Header Ads



3 வயது ஹிமாஸ் அஹ்தி, குழியில்விழுந்து மரணம்


அட்டாளைச்சேனை பிரதேச செயலகத்திற்குட்பட்ட அஷ்ரஃப் நகர் கிராமத்தில் நேற்று (27) காலை விளையாடிக் கொண்டிருந்த சிறுவன் ஒருவன் மலசல கூடத்திற்காக வெட்டப்பட்டிருந்த குழியில் வீழ்ந்து உயிரிழந்துள்ளதாக அக்கரைப்பற்று பொலிஸார் தெரிவித்தனர்.

அம்பாறை மாவட்டத்தில் கடந்த இரண்டு தினங்களாக பெய்து வந்த அடை மழை காரணமாக வீட்டின் ஓரமாக வெட்டப்பட்டிருந்த குழியில் நீர் நிரம்பியிருந்தது. இந்நிலையில் அப்பக்கமாக விளையாடிக் கொண்டிருந்த மூன்று வயதுடைய சவுறுதீன் ஹிமாஸ் அஹ்தி என்ற சிறுவன் குழியில் தவறி வீழ்ந்து மரணமடைந்துள்ளார்.

இச்சம்பவம் நேற்றுக் காலை (27) 11 மணியளவில் இடம்பெற்றுள்ளது. வீட்டு முற்றத்தில் விளையாடிக் கொண்டிருந்த சிறுவனைக் காணாது தேடியபோது அச்சிறுவன் வைத்திருந்த தடியொன்று நீரில் மிதப்பதை உறவினர் கண்டுள்ளனர்.

அக்குழியினுள் தேடியபோது சிறுவன் உயிரிழந்து சடலமாக காணப்பட்டதாக மரணமடைந்த சிறுவனின் குடும்பத்தவர்கள் தெரிவித்தனர். மலசலகூடம் அமைப்பதற்காக வெட்டப்பட்டிருந்த குழியில் நிர்மாணப்பணி இடம்பெறவிருந்த போதிலும் அடை மழை காரணமாக மலசலகூட நிர்மாணப்பணி பிற்போடப்பட்டதாக உறவினர்கள் தெரிவித்தனர்.

No comments

Powered by Blogger.