முஸ்லிம்களின் கோரிக்கையை, தமிழர்கள் ஏற்க வேண்டும் - சம்பந்தன்
தற்போது புதிய அரசியலமைப்புக்கான இடைக்கால அறிக்கையே வெளிவந்துள்ளது. இதில் மாற்றங்கள் நிகழ்வதற்கு இடமுண்டு. ஆகவே இறுதி வரைபுக்காக நீண்டதூரம் பயணிக்க வேண்டியுள்ளதாக தெரிவித்த எதிர்க்கட்சித்தலைவரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவருமான இரா.சம்பந்தன் தமிழ் மக்கள் ஏற்காத எந்த விடயத்தினையும் தாமும் ஏற்கப்போவதில்லை எனவும் திட்டவட்டமாக அறிவித்துள்ளார்.
அதிகாரப்பகிர்வு என்பது இனம்சார்ந்த விடயம் அல்ல. அனைத்து தரப்பினருக்கும் அவசியமானது எனக்குறிப்பிட்ட சம்பந்தன் வடகிழக்கு இணைப்பு விடயத்தில் வாக்கெடுப்பு நடத்தப்படுகின்றபோது முஸ்லிம்களின் நியாயமான கோரிக்கைகளை தமிழ் மக்கள் ஏற்றுக்கொண்டு தமிழ் பேசும் மக்களாக வாக்களிக்க வேண்டும் என்றும் கோரியுள்ளார்.
இலங்கை தமிழரசுக்கட்சியின் மத்திய செயற்குழுக் கூட்டம் நேற்று ஞாயிற்றுக்கிழமை வவுனியாவில் உள்ள வன்னி இன் விடுதியில் முற்பகல் 10 மணிக்கு ஆரம்பமானது. இக் கூட்டத்தில் இலங்கை தமிழரசுக்கட்சியின் சிரேஷ்ட தலைவரும் எதிர்க்கட்சித்தலைவருமான இரா.சம்பந்தன் விசேட உரையாற்றுகையிலேயே மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
அவர் அங்கு தொடர்ந்தும் உரையாற்றுகையில், நாட்டில் அரசியலமைப்புக்கள் உருவாக்கப்பட்டபோது தமிழ் மக்கள் அதில் பங்கேற்றிருக்கவில்லை. தமிழ் மக்கள் புறக்கணிக்கப்பட்ட நிலையிலேயே அரசியலமைப்புக்கள் உருவாக்கப்பட்டுள்ளன. இவ்வாறான நிலையில் 2015ஆம் ஆண்டு ஆட்சி மாற்றம் இடம்பெற்றபோது இரண்டு பிரதான கட்சிகளும் இணைந்து ஆட்சியை அமைத்துள்ளன. இதுவொரு நல்ல சந்தர்ப்பமாகும். இவ்வாறான சந்தர்ப்பம் கடந்த காலத்தில் ஏற்பட்டிருக்கவில்லை. அந்த சந்தர்ப்பத்தினை நாம் நழுவவிடக்கூடாது. சரியாக பயன்படுத்த வேண்டும். அதற்காகவே நாம் புதிய அரசியலமைப்பு பணிகளுக்கான செயற்பாடுகளுக்கு ஆதரவளித்து வருகின்றோம்.
நாட்டின் உயர் நீதிமன்றத்தில் எமது கட்சியின் கொள்கைகளை காரணம் காட்டி வழக்கு தொடரப்பட்டிருந்தது. சேனாதிராஜா அப்போது செயலாளராக இருந்தமையால் அவருக்கு எதிராக வழக்கை தொடர்ந்தார்கள். அதில் தமிழரசுக் கட்சியின் சமஷ்டிக் கொள்கை நாட்டை பிரிப்பதாக உள்ளது. ஆகவே அதனை தடைசெய்ய வேண்டும் என்று அறிவிக்க வேண்டும் என்று கூறினார்கள்.
ஆனால் அந்த வழக்கில் ஆஜரான ஜனாதிபதி சட்டத்தரணிகளான கனகஈஸ்வரன், சுமந்திரன் ஆகியோர் சர்வதேச நாடுகளில் உள்ள சமஷ்டி வடிவங்களை உதாரணமாகக் கூறினார்கள். பல்வேறு வாதங்களை முன்வைத்தார்கள். அதன் பிரகாரம் சமஷ்டி பிரிவினை அல்ல என்று நீதிபதிகள் தீர்ப்பை அறிவித்தார்கள். இந்த தீர்ப்பினை அறிவித்தவர்கள் சிங்கள நீதிபதிகள் என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும். அதேநேரம் நீதித்துறையின் சுயாதீனம் தொடர்பாகவும் கவனத்தில் கொள்ள வேண்டும்.
தற்போது வெளிவந்துள்ள புதிய அரசியலமைப்புக்கான இடைக்கால அறிக்கையில் வார்த்தைகளை மையமாக வைத்து விமர்சனம் செய்கின்றார்கள். ஒருமித்த நாடு என்பது நாடு ஒருமித்து, பிளவுபடாதிருப்பதையே குறிக்கின்றது. அது ஆட்சி முறைமையைக் குறிக்கவில்லை. அதனை புரிந்து கொள்ள வேண்டும். எமது விடயங்களை நாமே கையாளக்கூடிய வகையில் அதிகாரங்கள் பகிரப்பட வேண்டும் என்பதையே கோருகின்றோம். வழங்கப்பட்ட அதிகாரங்கள் மீளப்பெறப்பட்டு விடக்கூடாது என்பதில் உறுதியாக இருக்க வேண்டும் என்பதே எமது நிலைப்பாடுமாகும். அந்த வகையில் இடைக்கால அறிக்கையில் அதிகாரப்பகிர்வு தொடர்பாக விடயங்கள் முன்னேற்றகரமாக காணப்படுகின்றன.
அதிகாரங்கள் பகிரப்பட வேண்டும் என்பது தனியே தமிழ் மக்கள் சார்ந்தவொரு விடயம் அல்ல. அதிகாரங்களை சிங்கள மக்கள் உள்ளிட்ட அனைவரும் பயன்படுத்த வேண்டும். அந்த வகையில் மத்திய அரசாங்கத்திடமிருந்து அதிகாரங்கள் பகிரப்பட வேண்டும். ஆகவே அதிகாரப்பகிர்வு என்ற விடயத்தினை இனரீதியாக பார்க்க கூடாது. அது நாட்டின் அனைத்து மக்களுக்கும் உரியதானதொன்றாகவே பார்க்க வேண்டும். இந்த மனநிலை அனைத்து மக்கள் தரப்பினரிடத்திலும் ஏற்பட வேண்டும்.
அடுத்ததாக பௌத்த மதத்திற்கு முதலிடம் வழங்கப்பட்டுள்ளமை தொடர்பாக கூறுகின்றார்கள். பெளத்த மதத்திற்கு முதலிடம் வழங்கப்பட்டுள்ளமைக்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு எதிர்ப்பு தெரிவிக்கவில்லை என்று விமர்சிக்கின்றார்கள். இடைக்கால அறிக்கையில் பௌத்த மதத்திற்கு முதலிடம் வழங்கப்பட்டுள்ள அதேநேரம் ஏனைய மதங்களுக்கும் சமத்துவம் அளிக்கப்பட வேண்டும் என்றே குறிப்பிடப்பட்டுள்ளது. இதனால் ஏனைய மதங்களுக்குமான உரிய இடம் அளிக்கப்பட்டுள்ளது.
அடுத்ததாக வடக்கு, கிழக்கு விடயம். இந்திய – இலங்கை ஒப்பந்தத்தின் பிரகாரம் வடக்கு – கிழக்கு மாகாணங்கள் இணைந்து இருந்தன. தொடர்ச்சியாக 18 ஆண்டுகளாக இந்த மாகாணங்கள் இணைந்தே செயற்பட்டன. இருப்பினும் நீதிமன்றத்தின் தீர்ப்பின் பிரகாரம் 18 ஆண்டுகளுக்கு பின்னர் இந்த இரண்டு மாகாணங்களும் தனித்தனியாக்கப்பட்டுள்ளன என்பதை வடக்கு, கிழக்கு தொடர்பாக கருத்து வெளியிடுபவர்கள் புரிந்துகொள்ள வேண்டும்.
வடக்கும் கிழக்கும் இணைக்கப்பட வேண்டும். அவ்வாறு இணைக்கப்படுவதற்கு வடக்கு, கிழக்கில் ஒரு சர்வஜன வாக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும். அவ்வாறு சர்வஜன வாக்கெடுப்பு நடத்தப்படுகின்ற போது சகோதர முஸ்லிம் சமூகத்தினால் முன்வைக்கப்படும் நியாயமான கோரிக்கையை தமிழ் மக்கள் ஏற்றுக்கொள்ள வேண்டும். அது கரையோர மாவட்டமாக இருக்கலாம். அல்லது நிலத்தொடர்பற்ற தனியலகாக இருக்கலாம். அவர்களின் நியாயமான கோரிக்கையை தமிழ் மக்கள் ஏற்றுக்கொள்ளும் அதேநேரம் இரு சமூகங்களும் தமிழ் பேசும் சமூகங்களாக ஒன்றுபட்டு வாக்களிக்கும் கருமத்தில் பங்கேற்க வேண்டும். தற்போது இடைக்கால அறிக்கையொன்றே முன்வைக்கப்பட்டுள்ளது. அது தொடர்பான விவாதங்கள் அரசியலமைப்பு சபையிலே நடைபெற்று வருகின்றன. இதில் சில பல மாற்றங்கள் ஏற்படலாம். புதிய அரசியலமைப்புக்கான இறுதி வரைபுக்காக இன்னும் பயணிக்க வேண்டியுள்ளது. அவ்வாறு இறுதி வரைபு செய்யப்பட்ட பின்னர் அந்த வரைபுடன் நாம் மக்களிடத்தில் செல்வோம். மக்கள் அதனை ஏற்கவில்லையென்றால் நாம் நிச்சயமாக அதனை ஏற்றுக்கொள்ளமாட்டோம்.
ஆகவே தற்போது ஏற்பட்டுள்ள சந்தர்ப்பத்தினை குலைத்துவிடக்கூடாது. குழப்பி விடக்கூடாது. நாம் இறுதிவரையில் முயற்சிக்க வேண்டும். இந்த நல்ல சந்தர்ப்பத்தினை பயன்படுத்தி கருமங்களை துரிதமாக முன்னெடுக்க வேண்டியுள்ளது.
இடைக்கால அறிக்கை தொடர்பாக சிங்கள மக்கள் மத்தியில் கூட்டு எதிர்க்கட்சியினர் தவறான பரப்புரைகளைச் செய்கின்றார்கள். எமது தரப்பில் உள்ளவர்களில் சிலர் இடைக்கால அறிக்கை தொடர்பில் விளங்கியும் விதண்டாவாதம் செய்கின்றார்கள். அதேபோன்று இன்னும் சிலர் இடைக்கால அறிக்கை தொடர்பாக விளங்காது விதண்டாவாதம் செய்கின்றார்கள். இந்த சந்தர்ப்பத்தினை குழப்பாது அனைவரும் ஒன்றாக இக்கருமங்களை முன்னெடுக்க வேண்டியது அவசியம் என்றார்.
Mr Sampanthan,
ReplyDeleteஅடுத்த தேர்தலில், நீங்கள் படுதோல்வி அடைவீர்கள் என்று தமிழர்கள் சொல்கிறார்கள்.
சுமந்திரனின் கதையும் முடிய போகுது.
புதிய அரசிலமைப்பு, இணைப்புக் கோஷங்கள் எல்லாம் வெறும் சுத்து மாத்து.
சம்பந்தர் ஐயா!
ReplyDeleteஅடிப்படையில் நீங்கள் கிழக்கத்தியன். வடக்கத்தியான் உங்களை அங்கீகரிக்கமாட்டார்கள் என்பதை விக்கி ஐயாவின் போக்கு உங்களை உசாரடையச் செய்திருக்கும். அது இவ்வாறிருக்க அதிகாரப் பகிர்வு என்பது இனம்சார்ந்தது அல்ல என்றும் பின்னர் தமிழர்கள் தமது தீர்வை பெற்றுக்கொள்ளும் வரை குழப்பாமல் இருக்க வேண்டும் என்று சொல்வதும் முஸ்லிம்களின் கோரிக்கையையும் கருத்தில் எடுக்க வேண்டும் என்றும் தொடர்பு இல்லாமல் கருத்துரைப்பது தங்களின் உள்ளக்கிடக்கையை காட்டுவதாகவும் இருக்கிறது.
எனவே எங்களைக்காட்டி நீங்கள் தீர்வைப் பெற வேண்டுமென்றால் கிழக்கை வடக்குடன் இணைக்கும் கதையை விட்டுவிடுங்கள். இல்லையென்றால் அரோ..............
Please forget about NE merger.
ReplyDelete