Header Ads



என்னை பலவீனப்படுத்தினால், பேய்களுக்கு தான் பலம் கூடும் - யாழ்ப்பாணத்தில் மைத்திரி எச்சரிக்கை

“இந்த நாட்டிலே தேசிய நல்லிணக்கம் ஏற்படுத்தப்பட வேண்டும். பொருளாதரத்தை மேம்படுத்தி ஏழ்மையை இல்லாமல் செய்ய வேண்டும். அதற்காக என்னுடன் கலந்துரையாட வாருங்கள்” என, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனா கோரிக்கை விடுத்துள்ளார். 

மேலும், “எந்த பிரச்சினையாக இருந்தாலும், பேசித்தான் தீர்க்க முடியும். வன்முறையால் தீர்க்க முடியாது” எனவும் தெரிவித்தார்.

யாழ். இந்துக்கல்லூரியில் இன்று (14) நடைபெற்ற அகில இலங்கை தமிழ் மொழித்தின நிகழ்வில் உரையாற்றும் போதே, அவர் இவ்வாறு தெரிவித்தார். 

அவர் தொடர்ந்து கருத்துத் தெரிவிக்கையில்,

“யாழ். வருகை தந்த போது சில போராட்டங்கள், ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்றன. நான் பல வருடங்களாக அரசியலில் ஈடுபட்டு வருகிறேன். போராட்டங்கள், ஆர்ப்பாட்டங்கள் ஜனநாயக உரிமை என்பது எனக்கு தெரியும். 

“என்னை எல்லோருமாக வாக்களித்தே ஜனாதிபதி ஆக்கினீர்கள். அது எனக்கு நன்றாகவே தெரியும். உங்கள் பிரச்சனைகளை தீர்க்க வேண்டும் என்று தான் ஜனாதிபதி ஆக்கினீர்கள். அதுவும் எனக்கு தெரியும். 

“இந்த நாட்டிலே தேசிய நல்லிணக்கம் ஏற்படுத்தப்பட வேண்டும். பொருளாதரத்தை மேம்படுத்தி ஏழ்மைய இல்லாமல் செய்ய வேண்டும். அதற்காக என்னுடன் கலந்துரையாட வாருங்கள் என உங்களிடம் அழைப்பு விடுக்கிறேன். 

“இந்த நிகழ்வில் கலந்துகொள்ள வந்தபோது எனக்கு எதிராக கறுப்புக்கொடி காட்டி போராட்டத்தில் ஈடுபட்டு இருந்தனர். நான் எனது வாகனத்தை விட்டு இறங்கி அவர்களிடம் சென்று அவர்களின் பிரச்சினையைக் கேட்டேன். அவர்கள் தமது கோரிக்கையை என்னிடம் கூறினார்கள். 

“அதன்போது, நான் அவர்களிடம் பேச்சுவார்த்தைக்கு வருமாறு அழைத்தேன். அவர்கள் அதற்கு வர தயாராக இல்லை. தமது கோரிக்கையை உடனே நிறைவேற்றுங்கள் என என்னிடம் கோருகின்றார்கள். எந்த பிரச்சினையாக இருந்தாலும், பேசித்தான் தீர்க்க முடியும். வன்முறையால் தீர்க்க முடியாது.

“முரண்பாடுகளை வளர்த்துக்கொள்ள வேண்டாம். வன்முறைகளை ஏற்படுத்த வேண்டாம். இந்த நாட்டில் மீண்டும் ஒரு யுத்தம் ஏற்படுத்த முடியாது. யுத்தத்தால் பலவற்றை இழந்து அனுபவங்களை பெற்றுள்ளோம். யுத்தம் ஏற்பட்டால் செல்வந்தர்கள் வெளிநாடுகளுக்கு சென்று விடுவார்கள் ஏழைகளே கஷ்டங்களை அனுபவிப்பார்கள். மீண்டும் யுத்தம் ஏற்பட அனுமதிக்க முடியாது. 

“இங்கே கறுப்புக்கொடி உயர்த்த தேவையில்லை. சமாதனத்துக்கான வெள்ளைக்கொடிகளையே உயர்த்த வேண்டும். எமக்கிடையில் விரோதங்கள் வன்முறைகள் ஏற்பட்டால், சக்தி பெறுவது வேறு நபர்கள் தான். 

“எல்லா இன, மத மக்கள் மத்தியில், சகோதரத்துவம் ஏற்படுத்தப்பட வேண்டும் என செயற்பட்டு வருகிறேன். அந்நேரத்தில் என்னை பலவீனப்படுத்தால், பேய்களுக்கு தான் பலம் கூடும். உங்கள் வாழ்வையும் நாட்டையும் ஒளிமயமாக்க ஒன்று பட்டு செயற்படுவோம்” என்றார்.

No comments

Powered by Blogger.