Header Ads



கொழும்பில் ரோஹின்யர்களுக்கு எதிரான கலவரம் - விசாரணை CID யிடம் ஒப்படைப்பு


கல்கிஸ்சையில் ரோஹிங்யா அகதிகள் வீட்டுக்கு அருகில் நேற்று முன்தினம் ஏற்பட்ட கலவரமான சம்பவம் குறித்து விசாரணை நடத்தும் பொறுப்பு கொழும்பு குற்றத் தடுப்பு பிரிவு பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

இதற்கான உத்தரவை பதில் பொலிஸ் மா அதிபர் சீ.டி. விக்ரமரத்ன பிறப்பித்துள்ளார்.

மேலும், சம்பவம் தொடர்பாக தொகுக்கப்படாத காணொளிகளை தொலைக்காட்சி நிறுவனங்களிடம் இருந்து பெற்றுக்கொள்ள கல்கிஸ்சை நீதவான் நீதிமன்றத்தில் அனுமதியும் பெறப்பட்டுள்ளது என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கல்கிஸ்சையில் ரோஹிங்யா அகதிகள் தங்கியிருந்த வீட்டுக்கு அருகில் சென்று பிக்குமார் உள்ளிட்ட சிலர் எதிர்ப்பில் ஈடுபட்டதுடன் அங்கு பதற்றமான நிலைமை உருவானது. இவர்களில் சிலர் ரோஹிங்யா அகதிகளை தாக்க முயற்சித்தனர்.

காங்கேசன்துறைக்கு அருகில் படகில் சென்றுக்கொண்டிருந்த சுமார் 30 ரோஹிங்யா அகதிகளை கடற்படையினர் கைதுசெய்தனர்.

அகதிகளுக்கான ஐக்கிய நாடுகள் உயர்ஸ்தானிகராலயத்தின் தலையீட்டை அடுத்து அவர்கள் கல்கிஸ்சையில் இரண்டு மாடி வீடொன்றில் தங்க வைக்கப்பட்டிருந்தனர்.

No comments

Powered by Blogger.