Header Ads



புற்றுநோயின் அறிகுறிகள் (மகளிர் மட்டும்)

புற்றுநோய் என்பது எப்போதும் நேரடியான அறிகுறிகளை உணர்த்திக் கொண்டுதான் வரும் என்றில்லை. இதெல்லாம் புற்றுநோய்க்கான அறிகுறிகளாக இருக்குமோ என நினைக்கத் தோன்றாத அளவுக்கும் அவை வித்தியாசமாகவும் நோயை உணர்த்தலாம். பெண்கள் தங்கள் உடல் உணர்த்தும் அப்படிப்பட்ட சில மறைமுகப் புற்றுநோய் அறிகுறிகளை அலட்சியம் செய்யாமல் உடனே கவனித்து மருத்துவரிடம் தெளிவுப்படுத்திக் கொள்ள வேண்டும் என்கிறார் மகப்பேறு மருத்துவர் ஜெயராணி.

மெனோபாஸுக்குப் பிறகான ரத்தப்போக்கு

மெனோபாஸை எட்டிய முதல் சில மாதங்களில் அவ்வப்போது ஸ்பாட்டிங் எனப்படுகிற திட்டுத்திட்டான ரத்தப் போக்கு இருப்பது சகஜம். ஆனால், அது மாதாந்திர ரத்தப் போக்கு அளவுக்கு இருந்தால் கர்ப்பப்பை வாய் புற்றுநோயின் அறிகுறியாகவும் இருக்கலாம் என எச்சரிக்கை அடைய வேண்டும். ஆரம்ப நிலையிலேயே இது கண்டுபிடிக்கப்பட்டு சரியான சிகிச்சை அளிக்கப்பட்டால் புற்றுநோய் மற்ற பகுதிகளுக்குப் பரவுவதையும் மரண அபாயத்தையும் பெரிய அளவில் தவிர்க்க முடியும்.

மார்பகங்களின் தோற்றத்தில் மாற்றங்கள்

மார்பகங்களில் உருளும் கட்டிகள் மார்பகப் புற்றுநோயின் அறிகுறியாக இருக்கலாம் என்பது பல பெண்களுக்கும் தெரியும். அதைத் தாண்டி மார்பகங்களின் நிறத்தில் மாற்றம், அவை திடீரென உள்ளடங்கிப் போவது, வீக்கம் மற்றும் மிருதுவாதல் போன்றவைகூட மார்பகப் புற்றுநோயை உணர்த்தலாம். எனவே, மார்பகங்களில் எந்த அசாதாரண அறிகுறி தென்பட்டாலும் உடனடி பரிசோதனை மிக முக்கியம்.

வயிற்று உப்புசம்

மாதவிலக்கு நாட்களில் வயிறு உப்புசமாகத் தெரிவதைப் பல பெண்கள் உணர்வார்கள். ஆனால், மாதவிலக்கு முடிந்த பிறகும் வயிற்று உப்புசமும், மலச்சிக்கலும் தொடர்ந்தால் வயிறு சரியில்லை என அவற்றை அலட்சியப்படுத்த வேண்டாம். இவையும் சினைப்பை அல்லது கர்ப்பப்பை வாய் புற்றுநோயின் அறிகுறிகளாக இருக்கலாம். அதேபோல பசியே இல்லாத நிலையும் அதீதப் பசியும்கூட அலட்சியப்படுத்தப்படக்கூடாது.

அசாதாரண இடுப்புவலி

ஒழுங்கற்ற மாதவிலக்கு என்பதும் பெண்களிடம் சகஜம்தான். ஆனால், திடீரென மாதவிலக்கின் போதான ரத்தப்போக்கு அளவை மிஞ்சினாலோ, இரண்டு மாதவிலக்குகளுக்கு இடையில் இன்னொரு முறை மாதவிலக்கு வந்தாலோ, அதீதமான இடுப்பு வலி இருந்தாலோ உடனடி கவனம் அவசியம். இவையும் பெண்ணுறுப்புப் புற்றுநோய் பாதிப்பின் மறைமுக அறிகுறிகளாக இருக்கலாம்.

அடிக்கடி காய்ச்சல் மற்றும் இன்ஃபெக்‌ஷன்

நோய்களுக்கு எதிராகப் போராடும் சக்தி இல்லாதவர்களுக்குத்தான் அடிக்கடி காய்ச்சலும், தொற்றும் ஏற்படும். ஆனால், ஆரோக்கியமான ஒரு பெண்ணுக்குக் காரணமே இல்லாமல் இவை இரண்டும் பாதித்தால் அலர்ட் ஆக வேண்டும். நீண்ட நாள் தொடரும் காய்ச்சல் மற்றும் கடுமையான வலி போன்றவை புற்றுநோயின் அறிகுறிகளாகவும் இருக்கலாம்.

உணவு விழுங்குவதில் சிரமம்

தொண்டைக் கரகரப்பு, தொண்டையில் வலி மற்றும் எரிச்சல், உணவுகளை விழுங்குவதில் சிரமம் போன்றவை பல நாட்களாக நீடித்தால் அவை தொண்டை அல்லது வயிற்றுப் புற்றுநோயின் அறிகுறிகளாகவும் இருக்கலாம். சாதாரணமாக இந்த அறிகுறிகளை ஜலதோஷம் மற்றும் தொண்டைப் புண்ணுடன் மட்டுமே இணைத்துப் பார்க்கத் தோன்றும். அவற்றைக் குணப்படுத்துவதற்கான மருந்துகளை மட்டுமே எடுத்துக்கொள்வார்கள். ஆனால், மருந்துகள் சாப்பிட்டும் அந்த அறிகுறிகள் குறையாவிட்டாலோ, அதிகரித்தாலோ அவை அசாதாரணமானவை என உணர வேண்டும்.

காரணமற்ற எடை இழப்பு

வழக்கமாக நன்றாக சாப்பிடுகிற ஒருவருக்குத் திடீரென பசியின்மை ஏற்படுகிறது... மனக்கவலையோ, வேறு உடல்நலக்கோளாறுகளின் பக்கவிளைவோ இல்லாமல் வேகமாக எடை குறைகிறது என்றால் அலர்ட் ஆக வேண்டும். பசியின்மையும் அதீத எடை இழப்பும் பல்வேறு புற்றுநோய்களின் அறிகுறிகளாக இருக்கலாம் என்பதை கவனத்தில் கொள்ளவும்.

ரத்தம் வெளியேறுதல்

மலம் கழிக்கும்போது ரத்தம் வெளிப்பட்டால் அது குடல் புற்றுநோயின் அறிகுறியாக இருக்கலாம். இந்த அறிகுறியை மூல நோயுடனோ, மலச்சிக்கலுடனோ மட்டும் தொடர்புப்படுத்திப் பார்க்காமல் உடனே மருத்துவரிடம் ஆலோசனை பெறுவது பெரிய பாதிப்புகளில் இருந்து காப்பாற்றும்.

தீராத வாய்ப்புண்

வாய்ப்புண்ணோ, பல்வலியோ பயப்படக்கூடியவை அல்ல. ஆனாலும் அவை அடிக்கடி வந்தாலோ, வந்தபிறகு குணமாவதற்குத் தாமதம் ஆனாலோ எச்சரிக்கையாக வேண்டும். தவிர பல் ஈறுகளிலும் நாக்கிலும் சிவந்த தடிப்புகள், தாடைப் பகுதியில் மரத்துப்போன உணர்வு போன்றவை வாய்ப்புற்றுநோயின் அறிகுறிகளாக இருக்கலாம். பாக்கு, புகையிலைப் பழக்கம் உள்ள பெண்களுக்கு இந்தப் புற்றுநோய்க்கான அபாயம் அதிகம்.

விசித்திரமான தலைவலி

அடிக்கடி தலைவலியே வராத ஒருவருக்குத் திடீரென கடுமையான தலைவலி வரலாம். அதற்குக் காரணமே இருக்காது. வலி நிவாரணிகளில் வலி குறையாது. வலி அதிகமாவதுடன், மண்டையின் நரம்புப் பகுதிகளில் பரவுவதையும் உணர்ந்தால் உடனடியாக மருத்துவரைப் பார்ப்பது பாதுகாப்பானது. மருத்துவர் அது அசாதாரண அறிகுறி என சந்தேகப்பட்டால் மூளைக்கான பரிசோதனைகளைப் பரிசோதிப்பார். தக்க நேரத்துப் பரிசோதனைகளும், சிகிச்சைகளும் மூளைப் புற்றுநோய் அபாயத்திலிருந்து காப்பாற்றும்.

No comments

Powered by Blogger.