கிந்தோட்ட வன்முறை - புலனாய்வு பொலிஸ் குழுக்கள், தனித்தனியாக விசாரணை
'காலி, கிந்தோட்டைப் பகுதியில் அண்மையில் இரு இனங்களுக்கிடையில் இடம்பெற்ற வன்முறைச் சம்பவங்கள் தொடர்பில் குற்றப் புலனாய்வு பொலிஸ் குழுக்கள் தனித்தனியாக விசாரணை நடத்திவருகின்றன."
- இவ்வாறு பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ருவன் குணசேகர தெரிவித்தார்.
அரச தகவல் திணைக்களத்தில் நேற்று நடைபெற்ற அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர் மாநாட்டின்போதே பொலிஸ் பேச்சாளர் இந்தத் தகவலை வெளியிட்டார்.
அவர் மேலும் கூறுகையில்,
'கிந்தோட்டைப் பகுதியில் 127 வன்முறைச் சம்பவங்கள் பதிவாகியுள்ளதுடன் அவை குறித்து விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. இந்தச் சம்பவத்துக்கு சிறிய அடிப்படைவாதிகள் குழுவினர்தான் காரணம். இந்தச் சம்பவங்கள் தொடர்பில் தவறான செய்திகளை வெளியிட்ட சமூக ஊடகங்கள் மற்றும் இணையதளங்கள் குறித்து விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. இவைகள் மீது விரைவில் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
கிந்தோட்டைச் சம்பவம் தொடர்பில் சமூக ஊடகங்களில் திரிபுபடுத்தப்பட்ட தகவல்கள் பரப்பப்பட்டன. கடந்த காலங்களில் குண்டுவெடிப்புகள் இடம்பெற்றபோது பிடிக்கப்பட்ட படங்கள் கிந்தோட்டைச் சம்பவத்துடன் தொடர்புபடுத்தி இணையதளங்களில் வெளியிடப்பட்டன.
இது குறித்து குற்றப்புலனாய்வு விசாரணைப் பிரிவினர் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
அவ்வாறான பொய்யான தகவல்களைப் பரப்பி இனங்களுக்கிடையில் முரண்பாடுகளை ஏற்படுத்துபவர்களைக் கைதுசெய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது" - என்றார்.
Post a Comment