மது போதையில், பௌத்த தேரர் கைது - தகாத வார்த்தைகளால் தூற்றிய நிலையில் சம்பவம்
மது போதையில் சிலாபம் பஸ் தரிப்பு நிலையத்தில் முறைகேடாக நடந்து கொண்ட பௌத்த தேரர் ஒருவரைக் கைது செய்துள்ளதாக சிலாபம் பொலிஸார் தெரிவித்தனர்.
இரவு நேர ரோந்து நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த பொலிஸ் அதிகாரிகளுக்கு குறித்த தேரர் தொடர்பில் தகவல் கிடைத்ததைத் தொடர்ந்து பஸ் நிலையம் சென்ற பொலிஸார் அங்கு தகாத வார்த்தைகளால் குறித்த தேரர் யாரையோ தூற்றிக் கொண்டிருந்ததாகவும், அந்நேரம் அவர் அதிக போதையில் இருந்தமை தெரிய வந்ததோடு அவரிடம் மேற்கொண்ட விசாரணைகளுக்குரிய பதிலை வழங்காததால் அவர் கைது செய்யப்பட்டு பொலிஸ் நிலையத்துக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளார்.
குறித்த தேரரின் விபரங்களை அறிந்து கொள்வதற்காக அவரிடம் கேட்கப்பட்ட கேள்விகளுக்கு அவரால் பதிலளிக்க முடியவில்லை என்றும் அவர் வசிக்கும் பௌத்த விகாரை தொடர்பான தகவல்களையும் கூட அவரால் தெரிவிக்க முடியவில்லை என்றும் அவரிடம் தேரர்களுக்கான அடையாள அட்டையோ அல்லது தேசிய அடையாள அட்டையோ இருக்கவில்லை என்றும் பொலிஸார் தெரிவித்தனர்.
குறித்த தேரர் நிக்கவெரட்டி அவுலேகம பிரதேசத்தைச் சேர்ந்த ஒருவராக இருக்கலாம் என சந்தேகிக்கப்படுவதோடு அவர் தொடர்பில் சந்தேகம் ஏற்பட்டுள்ளதால் அவரது கைவிரல் அடையாளங்களைப் பெற்றுக் கொண்டு விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் சிலாபம் பொலிஸார் தெரிவித்தனர்.
Post a Comment