Header Ads



காங்கிரஸின் தலைவராக, ராகுல் காந்தி தெரிவு

காங்கிரஸ் தேசிய தலைவர் பதவிக்கு போட்டியிட்ட ஒரே வேட்பாளரான ராகுல் காந்தி போட்டி இன்றி ஒருமனதாக தேர்வாகியுள்ளார்.

காங்கிரஸ் கட்சியின் தற்போதைய தலைவராக உள்ள சோனியா காந்தியின் உடல்நிலையை கருத்தில் கொண்டும், கட்சியின் எதிர்கால நலனை கருத்தில் கொண்டும் ராகுல் காந்தியை தலைவராக நியமிக்க வேண்டும் என அக்கட்சிக்குள் கோரிக்கைகள் எழுந்த வண்ணம் இருந்தது.

இதற்கேற்ப, அனைத்து மாநில காங்கிரஸ் கமிட்டி கூட்டத்திலும் ராகுலை தலைவராக நியமிக்க வேண்டும் என தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. கடந்த மாதம் கூடிய காங்கிரஸ் கட்சியின் காரிய கமிட்டி கூட்டத்தில் தலைவர் பதவிக்கான தேர்தல் தேதிகள் அறிவிக்கப்பட்டது.

இந்நிலையில், தலைவர் பதவிக்கு போட்டியிடுவதற்காக ராகுல் காந்தி டெல்லியில் உள்ள கட்சியின் தலைமையகத்தில் தனது வேட்புமனுவை நேற்று காலை தாக்கல் செய்தார். மூத்த தலைவர்கள் கமல்நாத், ஷீலா தீக்‌ஷித், மோதிலால் வோரா, தருண் கோகோ ஆகியோர் அவரை முன்மொழிந்தனர்.

அதற்கு முன்னதாக முன்னாள் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி, முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் இல்லங்களுக்கு சென்று அவர்களிடம் ஆசி பெற்றார்.

காங்கிரசின் வருங்கால தலைவர் ராகுல் காந்திக்கு அவரது மைத்துனரும், பிரியங்கா காந்தியின் கணவருமான ராபர்ட் வதேரா தனது பேஸ்புக் பக்கத்தில் நேற்று வாழ்த்து தெரிவித்திருந்தார். 

ராகுல் காந்தி நேரில் வந்து தாக்கல் செய்த வேட்பு மனு தவிர அவரது பெயரால் மேலும் பலர் தலைவர் பதவிக்கு வேட்பு மனு தாக்கல் செய்திருந்தனர். இந்த வேட்பு மனுக்களை இன்று பரிசீலனை செய்த தேர்தல் அதிகாரி முள்ளப்பள்ளி ராமச்சந்திரன், ராகுல் காந்தி பெயரை முன்மொழிந்து தாக்கல் செய்ப்பட்ட 89 வேட்பு மனுக்களும் ஏற்கப்பட்டதாக இன்று மாலை அறிவித்துள்ளார்.

இதையடுத்து, காங்கிரஸ் தேசிய தலைவர் பதவிக்கு போட்டியிட்ட ஒரே வேட்பாளரான ராகுல் காந்தி போட்டி இன்றி ஒருமனதாக தேர்வாகியுள்ளார்.


ஒருமனதாக  தேர்ந்தெடுக்கப்பட்ட ராகுல் காந்தி விரைவில் சோனியாவிடம் இருந்து தலைவர் பொறுப்பை ஏற்றுக்கொள்வார் என தெரிகிறது.

No comments

Powered by Blogger.