வீட்டின் கூரையைப் பிரித்துஇ தந்தையின் பணத்தை திருடிய மகன் - காட்டிக்கொடுத்த பொலிஸ் நாய்
தனது தந்தைக்குச் சொந்தமான இரண்டு இலட்சத்து ஐம்பதினாயிரம் ரூபா பணத்தைத் திருடிய பாடசாலை மாணவன் ஒருவனை திருடிய பணத்தில ஒரு இலட்சத்து எட்டாயிரம் ரூபா பணத்துடன் நொச்சியாகம பொலிஸார் கைது செய்துள்ளனர்.
நொச்சியாகம ஹல்மில்லகல பிரதேசத்தைச் சேர்ந்த நபரொருவர் தனது வீட்டை உடைத்து இரண்டரை இலட்ச ரூபா திருடப்பட்டுள்ளதாக பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்ததையடுத்து பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
தாம் உறங்கும்போது கால்களுக்கு வைக்கும் தலையணைக்கு அடியில் பணத்தை வைத்திருப்பதாகவும், வீட்டின் ஓட்டைப் பிரித்து இப்பணம் திருடப்பட்டுள்ளதாகவும் முறைப்பாட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இப்பணம் குறித்து வீட்டிலுள்ள எவரும் அறிந்திருக்கவில்லை என்றும் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
இக் குடும்பத்தில் கணவன், மனைவி, மகன், மகள் ஆகியோர் வசிக்கின்றனர். மனைவி மற்றும் மகளும் தொழிலுக்குச் செல்கின்றனர். சம்பவ தினம் அதிகாலை கணவன் வர்த்தகத்துக்காக வெளியே சென்றுள்ளார். மனைவி வீட்டை பூட்டிவிட்டு வழமைபோல திறப்பை ஒரு இடத்தில் மறைத்து வைத்துவிட்டு தொழிலுக்குச் சென்றுள்ளார்.
அன்று நேரத்துடன் வீடு திரும்பிய தந்தை வீட்டைத் திறந்தபோது தமது அறையின் ஓடு பிரிக்கப்பட்டுள்ளதைப் பார்த்து தலையணைக்குள் வைத்திருந்த பணத்தைப் பார்த்தபோது அது கொள்ளையிடப்பட்டிருந்தமை தெரியவந்துள்ளது.
பொலிஸார் “ஹீரோ” என்ற மோப்ப நாயுடன் விசாரணைகளை ஆரம்பித்தனர். நாயைக் கண்டவுடன் முறைப்பாட்டாளரின் மகனான 10 ஆண்டில் பயிலும் மாணவன் அந்த இடத்தை விட்டுச் சென்றுள்ளான்.
பின்னர் பொலிஸார் மகனை அயலிலுள்ள வீடொன்றில் இருந்தபோது அழைத்து வந்து வேறொரு இடத்தில் தங்க வைத்துள்ளனர். பொலிஸார் ”ஹீரோ” நாயின் உதவியுடன் தேடுதல் நடத்தியபோது மூன்று முறை நாய் மகனிடம் வந்து நின்றுள்ளது.
பின்னர் மேற்கொண்ட விசாரணையில் மகன் பணத்தை திருடியுள்ளமை தெரியவந்துள்ளது. மகன் மூன்று கைத்தொலைபேசி கள் காலணி மற்றும் உடை களை கொள்வனவு செய்துள்ளான்.
எஞ்சிய பணத்தை வீட்டுக்கு முன்னாலுள்ள பூச்சட்டியின் கீழும் தனது புத்தக அட்டைக்குள்ளும் மறைத்து வைத்திருந்ததும் தெரிய வந்துள்ளது. சந்தேக நபரான மாணவனை நேற்று நீதிமன்றத்தில் ஆஜர்செய்ய பொலிஸார் நடவடிக்கை மேற்கொண்டிருந்தனர்.
Post a Comment