மஹிந்த தரப்பினரில் ஒருசாரார், எம்முடன் கைகோர்ப்பு - சஜித்
அரசாங்கம் அமுல்படுத்தும் விசேட அபிவிருத்தி திட்டங்கள் குறித்து மஹிந்த தரப்பினரில் ஒருசாரார் எம்முடன் கைகோர்த்துள்ளமை மகிழ்வை தருகின்றது என வீடமைப்பு மற்றும் நிர்மாணத்துறை அமைசசர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.
அம்பாந்தோட்டை மாவட்டத் தில் லுனுகம்வெஹர கிராமத்தில் சியதுருகம என்னும் வீடமைப்பு தொகுதியை மக்களிடம் கையளிக்கும் நிகழ்வு நேற்று முன்தினம் இடம்பெற்ற போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அவர் மேலும் குறிப்பிடுகையில்,
நல்லாட்சி அரசு ஆட்சிபீடமேறியது முதல் பல்வேறுபட்ட அபிவிருத்தி திட்டங்களை வெற்றிகரமாக நடைமுறைப்படுத்தி வருகின்றது. சுத்தமான குடிநீர், மின் விநியோகம், போக்குவரத்துக்கு உகந்த பாதை உட்பட பல அடிப்படை தேவைகளை நாம் கிராம மட்டத்திலுள்ள மக்களுக்கு வழங்கி வருகின்றோம்.
சுற்றுசூழல் பாதுகாப்பு, உணவு உற்பத்தி, வீடமைப்பு நிர்மாண பணிகள், சிறுநீரக நோய்க்கான நிவாரணம், ஒவ்வொரு இல்லங்களையும் போதை பாவனையற்ற இல்லங்களாக மாற்றுதல் போன்ற வேலைத்திட்டங்களை நாம் ஆற்றிவருகின்றோம். கிராம மக்களது ஜீவனோபாயத்தை பலப்படுத்துவதே எமது நோக்கமாகும்.
இன்றைய நிகழ்வில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக் ஷவுடன் மிக நெருக்கமாக பணி புரிந்த ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் சூரியவெவ பிரதேச சபையின் முன்னாள் உப தலைவர் காமினி ருவான்பத்திரன கலந்து கொண்டிருப்பது எமக்கு உற்சாகத்தைத் தருகின்றது. ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பை சேர்ந்த மேலும் பலர் எமது பணிகளுக்கு ஒத்துழைப்பு நல்கிவருகின்றனர். எனது தந்தை ரணசிங்க பிரேமதாசவின் அடிச்சுவட்டையே நானும் பின்பற்றி வருகின்றேன் என்றார்.
Post a Comment