Header Ads



ஒன்றுமே செய்யவில்லை என, எவரும் என்னை திட்டக்கூடாது - சண்டைக்கார தமிழன் மனோ

அமைச்சர் மனோ கணேசன் தன் உத்தியோகப்பூர்வ முகநூலில் (facebook) எழுதியுள்ளதாவது,

நுவரெலியாவில் எப்படி புதிய தமிழ் பெரும்பான்மை பிரதேச சபைகளை உருவாக்கினோமோ அப்படியே தலைநகர் கொழும்பு மாநகர சபையிலும் புதிய தமிழ் வட்டாரங்களை உருவாக்கினோம்.

அசோகா பீரிஸ் எல்லை மீள் நிர்ணய அறிக்கையின் படி கொழும்பு மாநகர சபையின் 66 வட்டார உறுப்புரிமையில் 20 தமிழ் உறுப்பினர் தெரிவு செய்யப்படலாம்.

2015ஆம் வருட அறிக்கையின் படி அது 10க்கு கீழே வந்துவிடும். முஸ்லிம் பிரதிநிதித்துவமும் அப்படிதான்.

அசோகா பீரிஸ் அறிக்கை தயாரிக்கப்பட்ட போது, நாம் கண்களில் விளக்கெண்ணை ஊற்றிக்கொண்டு கவனித்து கடுமையாக உழைத்ததால் இந்த பெறுபேறு. இதைத்தான் இப்போது பின்னோக்கி இழுத்து பிடுங்க பார்க்கிறார்கள். விடலாமா?

நுவரெலியாவில் எப்படி புதிய தமிழ் பெரும்பான்மை பிரதேச சபைகளை உருவாக்கினோமோ அப்படியே தலைநகர் கொழும்பு மாநகரசபையிலும் புதிய தமிழ், முஸ்லிம் வட்டாரங்களை உருவாக்கினோம். இப்படியே தெஹிவளை மாநகர, கொலன்னாவை, அவிசாவளை, வத்தளை நகர சபைகளிலும் புதிய தமிழ் வட்டாரங்கள் உருவாகியுள்ளன

இவற்றை நாம் எமக்காக செய்யவில்லை. தேர்தல் முறை மாற்றம், ஒருமுறை வந்தால் அது பல ஆண்டுகளுக்கு மேல் இருக்கப்போகிறது. ஆகவே எதிர்கால தலைமுறையையும் மனதில் கொண்டு செயற்பட்டுள்ளோம்.

இன்று நாங்கள் ஆளுமையுடனும், தூரப்பார்வையுடனும் உருவாக்கிய சபைகளிலும், வட்டாரங்களிலும்தான் எங்களை தினந்தோறும் காழ்ப்புணர்ச்சி கொண்டு திட்டி தீர்க்கும் "கோமா" தமிழர்களும், போட்டியிட போகிறார்கள் என்பதும், அவர்களுக்கும் விஷயம் தெரியாத நமது மக்களில் ஒரு சிலர் வாக்களிக்க போகிறார்கள் என்பதும் வேடிக்கையான உண்மைகள்.

எதிர் காலத்தில் நான் இல்லாதபோது எவரும் எனக்கு சிலை வைத்து கொண்டாட வேண்டாம். ஆனால், "மனோ கணேசன் என்று ஒரு அமைச்சன், கட்சி தலைவன் பதவியில் இருந்தான். அவன் பதவி அதிகாரத்தை பயன்படுத்தி அப்போது நம் சமூகத்துக்கு ஒன்றுமே செய்யவில்லை" என்று எவரும் என்னை திட்டிவிடக்கூடாது என்று மட்டுமே நான் விரும்புகிறேன்.

இதனால்தான் இன்று என் முதுகிற்கு பின்னாலே, சில பெரும்பான்மை அரசியல்வாதிகள், என்னை “சண்டைக்கார தமிழன்" என்று திட்டுகிறார்கள். இவர்கள் என்னை திட்டிவிட்டு போகட்டும். ஆனால், நம் எதிர்கால பரம்பரை என்னை திட்டாமல் இருக்கட்டும்.” என குறிப்பிட்டுள்ளார்.

3 comments:

  1. அமைச்சரின் சாமர்த்தியமான நடவடிக்கைகளுக்கு எமது பாராட்டுக்கள்.

    அத்தோடு அமைச்சரின் கீழ் இயங்கும் அரச கரும மொழிகள் தினைக்களத்தின் நடவடிக்கைள் சரியாக இடம்பெறுகிறதா என்பதில் சந்தேகம் ஒன்று உள்ளது.

    ஏனென்றால் அரச நிறுவனங்களின் பெயர்களை மும்மொழிகளிலும் பொறிப்பது ஒரு பொதுவான விடயம். அது கட்டிடங்களிலும் சரி வாகனங்களிலும் சரி. இதற்கு அரச கரும மொழிகள் தினைக்களத்தின் வகிபங்கு இன்றியமையாதது.

    அந்த வகையில் நான் தினந்தோறும் கானும் ஒரு தமிழ் மொழி பெயர்ப்பை பற்றி நினைக்கும் போது வேதனையாக உள்ளது. அதுவும் பாராளுமன்ற பொலிசாரின் வாகனத்தில் பொறிக்கப்பட வேண்டிய "பொலிஸ் பாராளுமன்ற பிரிவு" என்பதற்கு பதிலாக ஏதோ ஒன்று எழுதப்பட்டுள்ளது. பாராளுமன்றத்திலேயே எம் தாய்மொழியை இவ்வாறு கொன்றால் வெளியில் சொல்லவா வேண்டும் என நினைக்க தோணுகிறது.

    இத்தனைக்கும் எத்தனையோ தமிழ் மொழி பெயர்ப்பு ஜாம்பவான்கள் பாராளுமன்றத்தில் இருக்கிறார்கள் அவர்களில் ஒருவருடைய கண்களிலும் அது படவில்லையா?

    மதிப்பிற்குரிய மொழிக்கு பொறுப்பான அமைச்சர் அவர்களே எதை எதையெல்லாம் செய்து காட்டும் "சண்டைக்கார தமிழன்" என்ற பெயர் பெற்ற உங்களுக்கு எம் தாய்த்தமிழ் எம் பாராளுமன்றத்தில் கொல்லப்படுவதை ஜீரணிக்க முடியுமா என கேட்க விரும்புகிறேன் ஐயா.

    ReplyDelete
  2. உங்களின் சானக்கியத்தை எங்களின் சானக்கியர்களுக்கு சொல்லி கொடுங்கள்..

    ReplyDelete

Powered by Blogger.