வட்ஸ் அப் குழுக்களில், குடிமூழ்கும் சமூகம்
தொழில்நுட்பத்தினதும் சமூக ஊடகங்களினதும் அபரிமிதமான வளர்ச்சியானது எவராலும் எதிர்பார்க்கவோ எதிர்வுகூறவோ முடியாதளவு அசுர வேகத்தில் நடை பயின்று கொண்டிருக்கின்றது. சமூக ஊடகங்கள் மூலமாகவோ அல்லது எந்தவொரு வகையிலோ தொடர்பாடல் ஒன்றை மேற்கொள்வதில் இஸ்லாம் போதிய வழிகாட்டல்களை வழங்கியுள்ளது.
தொடர்பாடல் ஒன்றின் நோக்கம், அதன் உள்ளடக்கம், அணுகுமுறையில் பின்பற்ற வேண்டிய வரைமுறைகள் என்பது பற்றி இஸ்லாம் தெள்ளத் தெளிவாக விளக்குகின்றது.
முற்போக்கான தொழில்நுட்ப உலகில் சமூக ஊடகங்களின் வாயிலாக கருத்துப் பகிர்வொன்றை மேற்கொள்ளும் போது ஏற்படும் தவறான அல்லது உண்மைக்குப் புறம்பான இடைத் தொடர்பாடல்கள் ஏற்படக் கூடிய வாய்ப்புக்கள் அதிகம். சமூக ஊடகங்கள் இன்றியமையாததாக மாறியுள்ள இக்காலகட்டத்தில் அவற்றின் பாவனையை நெறிப்படுத்தி அதன் மூலம் உச்ச பயனை பெற்றுக் கொள்ளும் வழிவகைகளை அறிந்து வைத்திருக்க வேண்டும்.
தவறான இடைத் தொடர்பாடல்
ஆண், பெண் கலப்பு கொண்ட குழும கலந்துரையாடல்களில் அதிகளவான தவறான இடைத் தொடர்பாடல்கள் அல்லது தவறான புரிந்துணர்வுகள் நிலவுவதற்கு அதிக வாய்ப்புக்கள் உண்டு. ஆண், பெண் பாலின மற்றும் சுபாவ வேறுபாடுகளின் அடிப்படையில் புரிந்துணர்வு மாற்றங்கள் மேலெழுவது இயற்கையாகும்.
அடிப்படைவாதிகளாக இருக்கும் சில முஸ்லிம்கள் வட்ஸ்அப், பேஸ்புக் பாவனையானது இஸ்லாமிய நெறிமுறைக்கு அப்பாற்பட்டது என விவாதிக்கக் கூடும். இக்கருத்தை முற்று முழுதாக அங்கீகரித்துவிட முடியாத போதும் நெறிப்படுத்தப்படாத பாவனையானது இஸ்லாமிய ஒழுக்க விழுமியங்களை சிதைத்துவிட வல்லது.
குழும அரட்டைகள் என்பன கேளிக்கை மற்றும் வழக்கமான உரையாடலுக்கே உகந்தது. ஆனால், இணைய போராளிகளோ அவற்றை பாரிய நோக்கங்களுக்காக பயன்படுத்த முனைவது சாத்தியமற்றதாகும்.
தேநீர் கடையொன்றில் மக்கள் சத்தமாக உரையாடிக் கொண்டிருக்க, காதைக் கிழிக்கும் இரைச்சலுக்கு மத்தியில் ஒரு குழு தனது கலந்துரையாடல் ஒன்றை அங்கே நடாத்த திட்டமிடுவதாக கற்பனை செய்து கொள்ளுங்கள். குழு எதிர்பார்க்கும் அடைவுகள் அங்கே நிறைவேற்றப்படுமா? இவ்வாறான இடங்களில் தீர்க்கமான கலந்துரையாடல்கள் இடம்பெற முடியுமா? ஒரு போதும் முடியாது.
குழும அரட்டைகள் நேரத்தை சேமிப்பதாக கருதுகின்றோம். ஆனால், யதார்த்தத்தில் நேரடியாக சந்தித்து உரையாடுவதே பல வகையில் நன்மை பயப்பதாக அமைகின்றது. கலந்துரையாடல் ஒன்றின் போது ஒவ்வொருவரினதும் தனிப்பட்ட அவதானம், பங்களிப்பு. ஈடுபாடு எனபன குழும அரட்டையில் இருக்க மாட்டாது. மாறாக நேரடியாக குழும உறுப்பினர்களை பொது இடத்தில் ஒன்றுகூட்டி உரையாடும்போது கலந்துரையாடல் வீரியம் மிக்கதாகவும் பயனளிப்பதாகவும் அமைகின்றது. தீர்மானம் எடுக்கும் செயன்முறையில் இதுவே முக்கியமானது.
வட்ஸ் அப் குழுமங்கள் அறிவிப்புக்கள், அறிவுறுத்தல்களை செய்ய மாத்திரமே பயன்படுத்தப்படுவது சிறந்தது. காத்திரமான முடிவுகளை எடுக்கப்பட வேண்டிய தீர்மானமிக்க கலந்துரையாடல்களை நேரில் வைத்துக் கொள்வது பொருத்தம்.
“முஃமின்களே! ஃபாஸிக் (தீயவன்) எவனும் உங்களிடம் ஒரு செய்தியைக் கொண்டு வந்தால், அதைத் தீர்க்கமாக விசாரித்துக் கொள்ளுங்கள்; (இல்லையேல்) அறியாமையினால் (குற்றமற்ற) ஒரு சமூகத்தாருக்கு நீங்கள் தீங்கு செய்து விடலாம்; பின்னர் நீங்கள் செய்தவை பற்றி நீங்களே கைசேதப்படுபவர்களாக (கவலைப்படுபவர்களாக) ஆவீர்கள்.” (49:6)
நேர விரயம்
அல்ஹஸன் அல்பஸ்ரி அறிவிக்கிறார்கள்: “நீங்கள் பணத்தை செலவு செய்வதில் எவ்வளவு கவனமாக இருப்பீர்களோ அதை விட கவனமாக தமது காலத்தை செலவு செய்வதில் உன்னிப்பாக இருக்கும் ஒரு கூட்டத்தாரை (ஸஹாபாக்கள்) நான் சந்தித்தேன்.”
நேர முகாமைத்துவம் என்பது மற்றவரையும் தொற்றிக் கொள்ளும் நன்மை விளைவிக்கும் சிறந்த பண்பாகும். நேரத்தை கவனமாக திட்டமிட்டு செலவிடக் கூடிய நபர்களுடன் நாம் இருப்போமானால் அப்பழக்கம் எம்மையும் தொற்றிக் கொள்ளும். அதேவேளை நேர விரயத்தை பொருட்பாடுத்தாதோர் மத்தியில் நாம் வாழ்ந்தால் நாமும் அதன்போக்கிலே இழுத்துச் செல்லப்படுவோம்.
இன்றைய காலகட்டத்தில் சமூக ஊடக குழும அரட்டைகளானது வகுப்பறைகள், அலுவலகம், பள்ளிவாசல் என்பதையும் தாண்டி படுக்கையறை வரை நீடிக்கிறது. செய்ய வேண்டிய பணியிலிருந்து எம் கவனத்தை சிதறடிக்கச் செய்யும் கவனக் கலைப்பானாக இக்குழும அரட்டைகள் விளங்குகின்றன. முழுக்கவனத்துடன் வேலையொன்றில் நம்மை ஈடுபடுத்திக் கொண்டிருக்கும் சமயம் குழும அரட்டை செய்தியொன்றை வாசித்து, பதிலளித்து வீணான பொழுதை போக்கி விட்டு திரும்பவும் நாம் செய்து கொண்டிருந்த வேலையில் நம்மை ஈடுபடுத்தும் போது முன்னர் இருந்த முழுக்கவனம் இராது. முழுக்கவனத்தை மீண்டும் எட்ட சில நிமிடங்கள் செலவாகின்றன.
இமாம் ஹஸன் அல்பன்னா கூறியதாவது: நேரத்தை செலவிடுவதில் உன்னிப்பாக இருங்கள். மற்றவர்கள் தமது நேரத்தை அவதானமாக, பிரயோசனமாக செலவு செய்ய உதவியாகவும் இருங்கள். பொறுப்புக்கள் என்பது காலத்தின் பாற்பட்டது.”
சமூக ஊடகங்களில் பிரயோசனமற்ற வெற்று அரட்டைகளை ஆரம்பிக்க எத்தனிக்கும் முன்னர் பின்வரும் நபிமொழியை உங்கள் எண்ணத்தில் உலாவ விடுங்கள்:
“அல்லாஹ்வையும் இறுதிநாளையும் நம்புபவர்கள் பேசினால் நல்லதைப் பேசட்டும் அல்லது மெளனமாக இருக்கட்டும்.”
முக்கியத்துவத்தின் வீரியத்தை குறைக்கும் குழும அரட்டைகள்.
சிறிய விடயங்களைப் பாரதூரமாக்கி விடுவதும் குழும அரட்டைகளின் பாரிய பாதக விளைவாகும். சமூக ஊடகங்கள் பலபோது வெற்றுக் கூச்சல்களாகவும் பயனற்ற அரட்டைகளின் அரங்கமாகவும் திகழ்வதைக் காணக் கூடியதாக உள்ளது. யாருக்கும் எவருக்கும் எதையும் பகிரக் கூடிய, எவ்வாறும் கருத்துக் கூறக் கூடிய சுதந்திரத்தை சமூக ஊடகங்கள் வழங்கியுள்ளன. குழும அரட்டைகள் அதனை இன்னொரு பரிமாணத்திற்கு இட்டுச் செல்கின்றன. அவதூறுப் பேச்சுக்களும் அசிங்கங்களும் அரங்கேறும் தளமாக குழும அரட்டைகள் மாறி வருகின்றன. காத்திரமான பணியில் ஈடுபட்டுக் கொண்டிருக்கும் போது சிணுங்கும் குழும அரட்டை அழைப்பு வெற்றுப் பேச்சுக்கான அழைப்பாக, கவனச் சிதறலாக மாறுகிறது. தடம் மாறுவதற்கான தளங்களை ஏற்படுத்திக் கொடுக்கின்றன.
அல் அஹ்னாப் பின் கைஸ் என்பவருக்கு உமர் பின் கத்தாப் வழங்கும் ஆழமான கருத்துக்கள் கொண்ட பின்வரும் அறிவுரையானது அத்தனை நண்பர்கள் இணைய போராளிகளையும் சென்று சேர வேண்டியது:
* ஒருவனிடத்தில் பேச்சு அதிகரித்தால், அவனது தவறுகளும் அதிகரிக்கும்
* ஒருவனிடத்தில் தவறுகள் அதிகரித்தால் அடக்கம் குன்றிப் போகும்
* ஒருவனிடத்தில் அடக்கம் குன்றிப் போகும்போது அவனது இறையச்சமும் குன்றிப் போகும்
* எப்போது ஒருவனிடத்தில் உள்ளச்சம் குன்றிப் போகிறதோ அவனது உள்ளம் இறந்து போகிறது.
தொழில்நுட்ப வளர்ச்சி அதிகரிக்க அதிகரிக்க தொடர்பாடல் தளங்களின் பரிமாணங்களும் அதிகரித்துக் கொண்டே செல்கின்றன. அவை எந்தளவுக்கு எமது இறையச்சம், அடக்கம், ஆன்மிக வாழ்வை பாதிக்கின்றன என்பது தொடர்பில் நாம் பொறுப்புக் கூற கடமைப்பட்டுள்ளோம் என்பதை மறந்துவிடக் கூடாது.
Hassan Iqbal
Post a Comment