அமைதியாக முடிவடைந்த ஹஜ் - இளவரசர் நன்றி தெரிவிப்பு
சவுதி அரேபிய மன்னர் சல்மானின் ஆலோசகரும், மக்கா கவர்னரும், பிரதான ஹஜ் கமிட்டியின் தலைவருமான இளவரசர் அமீர் காலித் பைசல் அவர்கள் இவ்வருட அரச மற்றும் நிறுவனங்களின் ஹஜ் செயல்பாடுகள், ஹஜ்ஜாஜிகளுக்கான தொண்டு நடவடிக்கைகள் வெற்றிபெற்றுள்ளதாகவும் அதற்காக காதிமுல் ஹரமைன் மன்னர் சல்மான், பிரதமரும் பாதுகாப்பு அமைச்சருமான முடிக்குரிய இளவரசர் முஹம்மத் பின் சல்மான், மற்றும் உள்நாட்டலுவல்கள் அமைச்சர் இளவரசர் அமீர் அப்துல் அஸீஸ் பின் நாயிப் போன்றோருக்கு நன்றி தெரிவித்தார்.
மினாவில் அமைந்துள்ள தலைமை கட்டிட காரியாலயத்தில் நடைபெற்ற பத்திரிகையாளர் மாநாட்டில் தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர்
"இரண்டு மில்லியனுக்கும் அதிகமானவர்கள் அல்லாஹ்விடம் தமது கைகளை ஏந்தியுள்ள இந்த சந்தர்ப்பத்தில் ஹஜ்ஜாஜிகளுக்கு பணிவிடை செய்ய கிடைத்த சந்தர்ப்பத்தை நன்றியுடன் நினைவு கூர்கிறேன்.
அத்தோடு அனைத்து ஹஜ்ஜாஜிகளுக்கும் மனப்பூர்வமான நன்றிகளை தெரிவிக்கின்றேன். சவுதி அரேபிய அரசாங்கம் உங்களுக்கு தேவையான அனைத்து வசதிகளையும் முடியுமான அளவு செய்து தந்துள்ளது என்று நம்புகிறேன். ஹஜ்ஜை பூரணப்படுத்திக்கொண்டு நாடுகளுக்கு திரும்பிக்கொண்டிருக்கின்ற இந்த சந்தர்ப்பத்தில் அங்கீகரிக்கப்பட்ட ஹஜ்ஜாக இது அமைய வேண்டும் என்றும் நீங்கள் அல்லாஹ்விடம் வேண்டிக்கொண்ட அருளும் மன்னிப்பும் பூரணமாக உங்களுக்கு கிடைக்க வேண்டும் என்றும் எங்களுக்கும் உங்களுக்கும் இறையருள் கிடைக்க வேண்டும் என்றும் அல்லாஹ்வை பிரார்த்திக்கிறேன்." என்றும் தெரிவித்தார்
Post a Comment