கட்டலோனியாவின் சுதந்திரப் பிரகடனத்தை, சிறிலங்கா நிராகரிப்பு
கட்டலோனியாவின் தனிநாட்டுச் சுதந்திரப் பிரகடனத்தை சிறிலங்கா அரசாங்கம் நிராகரித்துள்ளது. ஸ்பெய்னின் தன்னாட்சிப் பிராந்தியமான கட்டலோனியாவின் நாடாளுமன்றம் நேற்று சுதந்திரமான நாடாக கட்டலோனியாவைப் பிரகடனம் செய்திருந்தது.
இந்த நிலையில் சிறிலங்கா வெளிவிவகார அமைச்சு கட்டலோனியாவின் சுதந்திரப் பிரகடனம் தொடர்பாக இன்று அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.
அதில், “சிறிலங்காவுக்கும் ஸ்பெய்னுக்கும் இடையில் நீடித்த நட்புறவு உள்ளது. ஐரோப்பிய ஒன்றியத்துடனான சிறிலங்காவின் பங்காளி உறவுகளில் ஸ்பெய்னை ஒரு முக்கியமான உறுப்பினராக சிறிலங்கா கருதுகிறது.
சிறிலங்கா அரசாங்கம், ஸ்பெய்ன் இராச்சியத்தின், இறையாண்மை மற்றும் பிராந்திய ஒருமைப்பாட்டை உறுதியாக ஆதரிக்கிறது. கட்டலோனியாவை ஸ்பெய்னின் ஒருங்கிணைந்த பகுதியாகவே கருதுகிறது.
சட்டத்தின் ஆட்சி மற்றும் ஸ்பெய்னின் அரசியலமைப்பு வரையறைக்குள் ஒன்றுபட்ட ஸ்பெய்னுக்கான பேச்சுக்களைத் தொடர சிறிலங்கா அரசாங்கம் கேட்டுக் கொள்கிறது.” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
Who asked Sri Lankan opinion in this regard
ReplyDelete