பேரியல் அஷ்ரப் சந்தேகப்படவேண்டிய, அவசியம் இல்லை - பஷீர்
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் ஸ்தாபகத் தலைவர் அஷ்ரபின் மரணம் தொடர்பான எனது தேடுதலில் பேரியல் அஷ்ரப் சந்தேகப்படவேண்டிய அவசியம் இல்லை நான் அரசியலில் யாருக்கும் பின்னால் போனவனல்ல. அஷ்ரபின் மரணம் தொடர்பான எனது தேடுதலுக்கு பேரியல், அவரது ஒரே மகன் மற்றும் குடும்பத்தின் உதவியை நாடி நிற்கிறேன் என ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் முன்னாள் தவிசாளரும் முன்னாள் அமைச்சருமான பஷீர் சேகுதாவூத் தெரிவித்தார். மர்ஹூம் அஷ்ரபின் துணைவியாரும் முன்னாள் அமைச்சருமான பேரியல் அஷ்ரப், தனது கணவரின் மரண அறிக்கை விவகாரம் தொடர்பில் ‘விடிவெள்ளி’க்கு தெரிவித்த கருத்துகளுக்குப் பதிலளிக்கையிலே முன்னாள் அமைச்சர் சேகுதாவூத் இவ்வாறு குறிப்பிட்டார்.
அவர் தொடர்ந்தும் கருத்து தெரிவிக்கையில், ‘மெடம் பேரியல் அஷ்ரப் எனக்கும் மகனுக்கும் கவலையாக இருக்கிறது எனத் தெரிவித்துள்ளார். மறைந்த தலைவரின் மனைவி என்ற வகையிலும் அவரது ஒரே மகன் என்ற வகையிலும் அவர்களின் மனவேதனை மற்றும் கவலையை என்னால் அறிய முடிகிறது, உணர முடிகிறது, எனக்கும் கவலையாக இருக்கிறது. நான் மாத்திரமல்ல முழு முஸ்லிம் சமூகமும் கவலைப்படுகிறது.
மர்ஹூம் அஷ்ரப் ஒரு கணவராக, ஒரு தந்தையாக இருந்ததை விடவும் ஒரு காத்திரமான சமூகத் தலைவராகவும் இருந்துள்ளார். அதனால் அவருக்கு என்ன நடந்தது என்பதை அறிந்துகொள்வதற்கு சமூகம் ஏங்கிக் கொண்டிருக்கிறது.
17 வருட காலம் என்பது நீண்டகாலம் தான். உண்மையிலேயே நீண்ட இடைவெளி ஏற்றுக்கொள்கிறேன்.
தலைவர் அஷ்ரப் 2000 ஆம் ஆண்டு செப்டெம்பர் 16 ஆம் திகதி ஹெலிகொப்டர் விபத்தில் காலமானார். அதன்பின்பு இவ்விபத்து தொடர்பில் 2001 ஆம் ஆண்டு ஜனவரி 11 ஆம் திகதி முதன் முதலிலும் பின்பு பல தடவைகளும் பாராளுமன்றத்தில் கேள்வியெழுப்பியிருக்கின்றேன். விபரம் கேட்டிருக்கின்றேன். பின்பு ஒரு நீண்ட இடைவெளி ஏற்பட்டு விட்டது.
உயர்பதவியில் இருக்கும் போது மரணம் தொடர்பில் ஏன்தேடவில்லை? என மெடம் கேட்டிருக்கிறார். தலைவர் அஷ்ரபின் மரணம் தொடர்பான உணர்வு என்னுள் இருந்து கொண்டே இருந்தது. உயர்பதவியில் இருக்கும்போதே இந்த இடைவெளியேற்பட்டது.
இந்த விடயம் கண்களை மறைக்கலாம். ஆனால் கருத்துகளை மறைக்க முடியாது. எனக்குள் ஓடிக்கொண்டிருக்கும் உணர்வுகளுக்கு விடைகொடுப்பதென்றால் அவரது மரணத்துக்கான விடைதெரியவேண்டும். அவரது மரணத்தில் சந்தேகப்பட வேண்டிய சக்தி, ஓர் உயர்ந்த சக்தியாக எனக்குள் நடமாடிக்கொண்டே இருக்கிறது. மெடம் சந்தேகிக்க வேண்டிய அவசியமேயில்லை. எனது தேடுதலுக்கு உதவியும் ஒத்தாசையும் வழங்க வேண்டும்.
தற்போது தகவல் அறியும் சட்டமூலம் அமுலில் உள்ளது. இந்த சட்டமூலம் ஊடாக நாங்கள் மர்ஹூம் அஷ்ரபின் மரணம் தொடர்பாக அறிந்து கொள்ளாது வேறு எதைத்தான் அறிந்துகொள்வது? என்றார். மர்ஹூம் அஷ்ரப் 2000 ஆம் ஆண்டு செப்டெம்பர் மாதம் 16 ஆம் திகதி ஹெலிகொப்டர் விபத்தில் மரணமானதையடுத்து அப்போதைய ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்கவினால் மரணம் தொடர்பில் ஆராய ஆணைக்குழுவொன்று நியமிக்கப்பட்டது. அவ் ஆணைக்குழுவின் அறிக்கை பகிரங்கப்படுத்தப்படவில்லை.
இந்நிலையில் அவ் ஆணைக்குழுவின் அறிக்கையின் பிரதியொன்றினைப் பெற்றுக்கொள்ள தகவல் அறியும் சட்டத்தின் ஊடாக முன்னாள் அமைச்சர் பஷீர் சேகுதாவூத் முயற்சிகளை மேற்கொண்டார். ஆனால் அது நிராகரிக்கப்பட்டது. பின்பு தகவல் அறியும் ஆணைக்குழுவில் இது தொடர்பில் மேன்முறையீடு செய்தார் என்றாலும் குறித்த அறிக்கை தேசிய சுவடிகள் காப்பகத்திலிருந்து காணாமற் போயுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Post a Comment