சிரியாவில் பட்டினி அகோரம் - நூற்றுக்கணக்கான குழந்தைகள் மரணிக்கும் அபாயம்
சிரிய அரச படையின் முற்றுகையில் உள்ள கிழக்கு கூத்தா பகுதியில் இருந்து வெளியாகி இருக்கும் தீராத ஊட்டச்சத்து குறைபாட்டால் பாதிக்கப்பட்ட சிசு ஒன்றின் புகைப்படம் அங்கு நூற்றுக்கணக்கான குழந்தைகள் பட்டினியில் வாடுவதை காட்டுகிறது.
தலைநகர் டமஸ்கஸின் கிழக்கு பகுதியான இங்கு ஜனாதிபதி பஷர் அல் அசாத் அரசு 2013 தொடக்கம் முற்றுகையில் ஈடுபட்டிருக்கும் நிலையில் சிறு அளவான நிவாரண உதவிகளே போய்ச்சேர்ந்துள்ளன.
சிரியாவின் ஆறு ஆண்டு சிவில் யுத்தத்தில் மோதலில் ஈடுபட்டிருப்போருக்கு ஆதரவான தரப்புகளுக்கு இடையில் கடந்த மே மாதம் எட்டப்பட்ட நான்கு மோதலற்ற வலயங்களில் கிழக்கு கூத்தாவும் ஒன்றாகும்.
எனினும் இந்த பகுதிக்கான உணவு விநியோகங்கள் அரிதாகவே இடம்பெறுவதோடு நூற்றுக்கணக்கான குழந்தைகள் கடுமையான ஊட்டச்சத்து குறைபாட்டால் பாதிக்கப்பட்டிருப்பதாக மருத்துவ அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர்.
இந்நிலையில் விலா எலும்புகள் தெரிய, தோல் சுருங்கிய 34 நாள் சிசு சஹாரா டப்தாவை பெற்றோர் கிழக்கு கூத்தாவின் ஹமூரியா மருத்துவமனைக்கு கொண்டுவந்துள்ளனர்.
அந்த பிராந்தியத்தில் ஏ.எப்.பி செய்தி நிறுவனத்திற்கு பணியாற்றும் செய்தியாளர் எலும்புகள் தெரிய, பெருத்த கண்களுடன் இருக்கும் அந்த பெண் குழந்தையை புகைப்படம் எடுத்துள்ளார். அந்த பிராந்தியத்தில் இருக்கும் ஏனைய குழந்தைகள் போல் இந்த குழந்தையும் ஊட்டச்சத்து குறைபாட்டால் பாதிக்கப்பட்டிருப்பதாக மருத்துவர்கள் குறிப்பிட்டனர்.
குழந்தையின் தாய்க்கு தாய்ப்பாலில் ஊட்ட குறைபாடு இருப்பதோடு தந்தை இறைச்சிக் கடை ஒன்றில் மிகக் குறைவான வருவாயை ஈட்டுகிறார்.
குழந்தை சஹாரா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அடுத்த தினமான ஞாயிறு காலையில் இறந்ததோடு தனது ஒரே குழந்தையை அடக்கம் செய்ய அந்த பெற்றோர் அருகாமை கப்ர் பெட்னா சிறு நகருக்கு எடுத்துச் சென்றனர்.
Inna lillahi wainna ilaihi rajuoon
ReplyDelete