பாகிஸ்தானுக்கு ஆதரவாக, திலங்க சுமதிபால ஆற்றிய உரை
சர்வதேச கிரிக்கெட் போட்டிகளை வழமையான அடிப்படையில் நடத்துவதற்காக பாகிஸ்தான் எடுத்துவரும் முயற்சிக்கு ஒத்துழைப்பு நல்குவதாக ஸ்ரீலங்கா கிரிக்கெட் நிறுவனத் தலைவர் திலங்க சுமதிபால உறுதி வழங்கினார்.
பாகிஸ்தானுடனான மூன்று போட்டிகள் கொண்ட சர்வதேச இருபது 20 கிரிக்கெட் தொடரின் கடைசிப் போட்டியில் விளையாடுவதற்காக இலங்கை அணி குறுகிய விஜயம் செய்தபோது லாகூரில் நடைபெற்ற ஊடக சந்திப்பில் திலங்க சுமதிபால இந்த உறுதிப்பாட்டை வழங்கினார். இந்தத் தொடரின் முதல் இரண்டு போட்டிகள் நடுநிலையான அபுதாபியில் நடைபெற்றமை குறிப்பிடத்தக்கது.
விளையாட்டுத்துறை அமைச்சர் தயாசிறி ஜயசேகர, ஸ்ரீலங்கா கிரிக்கெட் நிறுவனத் தலைவர் திலங்க சுமதிபால, பாகிஸ்தான் கிரிக்கெட் சபை அதிகாரிகள் ஆகியோருடன் லாகூர் போட்டிக்கு முன்பதாக இலங்கை, பாகிஸ்தான் அணியினர் எடுத்துக்கொண்ட படம்.
நாங்கள் 30 வருடகால யுத்தத்தை அனுபவித்துள்ளதால் தனிமைப்படுத்தப்படுவதன் அர்த்தத்தை நன்கு அறிவோம். இலங்கையில் 30 வருடங்களுக்கு மேல் யுத்தம் நடந்தது. ஆனால் இலங்கையில் இரண்டு அணிகளுக்கும் இடையில் விளையாடுவதற்கு ஒப்புக்கொள்ளப்பட்ட எந்த ஒரு போட்டியையும் பாகிஸ்தான் இரத்துச் செய்ததில்லை என்றார் திலங்க சுமதிபால.
மாறுபட்ட மனிதர்கள் இருக்கின்றார்கள். சிறுவர்கள், பெண்கள் ஆகியோரையும் சமய வழிபாட்டுத் தளங்கள், விளையாட்டுத்துறை ஆகியவற்றையும் விட்டு ஒதுங்கியிருங்கள் என அவர்களிடம் நாங்கள் கோருகின்றோம். எங்களை விட்டுவிடுங்கள். அமைதியாகவும் ஒத்திசைவுடனும் கிரிக்கெட் விளையாட அனுமதியுங்கள்.
கிரிக்கெட் விளையாட்டை நாங்கள் ரசிக்கவேண்டும் என்பதுடன் எல்லோருக்கும் சந்தர்ப்பங்களை வழங்க விரும்புகின்றோம். அத்துடன் விளையாட்டில் உள்ள மகிழ்ச்சியை பகிர்வதற்கான வாய்ப்பையும் தாருங்கள் என அவர் குறிப்பிட்டார்.
நல்லதோ, கெட்டதோ, பாகிஸ்தான் கிரிக்கெட்டும் அரசும் இலங்கைக்கு ஆதரவு வழங்கியது. இது வெறும் அரசுடன் தொடர்புடைய விடயமல்ல. இலங்கைக்கு எதிராக கடைசியாக இடம்பெற்ற சம்பவத்தை நீங்கள் புரிந்துகொண்டிருப்பீர்கள். அப்போதிருந்த உணர்வுகள் வேறு. எனவே இதற்கான ஆரம்பத்தையிட்டு பாகிஸ்தான் கிரிக்கெட்டுக்கு உதவவேண்டும் என நாங்கள் எண்ணினோம் என திலங்க மேலும் தெரிவித்தார்.
கிரிக்கெட்டில் பாகிஸ்தான் பலவீனமடைந்தால் ஆசிய கிரிக்கெட்டும் பலவீனமடையும். அது உலக கிரிக்கெட்டை மென்மேலும் பலவீனமடையச் செய்யும். உங்கள் பலமே எங்கள் பலம். நாம் ஒருவரை ஒருவர் கவனித்துக்கொள்வது எமது பொறுப்பாகும். அதனை நாங்கள் உறுதியாக நம்புகின்றோம் என்றார் அவர்.
ஸ்ரீலங்கா கிரிக்கெட் நிறுவனத்தைப் பொறுத்தமட்டில் பாகிஸ்தான் கிரிக்கெட்டுக்கு ஒத்துழைப்பு வழங்குவது மகிழ்ச்சி தருவதுடன் அது எமது கடப்பாடாகவும் கருதுகின்றோம் என திலங்க சுமதிபால மேலும் கூறினார்.
Post a Comment