பொட்டு அம்மான் தப்பிச் சென்றதாக கூறப்படுவதில், எவ்வித உண்மையும் இல்லை - மேஜர்ஜெனரல் கமால் குணரத்ன
விடுதலைப் புலிகள் அமைப்பின் தலைவர்களில் ஒருவரான பொட்டு அம்மான் படகில் தப்பிச் சென்றதாக கூறப்படும் தகவலில் எவ்வித உண்மையும் இல்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.
முன்னாள் தளபதி மேஜர் ஜெனரல் கமால் குணரத்ன இதனை தெரிவித்துள்ளார். கொழும்பு ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய விசேட செவ்வியிலேயே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார். தொடர்ந்தும் கருத்து தெரிவித்த அவர்,
“இறுதி யுத்தத்தின் போது விடுதலைப் புலிகளின் தலைவர்கள் யாரும் தப்பி செல்வதற்கான வாய்ப்புகள் இருந்திருக்கவில்லை.
அந்த அமைப்பு மிகவும் கடினமான அமைப்பாகும். விடுதலைப் புலிகள் அமைப்பின் தலைவர்களினது சடலங்களை இராணுவத்தினர் கைப்பற்றியிருந்தனர்.
எனினும், அந்த அமைப்பில் புலனாய்வுத் துறைக்கு பொறுப்பாகவிருந்து பொட்டு அம்மானின் உடலம் இராணுவத்தினருக்கு கிடைக்கவில்லை.
பொட்டு அம்மான் உயிரிழந்துள்ளமையை பொது மக்கள் சிலர் கண்டுள்ளனர். ஆனாலும் அவரது சடலம் கிடைக்கவில்லை. அவர் உயிருடன் இருப்பாராக இருந்தால் ஏன் இன்னும் வெளியில் வரவில்லை.
உயிருடன் இல்லாத காரணத்தினாலேயே அவர் இன்னும் வெளியில் வரவில்லை. பொட்டு அம்மான் படகில் தப்பி சென்றதாக கூறப்படுவதில் எந்த உண்மையும் இல்லை.
சில சந்தர்ப்பங்களில் புலிகள் அமைப்பின் சாதாரண மட்ட உறுப்பினர்கள் தப்பி சென்றிருக்கலாம். ஆனால் உயர் மட்டத்தினர் யாரும் அப்போது தப்பி செல்ல வாய்ப்பில்லை” என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
Post a Comment