ஹெல்மட் அணிவிக்காது பிள்ளைகளை மோட்டார் சைக்கிள்களில் ஏற்றிச்சென்ற பெற்றோர்களுக்கு எதிராக நடவடிக்கை
சிலாபம் – கொழும்பு பிரதான வீதியில் வென்னப்புவ நகரில் அமைந்துள்ள பாடசாலைகளிலிருந்து தமது பிள்ளைகளை பாதுகாப்பற்ற முறையில் தலைக்கவசமின்றி மோட்டார் சைக்கிள்களில் வீடுகளுக்கு அழைத்துச் சென்று கொண்டிருந்த 15 பெற்றோர்களுக்கு எதிராக நடவடிக்கை மேற்கொண்டதாக வென்னப்புவ பொலிஸார் தெரிவித்தனர்.
இவ்வாறு தமது பிள்ளைகளை பாதுகாப்பற்ற முறையில் மோட்டார் சைக்கிள்களில் அழைத்துச் சென்றவர்களுள் அதிகமானோர் தாய்மார்கள் என்றும் அவர்கள் தமது பாதுகாப்புக்காக மாத்திரம் தலைக்கவசம் அணிந்து தமது பிள்ளைகளைப் பாதுகாப்பைக் கருத்தில் கொள்ளாது செயற்பட்டதால் அவ்வாறான பெற்றோர்களுக்கு எதிராக தண்டப் பணம் அறவிடுவதற்கான படிவம் விநியோகிக்கப்பட்டதாக வென்னப்புவ பொலிஸ் நிலைய வாகனப் போக்குவரத்துப் பிரவின் பொறுப்பதிகாரி உப பொலிஸ் பரிசோதகர் ரஞ்சன் ரணதுங்க தெரிவித்தார்.
இரண்டு மாணவர்களைத் தலைக்கவசமின்றி மோட்டார் சைக்கிளில் ஏற்றிச் சென்று கொண்டிருந்த ஒரு தந்தையிடம் சாரதி அனுமதிப்பத்திரம், மோட்டார் சைக்கிளுக்கான காப்புறுதிச் சான்றிதழ் மற்றும் அனுமதிப்பத்திரம் எதுவும் இல்லாத காரணத்தினால் அந்த மோட்டார் சைக்கிளுடன் குறித்த நபரையும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த நடவடிக்கை மேற்கொண்டதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
தமது பிள்ளைகளுக்காக எத்தனையோ அர்ப்பணிப்புக்களைச் செய்யும் பெற்றோர் பெருந்தெருக்களில் தமது பிள்ளைகளின் பாதுகாப்பைக் கவனத்தில் எடுக்காதது பிரச்சினைக்குரியது என்றும் வென்னப்புவ பொலிஸ் பிரிவில் இவ்வாறு பிள்ளைகளின் பாதுகாப்பை கவனத்தில் எடுக்காது மோட்டார் சைக்கிளில் ஏற்றிச் செல்லும் பெற்றோர்களுக்கு எதிரான நடவடிக்கையினை தொடர்ந்து முன்னெடுக்க உள்ளதாகவும் வாகனப் போக்குவரத்து பிரிவின் பொறுப்பதிகாரி தெரிவித்தார்.
Post a Comment