Header Ads



புலிகளின் மரண தண்டனையை, மாற்றியமைத் நீதிபதி இளஞ்செழியன்

தமிழீழ நீதிமன்றினால் மரண தண்டனை வழங்கப்பட்ட மரண தண்டனை மற்றும் ஆயுள் தண்டனையை யாழ்.மேல்.நீதிமன்ற நீதிபதி மா.இளஞ்செழியன் மாற்றியுள்ளார்.

தமிழீழ நீதிமன்றினால் மரண தண்டனை வழங்கப்பட்டவருக்கு ஏழாண்டுகள் கடூழிய சிறைத்தண்டனையும், ஆயுள் தண்டனை வழங்கப்பட்டவருக்கு ஐந்தாண்டுகளுக்கு ஒத்திவைக்கப்பட்ட இரண்டாண்டு சிறைத்தண்டனையும் வழங்கி நீதிபதி மா. இளஞ்செழியன் தீர்ப்பளித்துள்ளார்.

குறித்த வழக்கு நேற்று யாழ். மேல் நீதிமன்றில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போதே இந்த தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

யாழ்.உடுப்பிட்டி பிரதேசத்தில் கடந்த 2006ஆம் ஆண்டு ஜூன் மாதம் 30ஆம் திகதி துரைராஜாசிங்கம் என்பவர் படுகொலை செய்யப்பட்டார்.

குறித்த படுகொலை சம்பவம் தொடர்பில் இரண்டு சந்தேகநபர்களை பொலிஸார் இனம் கண்டு கைது செய்வதற்கு முன்பாக தமிழீழ விடுதலைபுலிகள் அவர்கள் இருவரையும் கைது செய்து வன்னியில் தமிழீழ நீதிமன்றில் முற்படுத்தினார்கள்.

தமிழீழ நீதிமன்றில் நடைபெற்ற வழக்கு விசாரணையின் போது, இருவரையும் குற்றவாளியாக கண்ட நீதிமன்றம் ஒருவருக்கு மரண தண்டனையும் மற்றவருக்கு ஆயுள் தண்டனையும் விதித்து தீர்ப்பளித்து இருந்தது.

அந்த நிலையில் யுத்தம் தீவிரமடைந்ததை அடுத்து விடுதலைப்புலிகளின் சிறையில் இருந்து ஆயுள் தண்டனை கைதி தப்பிச் சென்றுள்ளார்.

விடுதலைப் புலிகளின் சிறையில் இருந்து தப்பி இராணுவ கட்டுப்பாட்டு பகுதிக்கு வந்த பின்னர் மீண்டும் கொலை குற்றத்திற்காக பொலிஸாரால் கைது செய்யப்பட்டார்.

மற்றைய நபர் தொடர்பில் அவரிடம் விசாரணைகளை மேற்கொண்ட போது அவருக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டதா இல்லையா என்பது தொடர்பில் பொலிஸாரினால் கண்டறிய முடியவில்லை.

தொடர்ந்து கைது செய்த நபரை பொலிஸார் நீதிமன்றில் முற்படுத்தினர். மற்றைய நபர் இல்லாமலே வழக்கு விசாரணைகள் நீதிமன்றில் நடைபெற்றது.

அதனை தொடர்ந்து மன்றில் முன்னிலையான நபரை முதலாம் எதிரியாகவும் மற்றைய நபரை இரண்டாம் எதிரியாகவும் பெயர் குறிப்பிட்டு சட்டமா அதிபர் திணைக்களத்தால் யாழ்.மேல் நீதிமன்றில் குற்றபகிர்வு பத்திரம் தாக்கல் செய்யப்பட்டது.

யாழ்.மேல் நீதிமன்றில் நீதிபதி மா. இளஞ்செழியன் முன்னிலையில் குறித்த வழக்கு விசாரணைகள் நடைபெற்றது வழக்கினை அரச சட்டவாதி நாகரத்தினம் நிஷாந்த் நெறிப்படுத்தினார்.

அதன் போது இந்த வழக்கில் இரண்டாம் எதிரியாக பெயர் குறிப்பிடப்பட்டு உள்ளவருக்கு விடுதலை புலிகளின் நீதிமன்றம் மரண தண்டனை விதித்து இருந்தது.

அவருக்கான மரண தண்டனை நிறைவேற்றப்பட்டு உள்ளது என்பதனை நியாயமான சந்தேகத்திற்கு அப்பால் எண்பிக்கப்படவில்லை. அதனால் குறித்த நபர் உயிருடன் இருந்தால் அவரை உடனடியாக கைது செய்யுமாறு பகிரங்க பிடியாணை பிறப்பிக்கப்படுகின்றது.

மேலும் இக் கொலையானது தீடிரென ஏற்பட்ட சண்டையில் ஏற்பட்டது என்பதனை வழக்கு தொடுனர் தரப்பு சாட்சியங்கள் ஊடாக நிரூபிக்கப்பட்டு உள்ளமையினால் , இதனை கைமோச கொலையாக மன்று காண்கிறது.

அதன் அடிப்படையில் தமிழீழ நீதிமன்றினால் மரண தண்டனை விதிக்கப்பட்ட இரண்டாம் எதிரிக்கு ஏழாண்டு கடூழிய சிறைத்தண்டனையும், 5ஆயிரம் ரூபாய் தண்டப் பணம் விதிக்கப்படுகின்றது. அதனை கட்டத் தவறின், ஒரு மாத கால கடூழிய சிறைத்தண்டனையை அனுபவிக்க வேண்டும்.

தமிழீழ நீதிமன்றினால் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்ட முதலாம் எதிரிக்கு இரண்டாண்டுகள் கடூழிய சிறைத்தண்டனை விதிக்கப்படுகின்றது. அதனை ஐந்தாண்டுகளுக்கு ஒத்திவைக்கபப்டுகின்றது. என நீதிபதி தனது தீர்ப்பில் தெரிவித்தார்.

No comments

Powered by Blogger.