இலங்கையில் இப்படியும், பிரச்சினை நடக்குது
விஷப் பாம்பு ஒன்றை போத்தலுக்குள் அடைத்து அதை தனது எதிரியான நபர் ஒருவரின் வீட்டுக்குள் எறிந்து விட்டுச் சென்ற சம்பவம் ஒன்று நேற்று முன்தினம் இடம்பெற்றுள்ளதாக அளவ்வ பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
அளவ்வ பிரதேசத்தைச் சேர்ந்த இரு கிராமத்தவர்கள் மத்தியில் நீண்ட காலமாக மோதல்கள் இடம்பெற்று வந்துள்ளன. இதன் காரணமாக பல்வேறு மோதல்கள் நிலவி வந்தபோதும் இம்மோதல்களுக்கு தீர்வு காணப்படவில்லை. இரு கிராமத்தவர்களும் பழிவாங்கும் நடவடிக்கைகளில் ஈடுபட்டு வந்துள்ளனர்.
பிரச்சினைக்குள்ளான இரு குடும்பங்களில் ஒரு குடும்பத் தலைவர் மற்ற குடும்பத்தவரை பழிவாங்குவதற்கு விஷப் பாம்பு ஒன்றை பிடித்துள்ளார். பின்னர் அதனை போத்தலில் அடைத்து எதிரியின் வீட்டுக்குள் எறிந்து விட்டுச் சென்றுள்ளார். அதிர்ஷ்டவசமாக போத்தல் உடையவில்லை.
அந்த வீட்டுக் குடும்பத் தலைவர் பாம்பிருந்த போத்தலுடன் அளவ்வ பொலிஸ் நிலையம் சென்று முறைப்பாடு செய்துள்ளார்.
விஷப் பாம்பை தெஹிவளை மிருகக்காட்சிசாலைக்கு அனுப்பி வைத்த பொலிஸார் இச் சம்பவம் தொடர்பாக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
Post a Comment