முஸ்லிம் தனியார் சட்டம், இந்நாட்டின் சொத்து - காலதாமதமாவதற்கு உலமாசபை காரணமல்ல
முஸ்லிம் தனியார் சட்டம் இந்நாட்டின் சொத்து. இந்நாட்டு முஸ்லிம்களுக்கு கிடைத்துள்ள வரப்பிரசாதமே இது. இதில் மாற்றங்கள் தேவை என்பதில் மாற்றுக்கருத்து இல்லை. ஷரீஅத்தின் விடயத்தில் எதில் நெகிழ்வுத்தன்மை, தாராளத்தன்மை இருக்கிறதோ அதில் மாற்றங்களைச் செய்யலாம். ஆனால், எந்த விடயங்களை மாற்ற முடியாதோ அதில் திருத்தங்களை செய்ய முடியாது.
முஸ்லிம் தனியார் சட்டத்தில் திருத்தங்களுக்கான சிபார்சுகள் காலதாமதமாவதற்கு உலமாசபை காரணமல்ல என அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா சபையின் தலைவர் அஷ்ஷெய்க் எம்.ஐ.எம்.ரிஸ்வி முப்தி தெரிவித்தார்.
முஸ்லிம் தனியார் சட்டத்தில் திருத்தங்கள் தொடர்பில் கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு கூறினார். அவர் தொடர்ந்தும் கருத்து தெரிவிக்கையில்;
முஸ்லிம் தனியார் சட்டத்தில் மேற்கொள்ள வேண்டிய திருத்தங்கள் தொடர்ந்தும் காலதாமதப்பட்டு வருவதாகவும், சில விடயங்களில் தெளிவுகள் இன்மையாலுமே குழுவின் உறுப்பினர்கள் சிலரால் கடந்த 26 ஆம் திகதி புதியதோர் அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டது.
உலமா சபையின் நிலைப்பாடு மிகவும் தெளிவானதாகும். முஸ்லிம் தனியார் சட்டத்தில் உடனடியாக திருத்தப்பட வேண்டியவற்றை அவசரமாகச் செய்வோம். ஏனையவற்றை பிறகு மாற்றிக்கொள்ளலாம். எடுத்த எடுப்பில் மாற்றங்களைச் செய்ய முடியாது.
உலமா சபையின் பத்வா குழுவில் அனைத்து மத்ஹபுகளையும், அமைப்புகளையும் சேர்ந்த 40 உலமாக்கள் இருக்கிறார்கள். இக்குழு பல தடவைகள் ஒன்றுக் கூடி முஸ்லிம் தனியார் சட்ட திருத்தங்கள் தொடர்பில் கலந்துரையாடியிருக்கிறது. ஆலோசனைகளை வழங்கியிருக்கிறது. அவர்களது ஆலோசனைகள் முஸ்லிம் தனியார் சட்ட திருத்த சிபார்சு குழுவுடன் பகிர்ந்துக் கொள்ளப்பட்டுள்ளன.
எமது முன்மொழிவுகளை எழுத்து மூலம் குழுவிடம் கையளித்துவிட்டோம். முஸ்லிம் தனியார் சட்டத்தில் தேவையான விடயங்களில் திருத்தங்களைக் கொண்டு வரலாம். ஷரீஅத்துக்கு முரணற்ற காலத்துக்குத் தேவையான மாற்றங்களை உள்ளடக்கலாம். ஷரீஆவின் சில அடிப்படைகளில் மாற்றங்களையோ, திருத்தங்களையோ அனுமதிக்க முடியாது.
உலமா சபை தனது நிலைப்பாட்டை பத்வா குழுவைக் கூட்டி ஆலோசனை நடத்தி 2010 ஆம் ஆண்டு ஜூன் மாதமே சிபார்சு குழுவிடம் தெரிவித்துவிட்டது. இந்தக் கூட்டத்தில் 25 உலமாக்கள் பங்கேற்றனர். இதே நிலைப்பாட்டினை 2010 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 12 ஆம் திகதி ஜாமிஆ நளீமிய்யாவில் ஏற்பாடு செய்திருந்த கூட்டத்திலும் உறுதி செய்துள்ளது. அன்று முதல் இன்று வரை உலமா சபை அதே நிலைப்பாட்டிலேயே இருக்கிறது.
இந்நிலையில் முஸ்லிம் தனியார் சட்டத்திருத்த சிபார்சுகள் தொடர்ந்தும் கால தாமதமாவதால் 2017 ஆம் ஆண்டு ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் உலமா சபையின் பத்வா குழு ஒன்று கூடி அதே நிலைப்பாட்டினையே அறிவித்தது.
முஸ்லிம் தனியார் சட்டத்தில் திருத்தங்களை மேற்கொள்வதற்காக ஏற்கனவே இரு குழுக்கள் நியமிக்கப்பட்டு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன. அந்தக் குழுக்களும் ஏற்னவே சில சிபார்சுகளை முன்வைத்துள்ளன. எனவே, முஸ்லிம் தனியார் சட்ட திருத்தங்கள் இந்த இரு குழுக்களின் கருத்துகளையும் உள்ளடக்கியதாகவே அமைய வேண்டும். எமது தனித்துவம் இழக்கப்படும் வகையிலான திருத்தங்கள் அமையக்கூடாது என்றார்.
Leave mathuhab and follow QURAN and Sunah.
ReplyDelete