சவூதியிலிருந்து 2 கோடி தங்க, ஆபரணங்களை கடத்தி வந்தவர் கைது
(ரெ.கிறிஷ்ணகாந்)
சவூதி அரேபியாவிலிருந்து இரண்டரை கோடி ரூபாவுக்கும் அதிக பெறுமதி கொண்ட தங்க ஆபரணங்களை கடத்திவந்த ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் விமான பணிக்குழு உறுப்பினர் ஒருவர் (Cabin Crew Member) கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் நேற்றுக் காலை கைது செய்யப்பட்டுள்ளார்.
சவூதி அரேபியாவின் ஜெத்தா விமான நிலையத்திலிருந்து நேற்று அதிகாலை 4 மணியளவில் கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தை வந்தடைந்த யூ.எல். 282 என்ற ஸ்ரீலங்கன் விமானத்தின் ஊடாக வந்த சந்தேக நபரான 50 வயதுடைய பணிக்குழு உறுப்பினர் இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இச்சந்தேக நபரை விமான நிலையத்தின் வெளியேறும் நுழைவாயிலில் வைத்து சுங்கத்தினர் சோதனைக்கு உட்படுத்திய போது அந்நபர் தனது காலணிகள் மற்றும் இடுப்புப் பட்டியில் மிகவும் சூட்சுமமான முறையில் மறைத்து வைத்திருந்த 5. 3 கிலோ கிராம் தங்க ஆபரணங்கள் கண்டுபிடிக்கப்பட்டதாக சுங்க ஊடகப் பேச்சாளர் சுனில் ஜயரத்ன தெரிவித்துள்ளார்.
கைப்பற்றப்பட்ட மொத்த தங்க ஆபரணங்களின் பெறுமதி 2 கோடியே 60 இலட்சம் என அவர் மேலும் தெரிவித்தார்.
விமான நிலைய சுங்கத்தினரால் நீண்டகாலமாக மேற்கொள்ளப்பட்டு வந்த விசாரணைகளுக்கமைய இந்த விமான பணிக்குழு உறுப்பினர் கைது செய்யப்பட்டதாக சுங்க ஊடகப் பேச்சாளர் சுனில் ஜயரத்ன தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகள் விமான நிலைய சுங்கத்தினரால் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
Post a Comment