இலங்கை அணியை மீட்டெடுக்க, களமிறங்கியுள்ள 3 தலைகள்
தற்போது கடும் பின்னடைவை சந்தித்துள்ள இலங்கைக் கிரிக்கெட் அணியை மீட்டெடுக்க இலங்கைக் கிரிக்கெட்டின் பெரும் தலைகளான அரவிந்த டி சில்வா, குமார் சங்கக்கார மற்றும் மஹேல ஜயவர்தன ஆகியோர் விளையாட்டுத்துறை அமைச்சருடன் களத்தில் இறங்கியுள்ளனர்.
தொடர்ச்சியாக தோல்விகளை சந்தித்து பின்னடைவை எதிர்நோக்கி வருகின்ற இலங்கை கிரிக்கெட் அணியை புதிய பாதையில் கொண்டு செல்லும் நோக்கில் விளையாட்டுத்துறை அமைச்சர் தயாசிறி ஜயசேகரவினால் கிரிக்கெட் ஆலோசனை செயற்குழுவொன்று நியமிக்கப்பட்டது.
இலங்கை கிரிக்கெட் தெரிவுக் குழுவின் முன்னாள் தலைவரான ஹேமக விஜேசூரியவின் தலைமையில் நியமிக்கப்பட்ட இக்குழுவில் முன்னாள் வீரர்களான அநுர தென்னகோன், அரவிந்த டி சில்வா, குமார் சங்கக்கார, மஹேல ஜயவர்தன மற்றும் விளையாட்டு வைத்
திய நிறுவகத்தின் நிறைவேற் றுப் பணிப்பாளர் வைத்திய அத்தியட்சகர் எதிரிசிங்க உள்ளிட்ட 5 பேர் உறுப்பினர்களாக நியமிக்கப்பட்டிருந்தனர்.
இந்நிலையில், கடந்த மாதம் விளையாட்டுத்துறை அமைச்சினால் இலங்கை கிரிக்கெட் நிறுவன அதிகாரிகள், முன்னாள் மற்றும் இன்னாள் வீரர்கள், பயிற்றுவிப்பாளர்கள் மற்றும் விளையாட்டு ஊடகவியலாளர்களின் பங்குபற்றலுடன் நடத்தப்பட்ட விசேட செயலமர்வில் முன்மொழியப்பட்ட தீர்மானங்களை உள்ளடக்கிய திட்டங்களை ஆராயும் முகமாக நடைபெற்ற முதலாவது சந்திப்பு விளையாட்டுத்துறை அமைச்சில் நேற்று முன்தினம் மாலை நடைபெற்றது.
விளையாட்டுத்துறை அமைச்சர் தயாசிறி ஜயசேகர தலைமையில் நடைபெற்ற இச்சந்திப்பில் இலங்கை அணியின் முன்னாள் தலைவர்களான அரவிந்த டி சில்வா, குமார் சங்கக்கார மற்றும் மஹேல ஜயவர்தன உள்ளிட்ட ஐவரடங்கிய கிரிக்கெட் செயற்குழு உறுப்பினர்கள் கலந்துகொண்டனர்.
சுமார் 2 மணித்தியாலங்கள் நடைபெற்ற இப்பேச்சுவார்த்தையில், இலங்கை கிரிக்கெட்டில் மேற்கொள்ளப்படவுள்ள மறுசீரமைப்பு தொடர்பான முன்மொழிவுகள் தொடர்பில் கலந்துரையாடப்பட்டன.
அத்துடன், விரைவில் அவற்றை நடை முறைப்படுத்துவதற்கான செயற்றிட்டங்களை வகுத்து ஆரம்ப கட்ட இடைக்கால அறிக்கையொன்றை கையளிக்குமாறு கிரிக்கெட் ஆலோசனைக் குழுவிடம் அமைச்சர் கேட்டுக்கொண்டார்.
இதன்படி, குறித்த விசேட குழுவினால் எதிர்வரும் 3 மாதங்களில் கிரிக்கெட்டை மீளக் கட்டியெழுப்புவதற்கான இடைக்கால அறிக்கை சமர் பிக்கப்படவுள்ளதுடன், இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தினால் இதற்கான அனைத்து ஒத்துழைப்புகளும் வழங்கப்படும் என விளையாட்டுத்துறை அமைச்சர் இதன்போது உறுதியளித்துள்ளார்.
இந்த சந்திப்பின் பின் கருத்து தெரிவித்த குமார் சங்கக்கார தற்காலிக தீர்மானங்களால் கிரிக்கெட் வளர்ச்சி அடையாது என்றும் தூரநோக்கு சிந்தனையுடன் செயற்பட வேண்டும் என்றார்.
இதன்போது மஹேல ஜயவர்தன கூறுகையில், நான் ஏற்கனவே தயாரித்துக் கொடுத்த திட்டங்கள் எதுவும் முன்னெடுக்கப்படவில்லை. தற்போது அழைத்திருக்கிறார். இந்த முறை நாம் கொடுக்கும் செயற்றிட்டங்களை நடைமுறைப்படுத்தா விட்டால் இலங்கைக் கிரிக்கெட்டுக்காக நான் வரும் கடைசி சந்தர்ப்பம் இதுதான் என்றார்.
அத்தோடு இனி யாரும் என்னை அழைக்க வேண்டாம் எனவும் அவர் கறாராக தெரிவித்தார்.
இது ஆலோசனைக் குழு மட்டுமே. கிரிக்கெட் அணியைக் கட்டுப்படுத்தாது. அத்தோடு இதற்கும் கிரிக்கெட் நிறுவனத்திற்கும் எந்தத் தொடர்பும் இல்லை. விளையாட்டுத்துறை அமைச்சருக்கே அவர்கள் அறிக்கை சமர்ப்பிப்பார்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.
Post a Comment