நேற்று அளுத்கம, இன்று கிந்தோட்டை, நாளை...?
இலங்கை முஸ்லிம்களின் வரலாற்றில் மற்றுமொரு கறுப்பு அத்தியாயம் கடந்த வாரம் எழுதப்பட்டுவிட்டது. காலி மாவட்டத்தின் கிந்தோட்டை பிரதேசத்தில் கடந்த வெள்ளிக்கிழமை இடம்பெற்ற வன்முறைகள் தென்னிலங்கை முஸ்லிம்களின் வரலாற்றிலும் கறைபடிந்த ஒன்றாகவே அமைந்துவிட்டன.
காலாகாலமாக ஒருவரோடொருவர் பின்னிப் பிணைந்து வாழ்ந்து வரும் காலி மாவட்ட சிங்கள- முஸ்லிம் மக்கள் மத்தியில் மிக மோசமானதொரு கறையையே இந்தச் சம்பவங்கள் தோற்றுவித்துள்ளன. சாதாரணமாக இடம்பெற்ற ஒரு விபத்தை பெரும் இன முறுகலாக மாற்றி பாரிய இழப்புக்களுக்கு வித்திட்டமை எந்தவிதத்திலும் ஏற்றுக் கொள்ள முடியாததாகும்.
உண்மையில் இந்த அசம்பாவிதங்கள் தடுத்து நிறுத்தப்பட்டிருக்கக் கூடியவையாகும். பொலிசாரும் பிரதேச அரசியல் , சிவில் மற்றும் மதத் தலைவர்களும் இதுவிடயத்தில் கோட்டை விட்டுள்ளனர்.
''நாங்களும் தவறிழைத்துவிட்டோம்'' எனக் கூறிவிட்டு பொலிஸ் மா அதிபர் நழுவிவிட முடியாது. அவ்வாறு அவர் நடந்து கொள்வாராயின் கடந்த அரசாங்கத்தின் ஆட்சிக் காலத்தில் அரசியல்வாதிகளின் அடிமைகளாக விளங்கிய உயர் பாதுகாப்பு அதிகாரிகளுக்கும் இவருக்குமிடையில் எந்த வேறுபாடுகளுமில்லாது போய்விடும்.
அசம்பாவிதங்கள் நடந்த மறுநாள் நாம் கிந்தோட்டைக்கு விஜயம் செய்த போது மக்கள் மிகுந்த அச்சத்தில் இருந்தார்கள். அவர்களது முகங்களில் சோகம் இழையோடியது. கூட்டுக் குடும்பம் போல் வாழ்ந்த இரு சமூகங்களையும் பிரித்து ஒருவரையொருவர் சந்தேகப்பட வைத்துவிட்டார்களே என மக்கள் ஏங்கினர். தாம் முழுக்க முழுக்க நம்பிக்கை வைத்திருந்த பாதுகாப்புத் தரப்பினர் நம்பிக்கைத் துரோகமிழைத்துவிட்டதாக மக்கள் பகிரங்கமாகவே குற்றம்சாட்டினர்.
''நாங்கள் உங்களை ஒருபோதும் நம்பமாட்டோம். அல்லாஹ்விடம் மட்டுமே பாதுகாவல் தேடுவோம்'' என கிந்தோட்டை பிரதேச முஸ்லிம் இளைஞர்கள் கடுந்தொனியில் அரசியல்வாதிகளிடமும் பாதுகாப்பு உயரதிகாரிகளும் கூறியது இன்றும் காதுகளில் ஒலிக்கிறது.
கடந்த அரசாங்கம் இனவாதத்தை நேரடியாகவே வளர்த்தது என்றால் இந்த அரசாங்கம் மறைமுகமாக வளர்க்கிறதா எனும் கேள்வி இப்போது எழுகிறது. அளுத்கம வன்முறைகளைத் தொடர்ந்து இந்த நாட்டு முஸ்லிம்கள் எடுத்த மிக உறுதியான நிலைப்பாடு தான் இனவாத சிந்தனை கொண்ட ஆட்சியாளர்களை வீட்டுக்கு அனுப்பி ஆட்சி மாற்றம் ஒன்றுக்கு வித்திட்டது.
துரதிஷ்டவசமாக நல்லாட்சி எனும் போர்வைக்குள்ளும் இனவாத நச்சுப் பாம்புகள் படுத்துறங்கத்தான் செய்கின்றன என்பதை கிந்தோட்டை சம்பவம் நன்குணர்த்தி நிற்கிறது.இதன் பின்னால் அரசியல் மறைகரங்கள் செயற்பட்டுள்ளன என்பதை தெளிவாக உணர முடிகிறது. பதற்றம் நிலவிக் கொண்டிருந்த சமயம் பொலிசாரையும் விசேட அதிரடிப் படையினரையும் வாபஸ் வாங்கச் செய்துவிட்டு, வெளிப் பிரதேசங்களிலிருந்து வன்முறைக் கும்பலை பஸ்களில் ஏற்றிவந்து, விகாரையில் கூட்டம் கூட்டி, முஸ்லிம்களின் வீடுகளை தேடித் தேடித் தாக்கும் வரைக்கும் சட்டத்தின் கைகளைக் கட்டிப் போட்டது யார்? இதற்கான பதில் பகிரங்கப்படுத்தப்பட வேண்டும்.
இது விடயத்தில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஒரு சிறு கண்டன அறிக்கையைத் தானும் வெளியிடவில்லை என்பது முஸ்லிம்களை அதிருப்தியில் ஆழ்த்தியுள்ளது. அமெரிக்காவில் லாஸ் வெகாஸ் துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தை தனது டுவிட்டரில் கண்டித்த ஜனாதிபதி, தனது நாட்டில் தன்னை வாக்களித்து சிம்மாசனத்தில் ஏற்றிய மக்களுக்கு இழைக்கப்பட்ட அநீதியைக் கண்டிப்பதற்கு முன்வராததன் பின்னணிதான் என்ன?
எது எப்படியிருப்பினும் இந்த சம்பவங்கள் தொடர்பில் பாரபட்சமற்ற விசாரணைகள் நடத்தப்பட்டு குற்றவாளிகள் யாராகவிருப்பினும் உச்சபட்ச தண்டனைகள் வழங்கப்பட வேண்டும்.
அளுத்கம சம்பவங்கள் நடந்து 3 வருடங்களாகிவிட்ட போதிலும் இதுவரை நீதி கிட்டவில்லை. அவ்வாறான சூழ்நிலையில் கிந்தோட்டை விவகாரத்திற்கும் நீதி கிட்டாமல் போகுமோ என பிரதேச மக்கள் அஞ்சுகின்றனர்.
தற்போது கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள சந்தேக நபர்களை விடுவிப்பதற்கான மறைமுக அழுத்தங்கள் வழங்கப்படுவதாகவும் அறிய முடிகிறது. சமாதானப் பேச்சுக்கள் என்ற போர்வையில் வன்முறையாளர்களை விடுவிப்பதானது நிச்சயம் இனவாத சக்திகளுக்கு மேலும் வாய்ப்பாகவே அமையும் என்பதை மறந்துவிடக் கூடாது.
முஸ்லிம் சமூகத்திற்கும் இந்த சம்பவம் படிப்பினை தருவதாகும். பிற சமூகங்களுடன் இணைந்து வாழ்கின்ற போது ஏற்படும் சிறு சிறு முறுகல்கள், விபத்துகளின் போது அவற்றை மிகக் கவனமாகவும் தூரதிருஷ்டியுடனும் கையாளக் கூடிய வகையில் அரசியல், சிவில் மற்றும் மார்க்கத் தலைமைகள் முன்னின்று செயற்பட வேண்டும். இன்றேல் இவ்வாறான பாரதூரமான விளைவுகளுக்கு முகங்கொடுக்க வேண்டி வரும் என்பதை மறந்துவிடக் கூடாது. இது தொடர்பில் நாடெங்கிலுமுள்ள கிராமங்களில் மிகுந்த விழிப்புடனும் அவதானத்துடனும் நாம் நடந்து கொள்ள வேண்டும். மக்கள் அறிவூட்டப்பட வேண்டும்.
'முஸ்லிம் சமூகத்தின் முதன்மைக் குரல்' என்ற வகையில் விடிவெள்ளி இன்றைய இதழ் மூலமாக தனது கடமையைச் சரிவரச் செய்திருக்கிறது என நம்புகிறோம். தம்புள்ளை பள்ளிவாசல் விவகாரம், அளுத்கம வன்முறைகள் போன்றே கிந்தோட்டை விவகாரத்துக்கும் கூடுதல் முக்கியத்துவம் கொடுத்து அதிக பக்கங்களில் இன்றைய இதழை வெளியிட்டுள்ளோம். இது முஸ்லிம் சமூகத்திற்கு ஏற்பட்டுள்ள பாதிப்பை உரத்துச் சொல்வதற்கான சிறந்த ஆவணமாகவும் பயன்படும்.
அதேபோன்று ஊடக தர்மத்தின் அடிப்படையில் பாதிக்கப்பட்ட சிங்கள் மக்களின் குரல்களையும் இதில் பதிவு செய்துள்ளோம். இன்ஷா அல்லாஹ் தொடர்ந்தும் கிந்தோட்டை மக்களுக்கு நீதியைப் பெற்றுக் கொடுப்பதற்காக விடிவெள்ளி குரல் கொடுக்கும்.
எதிர்வரும் காலங்களில் இவ்வாறான அசம்பாவிதங்களிலிருந்து முஸ்லிம் சமூகத்தை அல்லாஹ் பாதுகாப்பானாக.
விடிவெள்ளி பத்திரிகையில் வெளியான ஆசிரியர் தலையங்கம் இது
ஆம்,நடந்து முடிந்த திட்டமிட்ட சதி,இவை அனைத்தும் அரசியல் பின்
ReplyDeleteபுலம் உள்ளது என்பது உறுதி.இதன்
பின்னஅர் கொழும்பு சேக்ஹ்ஆசாத்சாலி
சட்டத்தரனி நூர்டீன்,அனைத்து முஸ்லிம்
அரசியல் கட்சிகள் எல்லோரும் கிந்தேரட் டைக்க்கு பட்டை எடுப்பாகள் எலெக்சன்
முடியும் வரைக்கும்.இதுதான் இந்நரட்டீன் முஸ்லிம்களுக்கு எழுதப்படாத சட்டம்.