Header Ads



ரோஹிங்யா மக்களை பாதுகாக்க, அந்நாட்டு அரசாங்கம் தவறி விட்டது - இராதாகிருஸ்ணன்

மியன்மார் நாட்டில் ரோஹிங்யா மக்களை பாதுகாக்க அந்த நாட்டு அரசாங்கம் தவறி விட்டதாக கல்வி இராஜாங்க அமைச்சரும், மலையக மக்கள் முன்னணியின் தலைவருமான வே.இராதாகிருஸ்ணன் தெரிவித்துள்ளார்.

இந்த விடயம் தொடர்பில் அவர் வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே இவ்வாறு தெரிவித்துள்ளார். அந்த அறிக்கையில் மேலும்,

மியன்மார் நாட்டில் வசிக்கின்ற ரோஹிங்யா மக்களை பாதுகாப்பதற்கு அந்த நாட்டு அரசாங்கம் தவறி விட்டது. இதன் காரணமாக பலருடைய உயிர் காவு கொள்ளப்பட்டு இருக்கிறன.

இலங்கையில் இவ்வாறான 30 வருட கால யுத்தத்தின் போது எமது மக்கள் அனுபவித்த துன்பத்தை நாங்கள் நன்கு அறிவோம்.

எனவே இந்த செயற்பாட்டிற்கு எதிராக எமது மக்களும் எமது நல்லாட்சி அரசாங்கமும் சர்வதேசத்திற்கு அழுத்தம் ஒன்றை கொடுத்து ஐக்கிய நாட்டின் மனித உரிமைகளுக்கான விசேட பிரதிநிதிகளை மியன்மார் நாட்டிற்கு அனுப்பி வைப்பதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மியன்மாரில் கடந்த ஆகஸ்ட் மாதம் 25ஆம் திகதி முதல் இடம்பெற்று வரும் வன்முறைகள் காரணமாக பலர் பலியாகியுள்ளனர். இதுவரையில் சுமார் 90,000 பேர் நாட்டை விட்டு வெளியேறி அண்டை நாடான பங்களாதேசில் தஞ்சம் புகுந்துள்ளனர்.

மியன்மார் நாட்டில் பல தலைமுறைகளாக வாழ்ந்து வருகின்ற ரோஹிங்யா மக்களுக்கு ஏற்பட்டுள்ள இந்த நிலைமையானது மிகவும் கவலையளிக்கின்ற ஒரு செயற்பாடாகும்.

அந்த வலியும், வேதனையும் எங்களுக்கு நன்கு தெரியும். எமது நாட்டில் 30 வருட கால யுத்தத்தில் எமது மலையக மக்கள் உட்பட பலரும் இடம்பெயர்ந்து பல்வேறு துன்பங்களை அனுபவித்து வருகின்றனர்.

தற்பொழுது நல்லாட்சி அரசாங்கத்தில் அது படிப்படியாக குறைந்து வருகின்றது. மியன்மாரில் ரோஹிங்யா மக்கள் அதிகம் வாழும் ராகைன் பிராந்தியத்தில் அந்த நாட்டின் இராணுவத்தினர் வீடுகளுக்கு தீவைத்தும், பலரை கொடூரமான முறையில் கொலை செய்ததை தொடர்ந்து அந்த மக்கள் தமது உயிரை பாதுகாத்து கொள்வதற்கு இடம்பெயர்ந்து வருகின்றார்கள்.

இந்த மக்கள் வாழும் ஒரு கிராமத்தில் 700 ற்கும் அதிகமான வீடுகள் தீக்கிரையாக்கப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

எனவே இந்த மக்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்தவும் குடிபெயர்ந்து சென்றுள்ள மக்களை மீண்டும் அழைத்து வந்து அவர்களை குடியமர்த்தவும் அந்த நாட்டு அரசாங்கம் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.

அதற்கு எமது அரசாங்கம் சர்வதேசத்திற்கு அழுத்தம் கொடுக்க வேண்டும் எனவும் அந்த அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.

No comments

Powered by Blogger.