Header Ads



'அதிர்வு' க்கு ஒரு அவசர வேண்டுகோள்

-ஏ.எச்.சித்தீக் காரியப்பர்-

வசந்தம் தொலைக்காட்சி (சுயாதீன தொலைக்காட்சி) நிறுவனத்தினருக்கும் அதிர்வு நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர்களுக்குமான எனது அவசர வேண்டுகோள்!

நீங்கள் அதிர்வு நிகழ்ச்சியில் முஸ்லிம் அரசியல்வாதிகளை அழைக்கும் போது உங்கள் கலையகத்தினதும் உங்களதும் பங்குகொள்வோரினதும் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் கட்டாயத்துக்கு உள்ளாக்கப்பட்டுள்ளீர்கள்.
இதன்படி பின்வரும் ஆலோசனைகளை முன்மொழிவுகளாக நான் உங்கள் முன்வைக்கிறேன்.

முன்மொழிவுகள்-1
-----------------------------------
1. முஸ்லிம் அரசியல்வாதிகளை அருகருகே அமர வைக்காதீர்கள்!
(அ) ஒருவரின் கைக்கு எட்டிய தூரத்தில் மற்றவரை அமரச் செய்யக் கூடாது.
2. அவர்கள் முன்னால் உள்ள மேசைகளின் மேல் தளத்தில் கண்ணாடிகள் இல்லை என்பதனை நீங்கள் உறுதி செய்தல் வேண்டும்
3. உங்களதும் அவர்களினதும் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் வகையில், அவர்களுக்கு கண்ணாடி கிளாஸ்களில் நீரை அருந்தக் கொடுக்காதீர்கள். பதிலீடாக மினரல் வோட்டர் கொடுப்பதன் மூலம் சேதங்களை தவிர்த்துக் கொள்வதுடன் அனைவரதும் அனைத்தினதும் பாதுகாப்பையும் உறுதிப்படுத்தலாம்.
4. சுழலக் கூடிய நாற்காலிகளை முஸ்லிம் பிரமுகர்களுக்கு வழங்குவதனைத் தவிர்த்துக் கொள்வதனைக் கட்டாயப்படுத்துங்கள்.
5. விவாதத்தின் போது வாதங்களை முன்வைப்பதற்காக பிரமுகர்கள் கொண்டு வரும் ஆவணங்களின் உண்மைத் தன்மையை உறுதிப்படுத்துங்கள். சாட்சிகள், ஆதாரங்களுடன் உறுதிப்படுத்திய பின்னரே அவற்றினைப் படிப்பதற்கான அனுமதியை வழங்கவும்.
6 அவர்களது சேர்டில் சொருகப்படும் சிறிய மைக்குகளை சற்றுக் கீழாக சொருகி விடுங்கள்.
(அ) அடிக்கடி சிலர் நெஞ்சில் அடித்துக் கொள்வதால் அந்தச் சத்தத்தை உள்வாங்கும் நாங்கள் அசௌகரியங்களை எதிர்கொள்கிறோம்.
7. உங்கள் நிகழ்ச்சியில் கலந்து கொள்ள வரும் முஸ்லிம் அரசியல்வாதிகளில் எவர் தொடர்பிலேனும் உங்களுக்குச் சந்தேகம் ஏற்பட்டால் இரத்தக் கொதிப்பு, சீனி வியாதிகள் தொடர்பில் நீங்கள் அவர்களை வைத்திய பரிசோதனைக்கு உட்படுத்துவது சிறந்தது.
இவ்வாறு செய்வதன் மூலம் அவர்களின் பாதுகாப்பை நீங்கள் உறுதிப்படுத்தும் வகையில் பாரிய பங்களிப்பைச் செய்தவர்களாக போற்றப்படுவீர்கள்.
இது தவிர நிகழ்ச்சியைப் பார்வையிடுவோரான எங்கள் நலன் கருதி நிகழ்ச்சி ஆரம்பமாகும் முன்னர் பின்வரும் அறிவித்தலை நீங்கள் வெளியிடுவதன் மூலம் எமக்கு உதவி புரிபவர்களாக நீங்கள் எம்மால் மதிக்கப்படுவீர்கள்.

முன்மொழிவுகள் -2
------------------------------------
1. சிறுவர்கள், பலவீனமானவர்கள் அதிர்வு நிகழ்ச்சியை பார்வையிடுவதிலிருந்து தவிர்ந்து கொள்ளல்.

2. இந்த நாட்டின் அரசியல், அரசியல் யாப்பு, சட்டவாக்கங்கள் சரியாகத் தெரிந்தவர்கள் இந்த நிகழ்ச்சியை பார்ப்பதன் ஊடாக மன உலைச்சலுக்கு உள்ளாகலாம். எனவே இவ்வாறானோர் நிகழ்ச்சியைப் பார்ப்பதனை தவிர்த்தல் நல்லது. அல்லது பிரமுகர்கள் எதனைக் கூறுகிறார்களோ அதனைச் சரியென ஏற்றுக் கொள்ளும் பக்குவத்தை மனதில் திடப்படுத்திக் கொண்டு நிகழ்ச்சியை பார்வையிடலாம்.

எனவே, என்னால் மேற்சொல்லப்பட்ட விடயங்களை வசந்தம் தொலைக்காட்சி (சுயாதீன தொலைக்காட்சி) நிறுவனத்தினரும் அதிர்வு நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர்களும் கருத்தில் கொண்டு இவற்றைக் கட்டாய சட்டங்களாக்கி அதிர்வு நிகழ்ச்சியை நடத்தலாம்.

No comments

Powered by Blogger.