Header Ads



சிங்கள மக்கள் மத்தியில் கலந்துரையாடல்களை, நடத்துவது பெரிய சிரமமாக இருக்கிறது

“யுத்தம் முடிந்த கையோடு, வாழ்க்கையில் சுபீட்சமும் மறுமலர்ச்சியும் ஏற்படும் என்று எதிர்பார்த்த மக்களுக்கு ஏமாற்றமே கிடைத்துள்ளது. மரணம் ஓய்ந்திருக்கின்றது. ஆனால், பிரச்சினைகள் அதிகரித்து வருகின்றன” என ராவய பத்திரிகையின் முன்னால் பிரதம ஆசிரியர் விக்டர் ஐவன் தெரவித்தார்.

அத்துடன், “பொருளாதாரம், கல்வி, விவசாயம் , காணி என பல்வேறு விடயங்களிலும் புதுப்புது வடிவிலான பிரச்சினைகள் எழுந்த வண்ணம் உள்ளன” எனவும் அவர் தெரிவித்தார்.

“தேசத்தைக் கட்டியெழுப்புதல்” எனும் தொனிப்பொருளில், புனர் உதய மற்றும் தேசிய சூரா சபையின் பங்கேற்புடன் கிண்ணியாவில் நேற்று (04) நடைபெற்ற விசேட கலந்துரையாடலில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கையிலேயே, அவர் இவ்வாறு தெரிவித்தார். அங்கு அவர் தொடர்ந்து கருத்துத் தெரிக்கையில்,

“யுத்தம் இல்லா விட்டாலும் விடுதலை பெற முடியாத துர்ப்பாக்கிய நிலை ஏற்பட்டுள்ளது. ஒருவருக்கு ஒருவர் சந்தேகக் கண் கொண்டு பார்க்கின்றனர். இது, இந்த நாட்டை  பாதாள  அழிவுகளுக்கே இட்டுச் செல்லும்.

“நாம் ஏன் இந்த மோசமான நிலைக்குத் தள்ளப்பட்டிருக்கிறோமென, ஏன் அரசியல்வாதிகள் சிந்திப்பதில்லை.

“வீட்டில் வெள்ளம் வந்த பிறகு சாதாரண ஒரு பாமர மனிதன் கூட வீட்டைச் சுத்தம் செய்து, உடைந்த பொருட்களுக்கும் இழந்த உடமைகளுக்கும் பரிகாரம் தேடும் முயற்ச்சியில் தன்னை அர்ப்பணிப்பதில் ஆர்வம் காட்டுவான்.

“ஆனால், மனித உயிர்கள் புதைக்கப்பட்ட இந்த நாட்டைப் பற்றி ஏன் நாம் சிந்திப்பதில்லை. மரணத்தில் இருந்து தப்பியவர்கள் கூட உள ரீதியாகப் பெரிதும் பாதிக்கப்பட்டார்கள்.

“இலங்கைத் தலைவர்களிடம் எல்லா இனங்களையும் ஒன்றிணைக்கக் கூடிய சிந்தனை மேலோங்கவில்லை. மாறாகத் தான் சார்ந்திருக்கின்ற  மதம், இனம், குழு சார்பாக சிந்தித்ததன் விளைவு தான் இன்று இந்த நாடு படுபாதாளத்துக்குச் சென்றிருப்பது.

“படித்தவர்கள் அமைதியாக இருப்பது மேலும் பிரச்சினைகளை அதிகரிக்கவே  செய்யும். ஆட்சியைப் பிடிப்பதால் இதனை நிறைவேற்றலாம் என நினைப்பது தவறு. இது உண்மையென்றால் பிரச்சிகளுக்கு எப்போதே, தீர்வு காணப்பட்டிருக்க வேண்டும்.

“எனவே, இந்த நாட்டினுடைய பிரச்சினைகள் தீர்க்கக்கப்பட வேண்டும் என்றால் இனங்களுக்கிடையிலான உறவையும் தர்க்க ரீதியாக சிந்திக்கும் ஆற்றலையும் வளர்க்க வேண்டும். இது சம்மந்தமாக முழு சமூகத்தையும் விரைவாக அறிவூட்ட வேண்டும்.

“அந்தப் புனிதமான பணியில் இப்போது நாங்கள் இறங்கியிருக்கிறோம். இதற்காக, “மறுமலர்ச்சி” என்ற இயக்கத்தை ஆரம்பித்திருக்கின்றோம்.

“தமிழ், முஸ்லிம் மக்கள் மத்தியில் கலந்துரையாடல்களை நடத்துவதை விட சிங்கள மக்கள் மத்தியில் நடத்துவது பெரிய சிரமமாக இருக்கிறது. என்றாலும், இந்த நாடு, இனங்களால் ஒருங்கிகிணைக்கப்பட்ட தேசம் என்ற மறுமலர்ச்சியைக் காணும் வரை, எமது பயணத்தை முடிக்க மாட்டோம்” என்றார்.

ஒலுமுதீன் கியாஸ், எப்.முபாரக்

1 comment:

  1. (மேலும்,) பூமியில் (அமைதி உண்டாகி) சீர்திருத்தம் ஏற்பட்ட பின்னர் அதில் குழப்பம் உண்டாக்காதீர்கள்; அச்சத்தோடும் ஆசையோடும் அவனை பிரார்த்தியுங்கள் - நிச்சயமாக அல்லாஹ்வின் அருள் நன்மை செய்வோருக்கு மிக சமீபத்தில் இருக்கிறது.
    (அல்குர்ஆன் : 7:56)

    ReplyDelete

Powered by Blogger.