ஆளில்லா விமானங்களினால், இலங்கைக்கு அச்சுறுத்தல் - விமானப்படைத் தளபதி
ட்ரோன் எனப்படும், ஆளில்லா விமானங்களினால் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதாக விமானப்படைத் தளபதி எயர்மார்ஷல் கபில ஜெயம்பதி தெரிவித்துள்ளார்.
சிறிலங்கா விமானப்படைத் தலைமையகத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த அவர்,
‘தற்போதைய சூழ்நிலையில், தொழில்நுட்பம் விரைவாக வளர்ந்து வருகிறது. இந்த நிலையில், ட்ரோன்கள் மற்றும் ஏனைய ஆளில்லா விமானங்களினால் தேசிய பாதுகாப்புக்கு ஏற்படக் கூடிய அச்சுறுத்தல்களைத் தடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
உலகம் முழுவதிலும் ட்ரோன்கள் மற்றும் அதுபோன்ற பறக்கும் பொருட்கள், பாதுகாப்புக்கான பிந்திய அச்சுறுத்தலாக மாறியுள்ளன.
தொழில்நுட்ப வளர்ச்சி வாழ்க்கையை இலகுபடுத்துகிறது. ஆனால், ட்ரோன் போன்ற பொருட்கள், எந்தவொரு நாட்டினதும் பாதுகாப்புக்கு பாரிய அச்சுறுத்தலாக மாறியுள்ளன.
பயங்கரவாதிகள் மற்றும் துரோகிகள் சமூகத்தில் அச்சத்தை உருவாக்க ட்ரோன்களைப் பயன்படுத்தலாம்.
இந்த அச்சுறுத்தல்கள் எவ்வாறு குறைக்கலாம் என்பதில் நாம் கவனத்தில் கொள்ள வேண்டும்.
தற்போது ஒரு கிலோவுக்கு அதிக எடையுள்ள ட்ரோன்களை வைத்திருப்பவர்கள் அதனைப் பயன்படுத்துவதற்கு, சிவில் விமானப் போக்குவரத்து அதிகாரசபையின் அனுமதியைப் பெற வேண்டும்.
சிறிலங்கா விமானப்படையும், இதற்கு அனுமதி வழங்கப்படுவதை கண்காணித்து வருகிறது.
இதுபோன்ற அச்சுறுத்தலை ஏற்படுத்தும் விடயங்கள் தொடர்பாக அனைத்துலக படைகளுடன் விமானப்படை நிபுணத்துவத்தை பரிமாறிக் கொள்கிறது” என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
Post a Comment