கிரிக்கெட் போட்டியில் வெற்றிபெற, ஆன்மீகவாதிகளின் ஆசீர்வாதம் மட்டும் போதாது - சந்திமால் அதிரடி
கிரிக்கெட் போட்டியில் வெற்றிபெற ஆன்மீகவாதிகளின் ஆசீர்வாதம் மட்டும் போதாது திறமையும் வேண்டும் என்று இலங்கை டெஸ்ட் அணித் தலைவர் தினேஷ் சந்திமால் தெரிவித்தார்.
ஐக்கிய அரபு எமிரேட்ஸுக்கு சென்று பாகிஸ்தானுடன் விளையாடிய இலங்கை இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை முழுமையாக வென்று சாதித்தது.
இந்தத் டெஸ்ட் தொடரை சந்திமால் தலைமையிலான இலங்கை அணி வெல்வதற்கு எனது ஆசீர்வாதமே காரணம் என்று பெண் ஆன்மீகவாதி ஒருவர் பேஸ்புக்கில் பதிவேற்றிய படம் ஒன்று பலத்த சர்ச்சையை உருவாக்கியது.
இந்நிலையில் நேற்று இலங்கைக் கிரிக்கெட் நிறுவனக் கேட்போர் கூடத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போது சந்திமாலிடம் இதுகுறித்து கேள்விகள் எழுப்பப்பட்டன.
அதில் டெஸ்ட் தொடருக்கு உங்களுக்கு கிடைத்த ஆசீர்வாதம் ஒருநாள் தொடருக்கு கிடைக்கவில்லையா என்று கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த சந்திமால், நான் ஆசீர்வாதம் பெற்றது என்னுடைய தனிப்பட்ட விடயம். எந்த மதகுருவாக இருந்தாலும் நான் ஆசீர்வாதம் பெறத் தயாராகவே இருக்கிறேன். அதற்காக ஆசீர்வாதத்தை மட்டும் வைத்துக்கொண்டு போட்டியில் வெற்றிபெற்றுவிட முடியாது. அவை எல்லாவற்றையும் விட திறமைதான் முக்கியம் என்று ஆன்மீகத்தை நாடிய சர்ச்சைக்கு முற்றுப் புள்ளிவைத்தார் சந்திமால்.
இந்த ஊடகவியலாளர் சந்திப்பில் இலங்கை கிரிக்கெட்டின் மூன்று வகையான போட்டிகளுக்கும் நியமிக்கப்பட்டிருந்த மூன்று தலைவர்களும் கலந்துகொண்டிருந்தனர். இதில் சந்திமால் மட்டுமே வெற்றித் தலைவராக அங்கு பிரதான மேசையில் அமர்ந்திருந்தார்.
காரணம் டெஸ்ட் அணித் தலைவர், பாகிஸ்தானுக்கு எதிரான டெஸ்ட் தொடரை முழுமையாக வென்று, அத்தோடு இலங்கை அணி விளையாடிய முதலாவது பகலிரவு டெஸ்டையும் வெற்றிபெற்று சாதனை படைத்தது.
ஆனாலும் ஒருநாள் அணித் தலைவர் தரங்கவும், இருபதுக்கு 20 கிரிக்கெட் அணித் தலைவர் திஸர பெரேராவும் தலைவர்களாக சோபிக்கவில்லை. தொடர் தோல்வி குறித்து கருத்து தெரிவித்த உபுல் தரங்க, எமது தோல்விக்கு முக்கிய காரணம் நான் உட்பட அனைத்து துடுப்பாட்ட வீரர்களும்தான்.
இந்த தோல்வியிலிருந்து நாம் மீண்டு வர வேண்டும் என்று தெரிவித்தார். திஸர பெரேரா பேசுகையில், இளம் அணியொன்றை எனக்கு தந்திருந்தார்கள்.
ஆனால் அவர்கள் சிறப்பான ஆதரவைக் கொடுத்தனர். அவர்களை இன்னும் பயிற்சியளித்து எடுத்தால் சிறந்த வீரர்களாக உருவெடுப்பார்கள் என்றார். அடுத்து எமது நோக்கமெல்லாமல் இந்தியாவுக்கு எதிரான தொடர் மீதுதான் என்று பேசி முடித்தார் உபுல் தரங்க.
Post a Comment