Header Ads



ஜெனிவாவில் 177 பரிந்துரைகளை ஏற்ற சிறிலங்கா, 53 பரிந்துரைகளை நிராகரித்தது

ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் சிறிலங்கா தொடர்பான மூன்றாவது பருவ, பூகோள கால மீளாய்வின் போது, உலக நாடுகளால் சமர்ப்பிக்கப்பட்ட 53 யோசனைகளை சிறிலங்கா அரசாங்கம் நிராகரித்துள்ளது.

கடந்த புதன்கிழமை ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் பேரவையின் சிறிலங்கா தொடர்பான மூன்றாவது பருவ, பூகோள கால மீளாய்வு அமர்வு இடம்பெற்றது.

இதன்போது, மனித உரிமைகள் தொடர்பாக சிறிலங்கா நிறைவேற்ற வேண்டிய 230 பரிந்துரைகள் பல்வேறு நாடுகளால் முன்வைக்கப்பட்டிருந்தன.

இந்த நிலையில், நேற்று ஐ.நா மனித உரிமைகள் பேரவையில், பேரவையின் சிறிலங்கா தொடர்பான மூன்றாவது பருவ, பூகோள கால மீளாய்வின் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

இதன்போது, உரையாற்றிய சிறிலங்காவின் பிரதி அமைச்சர் ஹர்ஷ டி சில்வா, பேரவையில் முன்வைக்கப்பட்ட 230 பரிந்துரைகளில், 177 பரிந்துரைகளை மாத்திரம் சிறிலங்கா அரசாங்கம் ஏற்றுக் கொள்வதாக கூறினார்.

ஏனைய 53 பரிந்துரைகளும் சிறிலங்கா அரசாங்கத்தினால் நிராகரிக்கப்பட்டுள்ளன.

எனினும், ஏனைய பரிந்துரைகள் நிராகரிக்கப்பட்டதாக பிரதி அமைச்சர் ஹர்ஷ டி சில்வா வெளிப்படையாக கூறவில்லை. 53 பரிந்துரைகளையும் கவனத்தில் கொண்டுள்ளதாக மாத்திரம் அவர் குறிப்பிட்டார்.

அத்துடன், தன்னார்வ அடிப்படையில் 12 வாக்குறுதிகளையும் சிறிலங்கா வழங்கியிருப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.

No comments

Powered by Blogger.