ஜிந்தோட்ட வன்முறைகள் மீதான, கண்டனப் பிரேரணை ஒத்திவைப்பு
/பாறுக் ஷிஹான்/
காலி ஜிந்தொட்ட பகுதியில் முஸ்லிம் மக்கள் மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதல் சம்பவங்களை கண்டித்தும் அதற்கு நீதியான விசாரணையை கோரியும் சிறப்பு கண்டனப்பிரேரனை ஒன்று வடக்கு மாகாண சபையில் இன்று முன்மொழியப்பட்டது.
எனினும் அவை உறுப்பினர்களின் எதிர்ப்பின் காரணமாக அந்தப் பிரேரனை அடுத்த அமர்வுக்கு ஒத்திவைக்கப்பட்டது
வடமாகாண சபையின் 110ஆவது அமர்வு இன்று(24) யாழ் கைதடியிலுள்ள பேரவைச் செயலகத்தில் அவைத் தலைவர் சி.வீ.கே.சிவஞானம் தலைமையில் இடம்பெற்றது
இதன்போது ஜிந்தொட்ட உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் முஸ்லிம் மக்கள் மீது அண்மையில் திட்டமிட்டு மேற்கொள்ளப்பட்ட தாக்குதல் சம்பவங்களை கண்டிக்கும் சிறப்பு பிரேரணை ஒன்றை அவைத்தலைவர் சி.வீ.கே.சிவஞானம் அவையில் முன்மொழிந்தார்.
வவுனியாவில் இடம்பெற்ற சம்பவம் திட்மிட்ட ரீதியில் இடம்பெற்றிருக்க வாய்ப்பில்லை. எனவே அதை தவிர்த்து விட்டு இந்தப் பிரேரணையை நிறைவேற்றுமாறு வவுனியா மாவட்ட உறுப்பினர் ப.சத்தியலிங்கம் தெரிவித்தார்.
இந்த விடயத்தில் பொலிஸ் விசாரணைகள் இடம்பெற்றுவரும் நிலையில் இவ்வாறான பிரேரணைகள் மேலும் வன்முறைகளை தூண்டும் விதமாக அமைந்துவிடும் என்ற ரீதியில் எதிர் கட்சி தலைவர் சி.தவராச உள்ளிட்ட ஏனைய சில உறுப்பினர்களும் கருத்துக்களை தெரிவித்தனர்.
இந்த விடயத்தில் அவசர முடிவுகள் எடுக்காமல் அடுத்த அமர்வுக்கு இதை ஒத்திவைக்குமாறு முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் வழங்கிய ஆலோசனைக்கமைவாக இந்தவிடயம் அடுத்த அமர்வுக்கு ஒத்திவைக்கப்பட்டது
Post a Comment