பங்கீடு குறித்து ஹக்கீம் + றிசாத் ஐ.தே.க.வுடன் பேச்சு
-எம்.எம்.மின்ஹாஜ்-
உள்ளூராட்சி மன்ற தேர்தலில் ஐக்கிய தேசிய முன்னணியின் ஊடாக யானை சின்னத்தில் போட்டியிட எத்தனித்துள்ள தமிழ் முற்போக்கு கூட்டணி, ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ், அகில இலங்கை மக்கள் காங்கிரஸ், ஜாதிக ஹெல உறுமய கட்சிகளின் தலைவர்கள் தொகுதி பங்கீடு தொடர்பாக விரைவில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தவுள்ளதாக சிறிகொத்தா வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.
வடக்கு கிழக்கு வெளியே ஐக்கிய தேசிய முன்னணியுடன் இணைந்து முஸ்லிம் காங்கிரஸ் போட்டியிடத் தீர்மானித்துள்ளது. எனினும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தமது இறுதித் தீர்மானத்தை எடுப்பதற்கு கட்சியின் உயர்பீடம் எதிர்வரும் 20 ஆம் திகதி கூடவுள்ளது. மேலும் 5032 தொகுதிகளுக்கான வேட்பாளர் தெரிவில் ஐக்கிய தேசியக் கட்சியின் தொகுதி அமைப்பாளர்கள் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றனர்.
இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ், அகில இலங்கை மக்கள் காங்கிரஸ், தமிழ் முற்போக்கு முன்னணி, ஜாதிக ஹெல உறுமய உள்ளிட்ட கட்சிகள் கூட்டிணைந்து ஐக்கிய தேசிய முன்னணியாக யானை சின்னத்தில் போட்டியிடுவதற்கு ஏற்கனவே பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தலைமையில் நடந்த பேச்சுவார்த்தையில் இணக்கம் எட்டப்பட்டிருந்தது.
இந்நிலையில் தொகுதிப் பங்கீடு தொடர்பில் கடந்த வாரம் ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச்செயலாளர் கபீர் ஹாஷிம் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸுடன் விசேட பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார். இதன்போது முஸ்லிம் காங்கிரஸின் தலைவரும் அமைச்சருமான ரவூப் ஹக்கீம் கலந்து கொண்டுள்ளார்.
இதன்போது தொகுதிகள் பகிர்ந்து கொள்வது தொடர்பில் நீண்ட நேரம் பேசியுள்ளனர். எனினும் தொகுதி பங்கீடு தொடர்பில் பல மட்ட பேச்சுவார்த்தைகளை முஸ்லிம் காங்கிரஸ் தொடர்ந்து நடத்தி வருகின்றது.இதன்படி அமைச்சர் ரவூப் ஹக்கீம் விரைவில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவை சந்திக்கவுள்ளார்.
அத்துடன் அகில இலங்கை மக்கள் காங்கிரஸும் கட்சிக்குள் இறுதி இணக்கத்தை ஏற்படுத்தி கொள்ளும் நோக்கில் எதிர்வரும் 20 ஆம் திகதி கூடி ஆராயவுள்ளது. அக்கட்சியின் தலைவரும் அமைச்சருமான ரிஷாத் பதியுதீன் தலைமையில் கட்சியின் உயர்பீடம் கூடவுள்ளது.
அத்துடன் தமிழ் முற்போக்கு முன்னணியும் இது தொடர்பில் கட்சி மட்டத்தில் பேச்சுவார்த்தைகளை நடத்தி வருகின்றது. அத்துடன் ஜாதிக ஹெல உறுமயவும் ஐக்கிய தேசியக் கட்சியுடன் பல மட்ட பேச்சுவார்த்தைகளை நடத்தி வருகின்றது.
இதன்படி ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ், தமிழ் முற்போக்கு கூட்டணி, அகில இலங்கை மக்கள் காங்கிரஸ், ஜாதிக ஹெல உறுமய கட்சிகளின் தலைவர்கள் விரைவில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவை சந்தித்து தொகுதிப் பங்கீடுகள் பேச்சுவார்த்தை நடத்த திட்டமிட்டுள்ளதாக சிறிகொத்தா வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.
Millions and billions will turn over for this deal...
ReplyDeleteடேய் யாரா நீங்ககெல்லாம், எங்களை பங்கு போட?
ReplyDelete