Header Ads



கட்டார் சந்தை, இலங்கைக்கு முக்கியமான ஒன்றாகும் - ரிஷாட் பதியுதீன்


“கட்டாருடன் வலுவான வர்த்தக மற்றும் பொருளாதார தொடர்புகளை மேம்படுத்த   இலங்கை நாட்டங்கொண்டுள்ளதாகவும் இரண்டு நாடுகளும் நீண்ட கால பொருளாதார வர்த்தக உறவுகளை கொண்டிருப்பதால் அதனை நீடிக்க பரஸ்பர செயற்பாடுகளை முன்னெடுக்க வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது. “

கட்டார் டோஹாவில் நடைபெற்ற “ கட்டார் – இலங்கை வர்த்தக சம்மேளன கூட்டத்தில்”  கைத்தொழில் மற்றும் வர்த்தக அமைச்சர் ரிஷாட் பதியுதீன் உரையாற்றுகையில்   இவ்வாறு தெரிவித்தார். 

கட்டார் வர்த்தக சம்மேளனம் டோஹாவிலுள்ள இலங்கை தூதரகத்துடன் இணைந்து   ஏற்பாடு செய்த இந்த வர்த்தக சம்மேளனக்கூட்டத்தில் விசேட அதிதிகளில் ஒருவராக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பங்கேற்றிருந்தார். இந்த வர்த்தக சம்மேளனக்கூட்டத்தில் அமைச்சர்களான ராஜித சேனாரத்ன, ரவூப் ஹக்கீம், பைசர் முஸ்தபா, மற்றும் எம்.பி களான முஜீபுர் ரஹ்மான், காதர் மஸ்தான் முன்னாள் மாகாணசபை உறுப்பினர் அசாத் சாலி உட்பட கட்டார் பொருளாதார மற்றும் வர்த்தக அமைச்சர் ஷேய்க் அஹ்மத் பின் ஜாஸ்சிம் பின் மொஹம்மத் அல்-தானி  மற்றும்   ராஜ தந்திரிகள், முதலீட்டாளர்கள், வர்த்தகர்கள் ஆகியோர் பங்கேற்றிருந்தனர். 

அமைச்சர் றிஷாட் பதியுதீன் கூறியதாவது,

இந்த வர்த்தக சம்மேளனம் ஒரு முக்கியமான தருணத்தில் உருவாக்கப்பட்டு இருப்பது தற்போது இருக்கும் பொருளாதார தொடர்புகளை மேலும் ஆழமாக்கி விரிவுபடுத்த உதவும். அத்துடன் பங்குடமையை ஏற்படுத்தி மற்றவரின் சந்தையிலுள்ள சந்தர்ப்பங்களை சாதகமாக பயன்படுத்த வழி ஏற்படுத்தும்.

கட்டார் சந்தை இலங்கைக்கு முக்கியமான ஒன்றாகும். அங்கே நாம் இதுவரை ஈடுபடாத பல பிரமாண்டமான துறைகளை எமது வர்த்தக சமூகத்தினர் சாதகமாக பயன்படுத்த நிறைய சந்தர்ப்பங்கள் உள்ளன. 

எனவே இந்த சம்மேளனம் எமது வர்த்தக மற்றும் முதலீட்டு தொடர்புகளில் எதிர்பார்க்கும் இலக்கை இரு நாடுகளும் அடைய ஒரு அடித்தளமாக இருக்கும் என நம்புகிறேன். 
அத்துடன் இலங்கையானது, இந்தியா, பாகிஸ்தான் உடன் சுதந்திர வர்த்தக வலய உடன்படிக்கை செய்துள்ளது. மேலும், 1.7 பில்லியன் மக்களை கொண்ட சீனா மற்றும் சிங்கப்பூர் உடன் சுதந்திர வர்த்தக வலய ஒப்பந்தம் செய்ய தயாராகிக் கொண்டு இருக்கிறது. 
இதன்மூலம் தெற்காசிய நாடான இலங்கை “கட்டார் முதலீட்டாளர்களுக்கு சிறந்த இடமாக அமைகிறது” 
கட்டாரில் பணியாற்றும் இலங்கை தொழிலாளர்கள் தமது செயற்திறன்களையும் பயிற்றப்பட்ட தொழில் ஆற்றலையும் காண்பித்து கட்டாரின் பொருளாதார மேம்பாட்டிற்காக உழைக்கிறார்கள். இது மேலும், கட்டார் சந்தைக்கு இலங்கை தொழிலாளர்கள் வந்துசேர வழிவகுக்கும் என்றார்.

இலங்கையின் 7,200 பொருட்கள் ஐரோப்பிய சந்தைகளுக்கு அனுப்பிவைக்கப்படுவதைக் குறிப்பிட்ட ரிஷாட் பதியுதீன், இலங்கையில் எந்த ஒரு முதலீட்டாளரும் அதன் சுதந்திர வர்த்தக உடன்படிக்கையை பயன்படுத்தி ஐரோப்பாவுடனான வர்ததகத்தை மேம்படுத்திக்கொள்ள முடியும் என்றார். 
 2016 ஆம் ஆண்டில் 1,700 கட்டார் மக்கள் மாத்திரமே இலங்கைக்கு விஜயம் செய்துள்ளார்கள். இலங்கை உல்லாசப்பயண சுற்றுலாத் துறையில் நிறைய சந்தர்ப்பங்கள் காத்துக் கிடக்கின்றன. 
அத்துடன் இரு நாடுகளுக்கும் இடையில் கிழமையில் 28 விமான பயணங்கள் மேற்கொள்ளப்படுகின்றன. இவ்வாறு அமைச்சர் றிஷாட் பதியுதீன் தெரிவித்தார்.

ஷேய்க் அஹ்மத் பேசும்போது:

இந்த சம்மேளனம் இலங்கை கட்டார் வர்த்தக சமூகத்தை இணைக்கும் ஒரு பாலமாக விளங்குவதாகவும் இலங்கை கம்பனிகள் கட்டாரில் முதலீடு செய்வதை ஊக்குவிக்க முடியும் என்றார். 

அதேபோல் மறுபுறத்தில் இந்த சம்மேளனம் கட்டார் முதலீட்டாளர்கள் இலங்கையில் கட்டாருக்கான தந்திரோபாய மற்றும் முக்கியமான நிதி மற்றும் வர்த்தக துறையில் முதலீடு செய்வதை ஊக்குவிக்கும் என நம்புவதாக கூறினார். 

கட்டார் சம்மேளனத்தின் தலைவர் ஷேய்க் கலீபா பின் ஜாஸ்சிம் அல்-தானி காட்டரில் தொழில்புரியும் வெளிநாட்டு தொழிளார்களுக்கு ஒரு பாதுகாப்பான சூழலை அரச சட்டங்கள் ஒழுங்கமைப்பிற்கும் சர்வதேச பேரவையின் நியமங்களுக்கு ஏற்பவும் நடைமுறைபடுத்துகின்றது என்றார்.

 கட்டாருக்கும் இலங்கைக்கும் இடையிலான 2016 ஆம் ஆண்டின் வர்த்தக கொள்ளளவு டொலர் 52.5 பில்லியன்கள் மட்டுமே ஆகும் இந்த சம்மேளனம் இரு நாடுகளிலும் உள்ள வர்த்தக துறையினரை ஒரு கூட்டு ஒத்துழைப்பு முயற்சியை ஏற்படுத்துவதன் மூலம் ஒரு உண்மையான ஆரம்பத்தை தொடக்கி வைக்க முடியும் என்றார். 

No comments

Powered by Blogger.