புலிகளின் தினத்தை தடுக்க, நல்லாட்சி அஞ்சி நடுங்குகிறது - தினேஷ்
மாவீரர் நினைவேந்தலை தடுப்பதற்கு ரணில், மைத்திரி தலைமையிலான நல்லாட்சி அரசாங்கம் அஞ்சி நடுங்குவதாக ஒன்றிணைந்த எதிர்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் தினேஷ் குணவர்த்தன தெரிவித்துள்ளார்.
கொழும்பில் இன்றைய தினம் நடைபெற்ற மக்கள் ஐக்கிய முன்னணியின் ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே இவ்வாறு தெரிவித்துள்ளார்.
இதன்போது அவர் தொடர்ந்தும் கருத்துத் தெரிவிக்கையில்,
மாவீரர் நினைவேந்தல் ஏற்பாட்டாளர்களே இந்த அரசாங்கத்தை ஆட்சிபீடம் ஏறச்செய்தனர். அவர்களுக்கு ரணில், மைத்திரி தலைமையிலான நல்லாட்சி அரசாங்கம் அஞ்சுகிறது.
ஜனாதிபதிக்கும் வாக்களித்து, நாடாளுமன்றத்தில் மூன்றிலிரண்டு பெரும்பான்மை வாக்குகளையும் எடுத்து வழங்கியது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பாகும். எனவேதான் நாடாளுமன்றத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின்றி எந்தவொரு சட்டமூலமும் நிறைவேறாது.
உள்ளூராட்சி தேர்தலை நடத்தும்படி இன்றுவரை எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந்தன், சபையில் எழுந்து வலியுறுத்தவில்லை. எதிர்க்கட்சித் தலைவர் கூற வேண்டியதை இன்று நாங்கள்தான் கூறுகின்றோம்.
இப்படிப்பட்டவர்களையே அரசாங்கம் வைத்துக் கொண்டிருக்கிறது. அவர்களது சீடர்களும், உதவியாளர்களுமே வடமாகாண சபையை இயக்கிக் கொண்டிருக்கின்றனர் என குறிப்பிட்டுள்ளார்.
Post a Comment