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.

No comments

Powered by Blogger.