தங்காலையில் முகாமிட்டுள்ள மஹிந்த அணி, தேர்தல் வியூகத்தில் மும்முரம், ஆர்ப்பாட்டத்திற்கும் ஏற்பாடு
கூட்டு எதிர்க் கட்சியின் தலைவர்கள் மற்றும் உறுப்பினர்கள் தங்கல்லையில் முகாமிட்டுள்ளனர். இன்று முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக் ஷ தலைமையிலான கூட்டு எதிர்க்கட்சியின் தலைவர்களுக்கும் மஹிந்த ராஜபக் ஷவுக்கும் இடையில் முக்கிய சந்திப்பு ஒன்றும் இடம்பெறவுள்ளது.
கூட்டு எதிர்க்கட்சியில் அங்கம் வகிக்கும் அனைத்து பங்காளி கட்சிகளின் தலைவர்களும் இதில் கலந்து கொள்ள உள்ளனர். இந்த சந்திப்பில் முன்னாள் பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பஷில் ராஜபக் ஷ, தேசிய சுதந்திர முன்னணியின் தலைவர் விமல் வீரவன்ச , ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தவிசாளர் பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ் மற்றும் மாஜன எக்சத் பெரமுனவின் தலைவர் தினேஷ் குணவர்தன உள்ளிட்ட முக்கிய தலைவர்கள் கலந்துகொள்ள உள்ளனர்.
ஜப்பான் விஜயத்தை நிறைவு செய்து கொண்டு நாடு திரும்பியுள்ள மஹிந்த ராஜபக் ஷ கூட்டு எதிர்க் கட்சியின் தலைவர்களை சந்தித்து முக்கிய விடயங்கள் குறித்து கலந்துரையாட உள்ளார். எதிர்வரும் உள்ளூராட்சி மன்றத் தேர்தல் மற்றும் தற்போதைய அரசியல் சூழலில் நல்லாட்சி அரசாங்கத்திற்கு கடினமாக நெருக்கடிகளை கொடுப்பதற்கான எதிர்கால அரசியல் செயற்பாடுகள் குறித்து இன்றைய கலந்துரையாடலில் அவதானம் செலுத்தப்பட உள்ளது.
கூட்டு எதிர்க்கட்சியினர் மீதான தொடர் அடக்குமுறைகள் மற்றும் எதிர்வரும் உள்ளூராட்சிமன்ற தேர்தல் உள்ளிட்ட அனைத்து இனங்களையும் பிரதிநிதித்துவம் செய்யும் வகையிலான வலுவான கூட்டணி அமைத்தல் என்பன இச் சந்திப்பில் பேசப்படும் என்றும் தெரியவருகிறது
அதே போன்று தங்கல்லை சிறைச்சாலையில் விளக்கமறியலில் உள்ள பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ உள்ளிட்டவர்கள் நாளை திங்கட் கிழமை ஹம்பாந்தோட்டை நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட உள்ளனர். .
விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ உள்ளிட்டவர்களின் விடுதலையை வலியுறுத்து நாளை திங்கட் கிழமை ஹம்பாந்தோட்டையில் பாரிய ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட உள்ளமை குறிப்பிடத்தக்கது.
Post a Comment