Header Ads



எப்படித் தலைமை தாங்க வேண்டும் என்று, தலைவர்களுக்கு புத்தர் போதிக்கவில்லை

சிறிலங்காவிற்கு புதியதொரு அரசியலமைப்போ அல்லது தற்போது நடைமுறையிலுள்ள அரசியலமைப்பில் மாற்றமோ செய்யப்பட வேண்டிய தேவையில்லை என மல்வத்த மற்றும் அஸ்கிரிய மகாநாயக்க தேரர்களின் அறிக்கையானது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

பரிந்துரைக்கப்பட்டுள்ள புதிய அரசியலமைப்பானது மாகாணங்களுக்கு கூடுதல் அதிகாரப் பகிர்வை வழங்குவதாலும் மாகாண சபைகளையும் பிரதேச சபைகளையும் கட்டுப்படுத்துவதற்கான அதிகாரத்தை நாடாளுமன்றம் கொண்டிருக்கவில்லை என்பதாலும் இது அபாயகரமானதாக உள்ளதாக மல்வத்த பீடத்தைச் சேர்ந்த வணக்கத்திற்குரிய திம்புல்கும்புர் விமலதம்மா தேரர் ஊடகங்களிடம் தெரிவித்துள்ளார்.

தேரரின் இந்தக் கருத்தை ராமன்ன மற்றும் அமரபுர பீடங்களைச் சேர்ந்த மகாநாயக்கர்களும் ஏற்றுக்கொள்ள வேண்டும் என தேரர் வெளிப்படையாக வலியுறுத்தியுள்ளார்.

பௌத்த மதத்தின் மகாசங்கத்தைச் சேர்ந்த அனைவரும் புதிய அரசியலமைப்பு மற்றும் அரசியலமைப்பு சீர்திருத்தம் தொடர்பாக தமது எதிர்ப்பை வெளிப்படுத்த வேண்டும் எதிர்பார்க்கப்படுகிறது. ஆனாலும் சில தேரர்கள் இந்தக் கருத்திற்கு உடன்படாமலும் இதற்கு முரண்பாடான கருத்துக்களையும் வெளிப்படுத்தியுள்ளனர். குறிப்பாக நாயக்க தேரர்கள் பலர் புதிய அரசியலமைப்பை எதிர்க்க வேண்டும் என்கின்ற அறிக்கைகளுடன் உடன்படவில்லை.

‘சிறிலங்காவில் வாழும் பௌத்தர்கள் தமது 2500 ஆண்டுகள் பழமைவாய்ந்த வரலாறு தொடர்பாக கூறிவருகின்றனர். முழு உலகத்திற்கும் வழங்கக்ககூடிய பொக்கிசத்தைத் தாம் வைத்திருப்பதாக அவர்கள் நம்புகின்றனர். இதனால் சிறிலங்காவானது 2500 ஆண்டுகால பழமைவாய்ந்த பரந்த செல்வச் செழிப்பான கலாசாரத்தைக் கொண்டுள்ளதாக சிறிலங்கர்கள் பெருமை பேசுகின்றனர்.

Buddha statue  (2)

இத்தகைய வரலாற்றின் ஊடாக, நாட்டில் அன்பு, கருணை மற்றும் நேர்மை போன்ற நற்செயல்களை மேற்கொள்வதற்கு மாறாக அவர்கள் தீயசெயல்களை விதைத்து வருகின்றனர். சிறிலங்காவில் வாழும் பௌத்தர்கள் இங்கு வாழும் ஏனைய இனத்தவர்களுடன் வெறுப்பையும் புரிந்துணர்வின்மையையும் காண்பித்து வருகின்றனர். அவர்கள் கடந்த காலத்தைப் பற்றி பெருமை பேசுகின்ற போதிலும் தற்போது அதனை மதிக்கத்தக்க வகையில் பெறுமதி மிக்க எதையும் சிறிலங்காவில் வாழும் பௌத்தர்கள் முன்னெடுக்கவில்லை.

அவர்கள் எதிர்காலத்தில் புனிதமான தியாகங்களை மேற்கொள்ள வேண்டும் என அவர்கள் ஏங்குகின்ற போதிலும் நிகழ்காலத்தில் அவ்வாறான காரியங்களில் ஈடுபடவில்லை. முழு உலகமுமே பௌத்தமாக இருக்கும் எனவும் இதுவே மனித நாகரிகத்தின் இறுதியாக இருப்பதாகவும் தொடர்ந்தும் பௌத்தர்கள் உரிமை கொண்டாடுகின்றனர்.

பௌத்த சிங்களவர்கள் கடந்த கால வரலாற்றைப் பற்றி பெருமையாகப் பேசுகிறார்களே ஒழிய இந்த வரலாற்றை மேலும் சிறப்பாக்கக் கூடிய விடயங்களில் இவர்கள் உண்மையாக ஈடுபட முயற்சிக்கவில்லை’ என அண்மையில் இடம்பெற்ற கலந்துரையாடல் ஒன்றில் கல்விமான் ஒருவர் இவ்வாறு கருத்துரைத்திருந்தார்.

400 – 500 ஆண்டுகால குறுகிய வரலாற்றைக் கொண்டுள்ள சில நாடுகளின் வளர்ச்சியுடன் ஒப்பிடும் போது நீண்ட வரலாற்றைக் கொண்ட சிறிலங்காவின் அபிவிருத்தியானது மந்தமாகவே காணப்படுகின்றது. கடந்த கால வரலாற்றைப் பிழையாக ஆராய்வதிலும் கடந்த காலம் தொடர்பாக கனவு காண்பதிலும்  நேரத்தை செலவு செய்வதற்குப் பதிலாக சிறிலங்காவானது எவ்வாறு மற்றைய நாடுகளைப் போல் அபிவிருத்தியில் முன்னேற்றம் காண்பது என்பது தொடர்பாக ஆராயவேண்டும்.

கடந்த காலத்தின் வரலாற்றுப் பெருமைகளைக் கருத்திலெடுத்து அனைத்து சமூகத்தவர்களையும் ஒன்றிணைத்து நாட்டை முன்னேற்றுவதற்கான வழிவகையை ஆராயவேண்டும்.

‘புத்த பெருமான் ஒருபோதும் தனது தர்மப் போதனையை கோட்பாட்டுடனோ அல்லது நாட்டின் ஆட்சியுடனோ இணைத்துப் பிரச்சரம் செய்யவில்லை. நாட்டை எவ்வாறு ஆளவேண்டும் என புத்த பெருமான் ஒருபோது ஆட்சியாளர்களுக்கு ஆலோசனை வழங்கவில்லை.

காலம்  செல்லச் செல்ல பௌத்த மதகுருமார்களை அரசர்கள் தமது ஆட்சியில் இணைத்துக் கொண்டு அவர்களின் அறிவுரைகளை செவிசாய்த்தனர். இதனை இன்று நாம் தவறாகப் பிரயோகித்து வருகிறோம். இத்தவறான கற்பிதம் மூலம் நாட்டை ஆட்சி செய்வதற்கு நாட்டின் தலைவர்கள் மதத்தை அனுமதித்துள்ளனர்’ என விசுவாசமுள்ள பௌத்த மதத்தைச் சேர்ந்த ஒருவர் தெரிவித்தார்.

‘பௌத்தத்திற்கு முன்னுரிமை வழங்கப்பட வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. இந்த நாட்டில் பல பௌத்த பீடங்கள் தனித்தனியாகச் செயற்படுகின்ற நிலையில் நாங்கள் எவ்வாறு மதத்திற்கு முன்னுரிமை கொடுக்க முடியும்?

புத்த பெருமான் சமத்துவம் மற்றும் ஒற்றுமையை வலியுறுத்தினார். இந்நிலையில் இவ்வாறான பௌத்த பீடங்கள் எவ்வாறு உருவாக்கப்பட்டன? எவ்வாறான அடித்தளத்தைக் கொண்டு இவ்வாறான பௌத்த பீடங்கள் உருவாக்கப்பட்டுள்ளன?

இவ்வாறான பௌத்த பீடங்கள் சாதிய அடிப்படையில் உருவாக்கப்பட்டுள்ளன என்பது மிகவும் வேதனைக்குரியது. ஏனெனில் புத்த பெருமான் எப்போதும் சாதிய முறைமையை அடியோடு நிராகரித்திருந்தார். இந்நிலையில் 2500 பழமைவாய்ந்த பெருமைக்குரிய எமது வரலாறு இன்று தவறான முறையில் பயன்படுத்தப்படுவதால் இது நாட்டின் சுபீட்சமான எதிர்காலத்திற்கு அழிவை ஏற்படுத்துகிறது.  இது நாட்டின் முழுமையான கட்டமைப்பையும் நிர்மூலமாக்கியுள்ளது.

புதியவனவற்றைச் சிந்திக்கக் கூடிய தலைமுறை ஒன்றை நாம் உருவாக்க வேண்டிய தேவையுள்ளது. தற்போதைய அரசாங்கம் முன்னெடுத்து வரும் பாதையானது இதற்குப் பொருத்தமானது. புதிய அரசியலமைப்பை நடைமுறைப்படுத்த வேண்டும் என்பதில் தற்போதைய அரசாங்கம் ஒன்றிணைந்து செயற்படுகிறது. இது நன்மை பயக்கின்றது. ஆனாலும் இது தொடர்பாக இன்னமும் இறுதி முடிவு எட்டப்படவில்லை’ என அவர் மேலும் தெரிவித்தார்.

வழிமூலம்        -’ ceylon today ஆங்கிலத்தில்  – Dr. Vickramabahu Karunaratne மொழியாக்கம் – நித்தியபாரதி

1 comment:

  1. of course, no need new consitution for sri lanka and no need north-east merge.

    it is useless.

    we should support buddhist monks views.

    ReplyDelete

Powered by Blogger.