Header Ads



காங்கேசன்துறை சீமெந்து தொழிற்சாலையை மீளமைக்க, தமிழ் கூட்டமைப்பே தடை

காங்கேசன்துறை சீமெந்து தொழிற்சாலையை மீள நிர்மாணிப்பதற்காக தான் எடுத்த முயற்சிகளுக்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர்  எந்தவொரு ஒத்துழைப்பையும் வழங்கவில்லையென கைத்தொழில் மற்றம் வாணிப அலுவல்கள் அமைச்சர் ரிஷாட் பதியுதீன் தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் நேற்று புதன்கிழமை இடம்பெற்ற கைத்தொழில் மற்றும் வாணிப அலுவல்கள் அமைச்சு மீதான குழுநிலை விவாதத்தில் உரையாற்றிய தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் வன்னி மாவட்ட எம்.பி.யான சார்ள்ஸ் நிர்மலநாதன் முன் வைத்த குற்றச்சாட்டுகளுக்கே அமைச்சர் ரிஷாட் பதியுதீன் இவ்வாறு பதிலளித்தார்.

நல்லாட்சி அரசு அமைந்ததன் பின்னர் நீங்கள் வடக்கில் எத்தனை கைத்தொழிற்சாலைகள் அமைத்தீர்கள்?  வடக்கிலுள்ள காங்கேசன்துறை சீமெந்து தொழிற்சாலை, பரந்தன் இரசாயனக் கூட்டுத்தாபனம், ஒட்டுசுட்டான் ஓட்டுத்தொழிற்சாலை போன்றவற்றையாவது மீள அமைத்தீர்களா? என சார்ள்;ஸ் நிர்மலநாதன் எம்.பி. குற்றச்சாட்டுகளை அடுக்கிச் சென்றார்.

இதன்போது குறுக்கிட்ட அமைச்சர் ரிஷாட் பதியுதீன் காங்கேசன்துறை சீமெந்து தொழிற்சாலையை மீள அமைப்பதற்கான ஆதரவு, ஆலோசனைகளை நான் தமிழ்த் தேசியக்கூட்டமைப்பினரிடம் கேட்டேன். ஏனைய வடக்கு மாகாண அரசியல் வாதிகளிடமும் கேட்டேன். ஆனால், யாருமே எனக்கு ஒத்துழைப்பு வழங்கவில்லை. அதில் பல சிக்கல்கள் இருப்பதாக கூறினார்கள். எனவே என்மீது பழிபோடாதீர்கள் என்றார்.

இதற்கு சார்ள்ஸ் நிர்மலநாதன் பதிலளிக்கையில், நீங்கள் எமது தலைமைகளுடன் அல்லது வடக்கு மாகாண சபையுடன் மட்டுமே பேசாது மக்கள் பிரதிநிதிகளான எங்களுடனும் பேச வேண்டும். அப்போது தான் எங்களால் பிரச்சினைகளை முன்வைக்கமுடியும். என்றார்.

No comments

Powered by Blogger.