வெளிநாட்டு வேலை பெற்றுத்தருவதாக கூறி 10 கோடி மோசடி - பிரபல ஆசிரியை கைது
வெளிநாட்டு வேலைவாய்ப்பை பெற்றுத்தருவதாக சுமார் 10 கோடி ரூபா பணத்தைப் பெற்று பாரியளவில் நிதி மோசடியில் ஈடுபட்ட குற்றச் சாட்டில் பிரபல ஆசிரியை ஒருவரை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் விசேட விசாரணைப் பிரிவினர் கைது செய்துள்ளனர்.
கொழும்பிலுள்ள பிரபல மகளிர் கல்லூரியொன்றில் ஜப்பானிய மொழி கற்பிக்கும் ஆசிரியையாக கடமையாற்றிவந்த இப்பெண், மாணவர் வீசாவின் மூலம் மாணவர்களை ஜப்பானுக்கு அனுப்பும் வர்த்தகமொன்றை மேற்கொண்டு வந்துள்ளார் என மேலதிக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
இச்சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,
இப்பெண்ணின் மூலம் ஜப்பானுக்கு அனுப்பப்பட்ட மாணவர்களின் ஆவணங்கள் போலி என்பதனால் ஜப்பானிய அரசாங்கம் அம்மாணவர்களை நிராகரித்திருந்தது. அதன்பின்னர் சந்தேக நபரான பெண் தொழில் பெற்றுத்தருவதாக, தன்னிடம் வரும் ஒவ்வொரு இளைஞர், யுவதிகளிடமும் தலா 7 தொடக்கம் 9 இலட்சம் ரூபா வரை பணத்தைப் பெற்று மோசடி செய்துள்ளார் என தெரியவந்துள்ளது.
இதற்காக சந்தேக நபரான ஆசிரியை கடவத்தை பிரதேசத்தில் ஜப்பானிய மொழி பயிற்சி வகுப்பொன்றை நடத்திவந்துள்ளார்.
இந்நிலையில் பல்வேறு நபர்களை ஏமாற்றி இப்பெண் பணம் பறித்துள்ளதாக வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்துக்கு கிடைத்த முறைப்பாடொன்றுக்கமைய அப்பணியகத்தின் விசேட விசாரணைப்பிரிவினர் கடவத்தை, சூரியபாலுவ பிரதேசத்திலுள்ள அவரது வீட்டை முற்றுகையிட்டுள்ளனர்.
அதன்போது, 80 வெளிநாட்டு கடவுச் சீட்டுகள் மற்றும் ஜப்பானில் தொழில் மேற்கொள் வதற்கான பெருந்தொகையான தொழில் உடன்படிக்கைகள் என்பன கண்டுபிடிக்கப்பட்டன.
அத்துடன், 14 போலி முத்திரைகள் கைப்பற்றப்பட்டதுடன் அவற்றில் வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்துடைய இரு முத்திரைகளும் அடங்கியிருந்ததாகவும் அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.
சந்தேகநபரான பெண்ணை கைது செய்யும் வேளையில் அவரால் ஏமாற்றப்பட்ட அநேகமானோர் அவ்வீட்டில் குழுமியிருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், கைது செய்யப்பட்ட சந்தேகநபர் மஹர நீதிவான்நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்ட வேளையில் அவரை எதிர்வரும் இன்றுவரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிடப்பட்டது.
இலங்கை வரலாற்றிலேயே வேலைவாய்ப்பு பெற்றுத் தருவதாக மேற்கொள்ளப்பட்ட மோசடி களிலேயே இது பாரிய மோசடி என வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தினர் தெரிவிக்கின்றனர்.
(ரெ.கிறிஷ்ணகாந்)
Post a Comment