8 வருடங்களாக, என்ன செய்கிறார்கள்..?
முஸ்லிம் தனியார் சட்டத்தில் மேற்கொள்ளப்பட வேண்டிய திருத்தங்கள் தொடர்பான அறிக்கை காலதாமதமின்றி அவசரமாக நீதியமைச்சுக்கு அனுப்பி வைக்கப்பட வேண்டுமென நீதியமைச்சின் செயலாளர், முஸ்லிம் தனியார் சட்டத்தில் மேற்கொள்ளப்பட வேண்டிய திருத்தங்களை சிபாரிசு செய்வதற்கென நியமிக்கப்பட்டுள்ள குழுவிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.
இந்நிலையில் முஸ்லிம் தனியார் சட்டத் திருத்த சிபாரிசுக் குழு, அதன் தலைவர் ஓய்வு பெற்ற முன்னாள் நீதியரசர் சலீம் மர்சூப் தலைமையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை கூடியபோது குழுவின் சில உறுப்பினர்களால் தயாரிக்கப்பட்ட மற்றுமோர் அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. இவ் அறிக்கையை அகில இலங்கை ஜம் இய்யத்துல் உலமா சபையின் தலைவர் அஷ்ஷெய்க் எம்.ஐ.எம். ரிஸ்வி முப்தி குழுத்தலைவரிடம் கையளித்தார். அவ்வறிக்கை 10 விடயங்கள் தொடர்பான அறிக்கையாகும்.
குறிப்பிட்ட அறிக்கையில் கையொப்பமிட்டவர்கள் அனைவரும் கடந்த 26 ஆம் திகதி நடைபெற்ற கூட்டத்துக்கு சமுகமளிக்காமையினாலும் கையொப்பமிட்டிருந்த ஒரு உறுப்பினர் சுகயீனம் காரணமாக கூட்டத்திலிருந்து வெளியேறிச் சென்றமையாலும் குறித்த அறிக்கை தொடர்பில் கலந்துரையாடப்படவில்லை.
முஸ்லிம் தனியார் சட்டத் திருத்த சிபாரிசுக் குழு ஏற்கனவே திருத்தங்கள் தொடர்பில் அறிக்கையொன்றினைத் தயாரித்து உறுப்பினர்களின் கையொப்பங்களைப் பெற்றுக்கொள்ளத் தயாராக இருந்த நிலையில் குழுவின் உறுப்பினர்கள் சிலரால் மற்றுமொரு அறிக்கை தயாரிக்கப்பட்டு கையளிக்கப்பட்டதால் இந்தப் பணி மேலும் தாமதமானது.
எனவே, ஓய்வு பெற்ற முன்னாள் நீதியரசர் சலீம் மர்சூப் தலைமையில் நியமிக்கப்பட்டுள்ள குழு தனது அடுத்த அமர்வினை எதிர்வரும் டிசம்பர் மாதம் 20 ஆம் திகதிக்கு பிற்போட்டதுடன் அன்றைய தினம் ஏற்கனவே தயாரிக்கப்பட்டுள்ள அறிக்கையில் உறுப்பினர்களின் கையொப்பங்களைப் பெற்றுக்கொள்ளவுள்ளதுடன், புதிதாகக் குழுவின் சிலரால் கையளிக்கப்பட்டுள்ள அறிக்கையுடன் இரண்டு அறிக்கைகள் நீதியமைச்சர் தலதா அத்து கோரளவிடம் சமர்ப்பிக்கப்படவுள்ளன.
இதேவேளை நீதியமைச்சரிடம் இரு அறிக்கைகள் சமர்ப்பிக்காது ஓர் அறிக்கை சமர்ப்பிக்கப்படுவதே சிறந்தது என குழு கருதுவதால் எதிர்வரும் டிசம்பர் மாதம் 3 ஆம் திகதி கூடி இதுதொடர்பில் ஆராயப்படவுள்ளது.
இதே வேளை, முஸ்லிம் தனியார் சட்டத் திருத்த சிபாரிசுக் குழு தனது அமர்வுகளை நீதியமைச்சின் கேட்போர் கூடத்திலே நடத்த வேண்டும் என நீதியமைச்சரின் செயலாளர் ஜயமான்ன குழுவின் தலைவர் சலீம் மர்சூபை கடிதம் மூலம் கோரியுள்ளார். இக்கடிதம் கடந்த செப்டெம்பர் மாதம் 19 ஆம் திகதி அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
முஸ்லிம் தனியார் சட்டத்தில் மேற்கொள்ள வேண்டிய திருத்தங்களை சிபாரிசு செய்வதற்கு 2009 ஆம் ஆண்டு அப்போதைய நீதியமைச்சர் மிலிந்த மொரகொடவினால் ஓய்வு பெற்ற முன்னாள் நீதியரசர் சலீம் மர்சூபின் தலைமையில் இக்குழு நியமிக்கப்பட்டது.
எட்டு வருட காலமாகியும் குறிப்பிட்ட குழு தனது பணியினை பூரணப்படுத்தாது காலதாமதப்படுத்தி வருவதால் பல விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டு வந்தன.
இந்த நடவடிக்கைகளைத் துரிதப்படுத்துவதற்காக 2016 அக்டோபர் மாதம் அப்போதைய நீதியமைச்சர் விஜயதாச ராஜபக் ஷவினால் அமைச்சரவை உப குழுவொன்றும் நியமிக்கப்பட்டது. இக்குழுவில் அமைச்சர்களான கபீர் ஹாசிம், ரவூப் ஹக்கீம், ரிசாத் பதியுதீன், பைசர் முஸ்தபா, எம்.எச்.ஏ.ஹலீம், சந்திராணி பண்டார, சுதர்சனி பெர்ணான்டோ புள்ளே ஆகியோர் அங்கம் வகிக்கின்றனர்.
ARA.Fareel
Justice delayed is justice denied. Our Muslims leaders have always been slow in everything. This is one of many tasks entrusted tonthe so called leaders. What would an average person think...incapable leaders or inability...
ReplyDeletePlease Do not forget to Call also BBS with ACJU. Its very Important for our ACJU ...
ReplyDelete