Header Ads



இந்தோனேஷியாவில் பிடிபட்ட 28 இலங்கையர்கள், கட்டுநாயக்க விமான நிலையத்தில் கைது

கடல் மார்க்கமாக, இலங்கையில் இருந்து நியூசிலாந்துக்குச் சென்று கொண்டிருந்த வேளை, இந்தோனேஷிய கடற்கரைப் பாதுகாப்பு அதிகாரிகளால் பிடிக்கப்பட்டு, இலங்கைக்கு மீண்டும் திருப்பி அனுப்பி வைக்கப்பட்ட 28 இலங்கையர்களை, கட்டுநாயக்க விமான நிலைய குற்றத்தடுப்புப் பொலிஸார் கைது செய்துள்ளனர்.

மட்டக்களப்பு, திருகோணமலை, யாழ்ப்பாணம், மன்னார் பிரதேசங்களைச் சேர்ந்தவர்களே, இவ்வாறு கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

இவர்கள் 28 பேரும், மட்டக்களப்பில் இருந்து நியூசிலாந்துக்கு, பயணிகள் படகொன்றில் சென்றுகொண்டிருந்த வேளையிலேயே, இந்தோனேஷிய கடற்பரப்பு பாதுகாப்பு அதிகாரிகளால் கைது செய்யப்பட்டு, இலங்கைக்கு மீண்டும் திருப்பி அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்ட நபர்கள், மினுவாங்கொட மாவட்ட நீதிமன்றத்தில் ஆஜர்செய்யப்பட்ட போது, ஒருவருக்கு தலா ஒரு இலட்சம் ரூபாய் வீதம் என்ற அடிப்படையிலான சரீரப்பிணையில் விடுதலை செய்யுமாறு, மினுவாங்கொட நீதவான் நீதிமன்ற நீதவான் சீலனி சத்துரந்தி பெரேரா உத்தரவு பிறப்பித்தார்.

அத்துடன், இவர்களை மீண்டும் 2018ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் 06ஆம் திகதி நீதிமன்றத்தில் ஆஜராகுமாறும் நீதவான் உத்தரவிட்டார்.

No comments

Powered by Blogger.