Header Ads



வித்தியா படுகொலை - விசாரணையில் பிரபாகரனை சுட்டிக்காட்டிய நீதிபதி இளஞ்செழியன்

புங்குடுதீவு மாணவி சிவலோகநாதன் வித்தியா படுகொலை செய்யப்பட்டமை தொடர்பில் வழக்கின் தீர்ப்பு இம்மாதம் 27ஆம் திகதி வழங்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்த வழக்கின் இறுதி சாட்சி விசாரணையின் போது சந்தேகநபரான சுவிஸ் குமாரிடம் சாட்சியம் பெற்றுக்கொள்ளப்பட்டது.

தான் கண்ணாடியை போட்டு வித்தியாவை பார்த்ததாகவும், தான் குற்றத்தை மேற்கொள்ளவில்லை எனவும், சுவிஸ் குமார் நீதிமன்றத்தில் குறிப்பிட்டுள்ளார்.

வித்தியா படுகொலையின் முக்கிய சூத்திரதாரியான சுவிஸ் குமார் சம்பவம் நடைபெற்றபோது அவ்விடத்தில் இருக்கவில்லையென எதிர்தரப்பு சட்டத்தரணி தெரிவித்தார்.

இதற்கு பதிலளித்த நீதிபதி இளஞ்செழியன், குற்றத்தைப் புரிவதற்கு பிரதான சூத்திரதாரி சம்பவ இடத்தில் இருக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை. இலங்கை மத்திய வங்கியின் மீது நடத்தப்பட்ட குண்டுத்தாக்குதலில், தாக்குதலுக்கு பயன்படுத்தப்பட்ட குண்டு மற்றும் தாக்குதல்தாரியை நேரடியாக அனுப்பி வைத்தவர் பிரபாகரன் எனவும் அவர் சம்பவ இடத்தில் இருக்கவில்லை என சுட்டிக்காட்டினார்.

எனினும் தாக்குதல் சம்பவம் தொடர்பான குற்றச்சாட்டிற்காக பிரபாகரனுக்கு 200 வருடங்கள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டதாக நீதிபதி இளஞ்செழியன் குறிப்பிட்டார்.

அதற்கமைய குற்றத்தை திட்டமிட்ட நபர் சம்பவ இடத்தில் இருக்க வேண்டிய அவசியம் இல்லை என நீதிபதி தெரிவித்துள்ளார்.

புங்குடுதீவு மாணவி சிவலோகநாதன் வித்தியா கூட்டுப்பாலியல் வன்புணர்வின் பின் படுகொலை செய்யப்பட்ட வழக்கில் நேற்று எதிரி தரப்பு தொகுப்புரை இடம்பெற்றது.

பிரதிவாதிகள் தரப்பு சட்டத்தரணிகளான மஹிந்த ஜயவர்தன, ஆறுமுகம் ரகுபதி மற்றும் கேதீஸ்வரன் ஆகியோர் நேற்று தமது தொகுப்புரைகளை வழங்கியிருந்தனர்.

சந்தேகநபர்களாக விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள தமது கட்சிக்காரர்களை விடுவிக்குமாறு சட்டத்தரணிகள் குறிப்பிட்டுள்ளனர்.

இந்த கொலை சம்பவத்துடன் பிரதிவாதிகளாக பெயர் குறிப்பிடப்பட்டுள்ளவர்களுக்கு எவ்வித சம்பந்தமும் இல்லை என தெரிவித்த பிரதிவாதிகள் தரப்பு சட்டத்தரணிகள், அவர்கள் மீதான குற்றச்சாட்டுக்கள் பொய்யானவை எனவும் கூறியுள்ளனர்.

கறுப்புக்கண்ணாடி அணிந்து கொண்டு சுவிஸ்குமார் வித்தியாவை பார்த்தார் என யாராலும் கூற முடியாது எனவும், கறுப்புக்கண்ணாடி போட்டிருக்கும் ஒருவர் யாரைப் பார்க்கிறார் என்பது தெரியாது எனவும் பிரதிவாதிகள் தரப்பு சட்டத்தரணி கேதீஸ்வரன் கூறியுள்ளார்.

அதனை உறுதிப்படுத்தும் வகையில், கறுப்புக்கண்ணாடி ஒன்றை அணிந்து மன்றில் சட்டத்தரணி கேதீஸ்வரன் பாவனை செய்து காட்டியுள்ளார்.

இதன் அடிப்படையில், ஏழாவது சாட்சியமாக சாட்சி வழங்கிய இலங்கேஸ்வரனின் சாட்சியங்கள் பொய்யானவை எனவும் பிரதிவாதிகள் தரப்பு சட்டத்தரணிகளின் தொகுப்புரையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

எனவே, பிரதிவாதிகள் மீதான குற்றச்சாட்டுக்கள் உரிய வகையில் நிரூபிக்கப்படவில்லை எனவும் அவர்களை விடுதலை செய்யுமாறும் பிரதிவாதிகள் தரப்பு சட்டத்தரணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதன்போது, நீதிபதி இளஞ்செழியன், சட்டத்தரணி கேதீஸ்வரனை மீண்டும் அந்த கறுப்புக்கண்ணாடியை அணியுமாறும், பார்வையாளர் ஒருவரிடம் சட்டத்தரணி எதனை நோக்கிப் பார்க்கிறார் எனவும் கேள்வி எழுப்பியுள்ளார்.

சட்டத்தரணி நீதிபதிபகளை நோக்குகிறார் என பார்வையாளர் பதில் வழங்கிய போது, ஒருவர் கறுப்பு கண்ணாடி அணிந்து கொண்டு எதை பார்க்கின்றார் என்பதை கூற முடியாது என நீதிபதி இளஞ்செழியன் கூறியுள்ளார்.

எனவே இந்தக் குற்றத்தைப் புரிவதற்கு பிரதான சூத்திரதாரி சம்பவ இடத்தில் இருக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை என நீதிபதி இளஞ்செழியன் தெரிவித்துள்ளார்.

இலங்கை மத்திய வங்கியின் மீது நடத்தப்பட்ட குண்டுத்தாக்குதலில் , தாக்குதலுக்கு பயன்படுத்தப்பட்ட குண்டு மற்றும் தாக்குதல்தாரியை பிரபாகரன் நேரடியாக அனுப்பி வைத்தவர். எனினும், பிரபாகரனுக்கு கொழும்பு தெரியாது. கொழும்பை பார்க்காத பிரபாகரன், சம்பவத்துடன் தொடர்புபட்ட முதலாவது சந்தேகநபர் என்பதால், இலங்கையின் நீதிமன்றத்தால் அவருக்கு 200 வருடங்கள் சிறைத்தண்டனை வழங்கப்பட்டது.

எனவே, சதித்திட்டம் தீட்டிய சூத்திரதாரி சம்பவ இடத்திற்கு நேரடியாக வரவேண்டும் என அவசியம் இல்லை எனவும் நீதிபதி இளஞ்செழியன் சுட்டிக்காட்டியுள்ளார்.

No comments

Powered by Blogger.