தனியார் பஸ்ஸில் இப்படியும் நடந்தது...
தனது தலைமுடி பிறிதொரு மாணவியின் புத்தகப்பை ஸிப்பில் மாட்டிக் கொண்டதால் பஸ்ஸிலிருந்து இறங்க முடியாமல் தவித்த மாணவியை பஸ்ஸிருந்து பலவந்தமாக கீழே இறக்கிவிட்டு அவரது தலைமுடி அறுந்து வேறாவதற்கு காரணமாகிய தனியார் பஸ் நடத்துநர் ஒருவரை பண்டாரகம பொலிஸார் கைது செய்துள்ளனர்.
தலைமுடி பிய்த்தெடுக்கப்பட்டதனால் தலையில் கடுமையான வேதனை ஏற்பட்டு குறித்த மாணவி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
பிலியந்தலையிலிருந்து பண்டாரகமை நோக்கி சேவையில் ஈடுபடும் தனியார் பஸ் ஒன்றில் இம்மாணவி சக மாணவர்கள் சிலருடன் பாடசாலை நிறைவடைந்து வீடு நோக்கி பயணித்துள்ளார்.
இந்நிலையில், தான் இறங்க வேண்டிய இடத்தை அண்மித்தவுடன் அம்மாணவியின் தலைமுடி பிறிதொரு மாணவியின் புத்தகப்பை ஸிப்பில் சிக்கியுள்ளது. அதன்போது மாணவியும் அவரது நண்பியும் தலைமுடியை ஸிப்பிலிருந்து பிரித்தெடுக்க முயற்சித்திருந்த போதிலும் முயற்சி பலனளிக்காது போயுள்ளது.
அவர் இறங்கும்வரை பஸ் நிறுத்தப்பட்டிருந்த நிலையில், பஸ் புறப்படுவதற்கு தாமதமாவதாக தெரிவித்த பஸ் நடத்துநர், மாணவியின் தலைமுடி ஸிப்பில் சிக்குண்டிருந்த நிலையிலேயே இரக்கமற்ற முறையில் அவரைப் பிடித்து வெளியே தள்ளியதில் சிக்குண்டிருந்த முடி உட்பட சுமார் 1 அடி நீளமான மாணவியின் தலைமுடி அறுந்துபோயுள்ளது.
இதனால் கடும் வேதனைக்குள்ளான மாணவி, வீட்டுக்கு சென்று தனது பெற்றோரிடம் விடயத்தை தெரிவித்ததுடன், அவரது பெற்றோர் இது தொடர்பில் பண்டாரகமை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்ததனையடுத்து மாணவியை வைத்தியசாலையில் அனுமதித்துள்ளனர்.
இந்நிலையில், முறைப்பாட்டுக்கமைய விசாரணைகளை மேற்கொண்டிருந்த பொலிஸார் சந்தேக நபரான 43 வயதுடைய பஸ் நடத்துநரை கைது செய்ததுடன் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
Post a Comment