Header Ads



தொலைபேசி காதலில், இப்படியும் கொள்ளையடிப்பு..!

பெண் ஒருவருடன் தொலைபேசியில் காதல் தொடர்பை வளர்த்துக் கொண்ட நபர் ஒருவர் குறித்த பெண்னை கராபிடிய நகரத்திற்கு வரவழைத்து அவரின் கழுத்திலிருந்த தங்க மாலையை கொள்ளையடித்துச் சென்றுள்ளார்.

தவளம பகுதியில் வசித்து வரும் 43 வயதுடைய குறித்த பெண் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்னர் காலி நகரத்திற்கு பஸ்ஸில் சென்றுள்ளார்.

குறித்த பஸ் பயணத்தில் அறிமுகமான நபர் அவரது தொலைபேசி எண்ணை துண்டுத் தாளில் எழுதி கொடுத்துள்ளார். அந்த பெண் வாங்க மறுக்க தொலை பேசி எண்ணை எழுதிய துண்டுத் தாளை அவரது மடியில் வைத்து விட்டு சென்றுள்ளார்.

பின்னர் குறித்த பெண் வீட்டிற்கு சென்று துண்டுத் தாளில் இருந்த எண்ணிற்கு அழைப்பை ஏற்படுத்தி பேசியுள்ளார். அதன் பின்னர் இருவருக்கும் நட்பு பூத்துள்ளது.

இந் நிலையில் குறித்த பெண் காலி கராபிடிய போதனா வைத்தியசாலைக்கு குறித்த தொலைபேசி நண்பருக்கும் தெரிவித்து விட்டு சென்றுள்ளார்.

கராபிடிய வைத்தியசாலையில் வைத்து இருவரும் சந்தித்து கொண்டுள்ளனர்.அப்போது குறித்த பெண்ணின் கழுத்தில் 2 பவுண் பெறுமதியான தங்க மாலை இருந்துள்ளது.

அங்கு அந்த நபர் குறித்த பெண்ணிடம் “உன் கழுத்தில் தொங்கும் தங்க மாலைக்கு பெண்டன் ஒன்றை வாங்கி வந்துள்ளேன் அதை என் கைகளாலேயே உன் கழுத்தில் போட்டு விட ஆசைப் படுகிறேன் அதனால் உன் கழுத்திலுள்ள மாலையை கழட்டித் தா” என கூறியுள்ளார்.

தனது காதலர் ஆசையாக தனக்கு பெண்டன் வாங்கி வந்துள்ளார் என நினைத்து கழுத்திலிருந்த தங்க மாலையை கழட்டி கொடுத்துள்ளார்.

மாலையை கழட்டி கையில் கொடுக்கவும் குறித்த நபர் தங்க மாலையினுள் பெண்டனை கோர்த்து தன் வசம் வைத்துக் கொண்டு “வைத்தியசாலையை விட்டு போகும் போது அழகான இடத்தில் வைத்து உன் கழுத்தில் போட்டு விடுகிறேன் அது வரை இந்த மாலை என்னிடம் இருக்கட்டும்” என்று கூறியுள்ளார்.

பிறகு குறித்த நபர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள ஒருவரை பார்க்க செல்ல வேண்டும் என கூறி இருவரும் செல்ல முயற்சிக்கும் போது அது பார்வையாளர் நேரமாக இருந்தமையால் அனுமதி அட்டையின்றி உள்ளே செல்ல முடியாது என கூறி தனக்கு பாதுகாப்பு உத்தியோகத்தர்களை தெரியும் என கூறி தான் மட்டும் உள்ளே சென்று வருவதாக கூறி பெண்னை விட்டுச் சென்றுள்ளார்.

வெகு நேரமாகியும் குறித்த நபர் வராததனால் அங்கும் இங்குமாக தேடியுள்ளார். ஒரு கட்டத்தில் தான் ஏமாற்றப்பட்டதாக உணர்ந்த பெண் வைத்தியசாலை பொலிஸாரிடம் முறைப்பாடு செய்துள்ளார்.

குறித்த கொள்ளை சம்பவம் தொடர்பாக காலி பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

No comments

Powered by Blogger.